Friday, November 24, 2006

சிலை சொல்லும் கதை

குதிரையின் மீது நிர்வானமாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்னிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் ஒரு இளவரசி. தன் நாட்டின் நலனுக்காக இப்படிச் சொய்யவேண்டிய சூழல் அவளுக்கு.

எங்கள் AVC கல்லூரியின் கலையரங்கத்தின் முன் இந்த சிலை முன்பு இருந்தது. ஒத்திகைகளின் இடையிலோ அல்லது தனிமை தேவைப்படும்போதோ, இந்த சிலைக்கு எதிரில் இருந்த மைதானத்தை ஒட்டிய பெஞ்சில் அமர்வது என் வழக்கம். இவளின் கதை உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் ஏனோ இந்த சிலையை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு ஓவிய கண்காட்சிக்காக அந்த சிலையைப் பார்த்து நான் வரைந்த ஓவியம் தான் மேலே இருப்பது.

ரி கதைக்கு வருவோம். முன்னொரு காலத்தில், இவளுடைய நாட்டில் சில ஆண்டுகளாக மழை பொய்த்துப்போய் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. அரசினால் சமாளிக்கவே முடியாத சூழல். ஏதேதோ முயற்சிகளுக்குப் பின், மழை வேண்டி ஒரு யாகம் நடத்துகிறார் மன்னர். அந்த யாகத்தின் ஒரு பகுதியாய், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு கன்னிப் பெண், நிர்வானமாய் குதிரையின் மீதமர்ந்து நாட்டை வலம்வர வேண்டும்!

நாடெங்கும் இந்தச் செய்தி அறிவிக்கப் படுகிறது. இந்த யாகத்திற்கு உதவ முன்வரும் பெண்ணுக்கு அரசின் சார்பில் என்னென்ன வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால் நாட்டிற்காகவோ, பரிசுப் பொருள்களுக்காகவோ யாருமே தங்களின் மானத்தை இழக்க முன்வரவில்லை அந்த நாட்டில்! யாகத்திற்கு குறிக்கப்பட்ட நாள் நெருங்க நெருங்க மன்னர் மிக வேதனைக்குள்ளாகிறார். இறுதியாக, தன் நாட்டிற்காக தானே அந்த யாகத்திற்கு உதவுவதாக இளவரசி முடிவெடுக்கிறாள்!

இளவரசியின் இந்த முடிவும் நாடெங்கும் அறிவிக்கப்படுகிறது. மனம் நெகிழ்ந்த மக்கள், தங்கள் இளவரசியின் மானம் காக்க ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதன் படி, யாகத்தன்று, இளவரசி நிர்வானமாய் குதிரையில் நாட்டை வலம் வரும்போது எல்லா மக்களும் வீட்டுக்குள் அடைந்துகொள்கிறார்கள். ஒருவரென்றால் ஒருவரைக்கூட வெளியில் பார்க்க முடியவில்லை. வீடுகளின் கதவு, ஜன்னல்கள் கூட அடைக்கப்பட்டு கிடக்கின்றன. நாட்டையே காலி செய்துவிட்ட மாதிரி வெறிச்சோடி கிடைக்கிறது எல்லா வீதிகளும்.

இப்படியாக இளவரசி வலம் வர, நாடுமுழுக்க பெருமழை பெய்ய ஆரம்பிக்கிறது என்பதாக அந்தக் கதை முடிகிறது!

பின்குறிப்பு: அந்த இளவரசியின் பெயர் முதற்கொண்ட விபரங்கள் சிலைக்குக் கீழே எழுதப்பட்டிருந்ததாய் நினைவு. இப்போது மறந்துபோய்விட்டது :(

அத்துடன், இந்தச் சிலையை எங்கள் கல்லூரியில் ஏன் வைத்தர்கள் என்பது பற்றியும் தெரியவில்லை!

Thursday, November 23, 2006

தலைவனும் தொண்டனும்

ரசியல் என்றில்லை. எல்லாத் துறையிலுமே தொண்டனைக் கொண்டுதான் தலைவனின் போக்கு அமைகிறது. அல்லது தன் போக்குக்குத் தொல்லைதராத விதத்தில் தொண்டனை வைத்திருக்கத் தெரிந்த தலைவன், தான் போன போக்கில் கவலையின்றிப் போகிறான்.

தலைவன் எது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு பரிசீலனை கூட இல்லாமல், ஏற்பவனே தொண்டன் என்று யார் கற்றுக்கொடுத்தார்கள் எனத்தெரியவில்லை. தொண்டர்கள் இப்படி ஏற்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின் ஈகோவைக் கருதுகிறேன் நான். தன் தலைவனின் அவமானம் தன் அவமானமாகப் போய்விடுகிறது அவனுக்கு. ஒரு தலைவன் செய்யும் எல்லா தவறுகளுக்கும், சக மனிதர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் தொண்டன். அதிலும் அந்த சக மனிதன் எதிர்ப்பக்கத் தலைவனின் தொண்டனாக இருந்துவிட்டால், தன் தலைவனின் தவறுகளுக்கான நியாயங்களையும் கற்பிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது அவனுக்கு - தன் தலைவன் செய்தது தவறென்று தானே உணர்ந்திருந்தாலும் கூட! ஆனால், இதையெல்லாம் நினைத்துப்பார்த்தா ஒரு தலைவனின் செயற்பாடுகள் இருக்கின்றன?!

தான் எது சொன்னாலும்; செய்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் கடைசிவரை உடன்வர ஒரு கூட்டம் இருக்கிறது எனில், உண்மையில் நல்லது செய்யவேண்டும் என்று வருகிற தலைவன் கூட மாறிவிடுவான்!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் தாத்தா(அம்மாவின் அப்பா) தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை விருத்தாசலம் பஞ்சாயத்து யூனியன் ச்சேர்மனாக இருந்தார். தீவிரமான தி.மு.க குடும்பம் எங்களுடையது. பாட்டி வீட்டிற்குப் போனால் ஆங்காங்கே கலைஞர் அவர்கள் படமும், கழக சம்பந்தமான இதழ்களுமாகவே இருக்கும். தாத்தா, கலைஞரின் அருமை பெருமைகளை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார். கலைஞர் அவர்கள் எழுதிய எல்லா புத்தகங்களும் தாத்தாவின் அலமாரியில் உண்டு. ஊரிலிருந்து தாத்தாவுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்ப, இன்லேண்ட் லெட்டரில் கலைஞரின் படம் வரைந்து அனுப்புவேன். இப்படியே கலைஞர் எனக்கும் தலைவராகிப் போனார்.

பள்ளி விடுமுறை நாட்கள் பெரும்பாலும் பாட்டி வீட்டில்தான். நாங்கள் எப்போது வருவோம் என்று ஒரு நண்பர்கள் கூட்டம் எங்களுக்காகக் காத்திருக்கும். அங்கே எங்களுக்கு எதிர் கோஷ்டி ஒன்றும் இருந்தது. அவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்! எப்போதும் எலியும் பூனையுமாகத் திரிவோம் நாங்கள். 'கட் கட் கமர்கட், கருணாநிதிய ஒழிச்சி கட்' என்று கத்திக்கொண்டே அந்த கோஷ்டி ஒருவர் பின்னால் ஒருவர் சட்டையைப் பிடித்தபடி சந்து சந்தாய் இரயில் விடும். அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார் என நினைக்கிறேன். 'எனக்கு ஒரு டவுட்டு... எம்ஜியாரு அவுட்டு' என்று கத்திக்கொண்டு நாங்களும் இரயில் விடுவோம். கலைஞர் எங்களுக்குத் தலைவர் ஆன ஒரே காரணத்தால் எம்.ஜி.ஆர் எதிரியானார்! இரு வண்டியும் எதிர்ப்படும் சின்ன சந்துகளில் கடந்துபோகவும் முடியாமல், பின்வாங்கவும் மனமில்லாமல் கைகலப்பு கூட நிகழ்திருக்கிறது! நங்கள் பின்வாங்கினால் எங்கள் தலைவர் அல்லவா தோற்றுவிடுவார். அதனினும் பெரிய அவமானம் ஏதாவது இருக்கிறதா என்ன?!

எங்கள் இரு கோஷ்டியினருக்குமே கலைஞர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார், எம்.ஜி.ஆர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார் என்று உண்மையாய்த் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் தலைவர்கள் இவர்கள்தான் என முடிவு செய்துவிட்டிருந்தோம். இந்த முடிவு செய்யும் விஷயம்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். நாம் எடுக்கும் முடிவுகளைப் பின்னர் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடிவதில்லை, அல்லது அது அவ்வளவு எளிதில்லை.

'தன் தொண்டர்களைத் தானே திட்டும் ஒரே ஒரு தலைவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்' என்று தந்தை பெரியாரைப் பற்றி என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார். தன் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கோரும் தொண்டர்களிடம் கட்டணம் கேட்பாராம் அவர். கண்மூடித்தனமாக தன்னை ஒரு தலைவனாக அவர்கள் ஏற்பதைக்கூட அவர் விரும்பவில்லை! சுய மரியாதையைத் தன் 'தலைவன்' என்கிற இடத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். பெரியார் சொன்ன கருத்துக்களையே கூட, நான் ஒருமுறை பரிசீலித்த பின்னரே ஏற்றிருக்கிறேன். அவரின் கருத்துக்களில் நான் ஏற்காத சிலவும் உண்டு. ஏற்றுக்கொண்ட கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை இன்றைக்கு யாராவது முன்வைத்தாலும் அவற்றை பரிசீலிக்கிறேன்! உண்மையில் பெரியார் அவர்கள் விரும்பிய சுயமரியாதையும் இதுதான் என நான் நம்புகிறேன்.

ன்றைக்கும், படிக்காத பாமர மக்கள் மட்டும் என்றில்லாமல், நன்கு படித்த; சிந்திக்கத்தெரிந்த பலரிடமும் கூட கண்மூடித்தனமாக ஒரு தலைவனைப் பின்பற்றும் போக்கு இருப்பதுதான் மிகவும் வருந்தச்செய்கிறது. எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து ஜெயலலிதா அவர்களே தன் தலைவி என்று முடிவெடுத்துக்கொண்ட ஒரு நண்பன், 'என்ன இருக்குன்னு விஜயகாந்துக்கு பின்னாடி ஒரு கூட்டம் அலையுது!' என்று ஆச்சர்யப்பட்டான். நீயும் அப்படித்தானடா இருக்கிறாய் என்று சுட்டிக்காட்டியதும் தன் தலைவியின் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்துவிட்டான். அவரிடம் என்னளவில் நான் கண்ட குறைகளைக் குறிப்பிட்டதற்கு, அதற்கான நியாயங்களைத்(!) தேட ஆரம்பித்துவிட்டான். விஜயகாந்த் அவர்களின் தொண்டர்களிடம் கேட்டால் நீ கேட்ட கேள்விகளுக்கான நியாயங்கள்(!) கூட நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னதுடன் அந்த விவாதத்தை முடித்துக்கொண்டேன். வேறென்ன செய்ய, இன்னும் எங்கள் பாட்டி ஊரின் கிராமத்து ரயிலை ஓட்டிக்கொண்டிருக்கிறான் அவன்!

கடைசியாய் ஒரு பஞ்ச்(டயலாக்!). வள்ளுவன் சொன்னதானாலும் சரி, வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி; நீ ஒருமுறை பரிசீலித்து முடிவெடு. அந்த முடிவும் ஒரு முடிவான முடிவில்லை என்பதை உணர்ந்திரு.

தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் தட்டிக்கேட்கிற - முடியாதபட்சத்தில் ஏற்கவாவது மறுக்கிற - தொண்டர்களால் மட்டுமே ஒரு உண்மையான தலைவனைத் தரமுடியும்!

பின்குறிப்பு: உண்மையிலேயே எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படாததால், 'எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படவில்லை' என்பன போன்ற டிஸ்க்ளைமர்களைத் தவிர்க்கிறேன்.

Wednesday, November 22, 2006

கல்லூரி கலாட்டாக்கள்

நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க விடல.

அதுக்கு நேர்மாறா, சென்னை crescent-ல கலை இலக்கியத்துக்கெல்லாம் வேலையே இல்லை. ஆனா, சினிமாவ மிஞ்சற கலாட்டாவெல்லாம் தினமும் பாக்கலாம் எங்க கிளாஸ்ல. சேந்த புதுசுல ஊர் பசங்கல்லாம் ஏதொ புது கிரகத்துல கொண்டுபோய் விட்ட மாதிரி முழிச்சோம். சிட்டி பசங்களோட துணிச்சலும், நுனிநாக்கு பீட்டரும் பாத்து மெரண்டுபோய்க் கெடந்தோம்.

போன வருஷம் BE முடிச்சிட்டு இந்தவருஷம் MCA ஃபஸ்ட் இயருக்கு க்ளாஸ் எடுக்க வந்த மேடம்கள் இவனுங்க கிட்ட பட்ட பாடு இருக்கே... முதல் செமஸ்டர் முடிவுலயே மூணு பேர் போர்க்கொடி தூக்கிட்டாங்க. இனிமே 96-99 batch க்கு கிளாஸ் எடுக்கவே மாட்டோம்ணு. அதேமாதிரி அவங்க அப்புறம் எங்களுக்கு கிளாஸ் எடுக்க வரவே இல்லை. ஆனாலும் எப்பயாச்சும் எக்ஸாம் சூப்பர்வைசரா வந்து மாட்டுவாங்க. ஒரு எக்ஸாம்ல அப்படி மாட்டின ஒரு மேடம் கிட்ட எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எழுந்து 'மேடம் பேப்பர்...' -ன்னான். அவங்க கைல வச்சிருந்த வெள்ளை பேப்பரை நீட்ட, 'அது எங்கிட்டயே இருக்கு மேடம். அதோ அவனோட ஆன்ஸர் ஷீட்லதான் ஃபுல்லா எழுதியிருக்கு... அது தான் வெணும்.' -ன்னான். தலைல அடிச்சிகிட்டே திட்டிகிட்டு போய்ட்டாங்க அவங்க. AVC காலேஜ்ல நெனச்சிகூட பாக்க முடியாத இந்தக் காட்சியை கண்முன்னே பார்த்து அசந்துபோய்ட்டேன். இதுக்குள்ள ஊர் பசங்களும் சிட்டி பசங்களுக்கு சளச்சவங்க இல்லன்னு நிரூபிச்சிட்டோம்(அதர் ஸ்டேட் பொண்ணுங்களோட பீட்டர் விட்டு கடலை போடுவதைத்தவிர!).

நாங்க எல்லாரும் பயப்படுற ஒருத்தர் யாருன்னா, எங்க HOD, முனைவர். பொன்னவைக்கோ அவர்கள் தான். செம ஸ்ரிக்ட். பசங்க முன்னாடியே வாத்தியாருங்கள வாங்கு வாங்குன்னு வாங்கிடுவார்னா பாத்துக்கோங்களேன். ஆனா ரொம்ப நல்ல மனுஷர். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்கல்ல... அப்படி. மிகுந்த தமிழ்ப்பற்றாளர். இப்போ தமிழ் இணையப் பல்கலைக்கத்தின் துணைவேந்தராக இருக்காரு.

அவரையே ஒருவாட்டி கலாய்ச்சிட்டான் எங்க க்ளாஸ் கணேஷ்! அது எங்களுக்கு கடைசி வருஷம். எக்ஸாமுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டு இருக்கோம். கணேஷ் காலேஜ் பக்கமே ரொம்ப நாள் வரல. போதிய வருகைப்பதிவு இல்லாததால அவன் எக்ஸாம் எழுதனும்னா form-ல HOD கையெழுத்து வாங்கணும். அன்னிக்குன்னு பாத்து ஒரு கேம்பஸ் இன்டர்வியூ. MCA பசங்க யாரும் செலக்ட் ஆகல. ஆனா BE பசங்க சிலர் செலக்ட் ஆகிட்டாங்க. அவர் எங்க மேல செம கடுப்புல இருந்தது தெரியாம இவன் அவர் ரூமுக்கு போயிருக்கான் - சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற மாதிரி!

'என்ன...?' ன்னு அவர் கர்ஜிக்க, இவன் ஏதோ சொல்ல வர்ரதுக்குள்ள இவன் final year MCA ன்னு ஞாபகம் வந்திருச்சி அவருக்கு.

'நீ MCA final year தான..?' ன்னு திரும்பவும் ஒரு கர்ஜனை!

எதுக்குடா இப்படி விழுந்து புடுங்கறார்ன்னு யோசிச்சிக்கிட்டே தயங்கித்தயங்கி, 'ஆமா சார்...' ன்னு இவன் சொல்ல,

'எதுக்குடா நீங்கல்லாம் காலேஜ் வரீங்க..?' ன்னு கத்தியிருக்கார்.

இவன் கொஞ்சம் கூட யோசிக்காம, 'ஹிஹி... வர்ல சார். அதான் அப்ளிகேஷன்ல உங்க sign வாங்க வந்திருக்கேன்..!' ன்னு சொல்ல, அவரே சிரிச்சிட்டார்.

ன்னிக்கு இந்த சம்பவமே ஒரு ஃபிளாஷ் பேக் ஆகிட்டாலும், இது நடந்தப்போ கணேஷூக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருந்துது. அவனோட ஸ்கூல் லைஃப் அது!

ஒரு நாள் க்ளாஸ்ல மிஸ் ரெக்காட் நோட்டெலாம் திருத்திகிட்டு இருந்திருக்காங்க. கணேஷோட நோட்டைப் பாத்ததும் அரண்டு போயி,

'டேய் கணேஷ்.. இங்க வா...'-னு கூப்பிட

நம்ம சார் 'எஸ் மிஸ்...' ஆஜர் ஆகிறார்.

'என்னடா இது...?' ரோட்ல காக்கா குதறின எலி மாதிரி இருந்த படத்த காமிச்சு அவங்க கேக்க,

'digestion system of rat மிஸ்!' -னு கூலா இவர் பதில்!

அவங்க டென்ஷன் ஆகி, 'பாத்தா அப்படியா இருக்கு...?' ன்னு முறைக்க,

'அதனாலதான் மிஸ் கீழ எழுதியிருக்கேன்..!' -ன்னு சொல்லியிருக்கார் நம்ம கணேஷ் :)

Tuesday, November 21, 2006

சாதி ஒழிப்பு தேவையா?

ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.

சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தில் குறை இருந்தால் அந்த விஷயத்தை அறவே நீக்குவதுதான் அதற்குத் தீர்வா? சாதியை அழிக்க நாம் எடுத்த முயற்சிகளில் ஒரு சதவிகிதமாவது அதிலிருக்கும் குறைகளை நீக்க முற்பட்டிருந்தால், நல்ல முன்னேற்றம் கண்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

இயல்பாகவே குழுமனப்பாண்மை கொண்டவன் மனிதன். சாதி என்றில்லை. எப்போதும் ஏதாவது ஒரு குழுவை சார்ந்தே அவன் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யத்தவறினால், வகுப்புக்கு வந்ததும் நாம் செய்யும் முதல் வேலை என்ன? நம்மைப்போலவே இன்னும் யாராவது வீட்டுப்படம் செய்யாமலிருக்கிறார்களா எனத் தேடுவதுதானே! அப்படி யாரேனும் இருந்துவிட்டால் நமக்கு ஒருவித தைரியமும் தெம்பும் வருவது உண்மைதானே. குழந்தைப்பருவத்திலிருந்து, எந்த பிரச்சனையிலும் நமது முதல்கட்ட நடவடிக்கை நம்மைப்போல் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டுவதாகத்தானே இருக்கிறது. இந்த உணர்வு வாழ்வின் கடைசிவரை, நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையிலும் வரத்தானே செய்கிறது?!

சாதிகள் தவிர, குடியிருப்போர் நலசங்கம் தொடங்கி தொழிலாளி முதலாளி சங்கங்கள் வரை, வேறெந்த வடிவத்திலும் குழுவாய் இயங்கும்
மனிதர்களை நாம் அங்கீகரிக்கிறோம். இந்தக் குழுக்களிலும் வெட்டு குத்து வரை எல்லா பிரச்சனைகளும் இருக்கத்தானே செய்கின்றன? இதற்கும்
மேல், முதலாலளி தொழிலாளிகளுக்கு இடையில் தீண்டாமை இருந்துகூட நான் பார்த்திருக்கிறேன்! ஒரு தொழிலாளியின் பிரச்சனை சக
தொழிலாளிக்குதான் புரியும் என்று ஒன்றுசேர்வது சரியெனில், ஒரு குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்தவர் தன் பிரச்சனைகளை உணர்ந்த தங்கள்
சாதியினருடன் இணைந்து செயல்படுவதும் சரியே!

எனக்குத் தெரிந்து சாதியினால் நிகழும் மிகக் கேவலமான விஷயம் அவற்றுள் ஏற்றத்தாழ்வு பார்த்து சக மனிதனை இழிவாய் நடத்தும் விஷயம் தான். அதற்கான தீர்வு, கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். தலித் மக்களை வீட்டுக்குள் சேர்க்காத ஊரிலிருந்து வந்த எனக்கு, ஒரு தலித் நபர் உற்ற நண்பனாகவும், அறைத்தோழனாகவும் இருக்க இந்தத் தலைமுறையில் வாய்த்திருக்கிறது. சமூகத்தில் அவர்களின் முன்னேற்றம், சாதியினால் நிகழும் கேவலங்களுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

மேலும், 'சாதி வேண்டாம். சாதியை ஒழிப்போம்' என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சதியினால் பாதிக்கப்படாதவர்களாகவும், அதனால் எதையும் இழக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உள்ளுக்குள் சாதி பார்த்தே சகல காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. என்னிலிருந்தே இதை நான் புரிந்துகொண்டேன்!

சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!

இவையெல்லாவற்றையும் விட என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விஷயம் - தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா? 'அவன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது?' என்று சாதிச்சண்டைகளைச் சாடியவர்கள் கார்கில் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தபோது அதே கேள்வி என்னைக் குடைந்து, 'பாக்கிஸ்தானி உடம்புல மட்டும் பச்சை ரத்தம் ஓடுதா என்ன?' என்று கேட்கவைத்தது. இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?

சுருங்கச் சொல்வதென்றால், சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்களிடம் எந்த சிறப்பும் இல்லை; சாதிய உணர்வுள்ளவர்களிடம் எந்த தாழ்வும் இல்லை என்றே அறிகிறேன்! அதது அவரவர் சூழல் சார்ந்தது.