Monday, August 21, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 6

வலைப்பதிவர் சுற்றுலா - 1 : வீரமணி
வலைப்பதிவர் சுற்றுலா - 2 : ப்ரியன்
வலைப்பதிவர் சுற்றுலா - 3 : பாலபாரதி
வலைப்பதிவர் சுற்றுலா - 4 : மா. சிவகுமார்
வலைப்பதிவர் சுற்றுலா - 5 : சிங். செயகுமார்

டிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன. மகாபலிபுர சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தும் அலுக்காதவை. அதிலும், புதிய நண்பர்களுடனான புதிய பார்வையில் வித்தியாசமாய் இருந்தது.

அந்திமயங்கும் வேளையில் கடற்கரைக் கோயிலைப் பார்க்க விரும்பி, ஐந்து ரதம் பார்த்துவிட்டுப் பின்னர் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ஐந்து ரதம் பகுதியிலும் நல்ல கூட்டம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நிறைய. ஒரு ரதத்தின் உள் நின்றபடி, ஒரு கைடு, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். என்ன புரிந்ததோ தெரியவில்லை, அந்த வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஐந்து ரதம் என்றதும், குப்புசாமி, நம்ம வள்ளுவர் கோட்டம் தேர்மாதிரி சக்கரமெல்லாம் வைத்திருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் போலும். "எதுங்க ரதம்..?" என்று கேட்டுக்கொண்டே வந்தார். நாங்கள் காண்பித்தவற்றை ரதமாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றின் கலையழகை ரசித்தார்.

(பாலா, ஜெய்சங்கர், நான், வீரமணி, சிவகுமார், குப்புசாமி)

அங்கங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நிறைய புகைப்படங்கள் அங்கிருந்த பெரிய யானை சிலை அருகேதான். அந்த சிலையைப் பார்த்ததும் ஆளாளுக்கு துளசி அக்காவையும், பொன்ஸக்காவையும் தன்னிச்சையாய் நினைவு கூர்ந்தார்கள்.

"frame ல இன்னோரு யானை மறைக்குதுப்பா..."

"ஹை.. ஒரு சிலை யானை, ஒரு நிஜ யானை..."

"இந்த யானை பக்கத்துல யாராச்சும் வந்து நில்லுங்களேன்... எல்லாரும் ஒரு யானை பக்கத்துலயே போய் நிக்கறீங்க..?!"

-போட்டோவுக்காக யானை சிலை பக்கத்தில் வந்து நின்ற ஜெய்ஷங்கரைப் பார்த்துதான் இந்த கமென்ட்ஸ்!

காலையில் நடேசன் பார்க்கில் முதல் புகைப்படமெடுக்கும்போதே, 'எடுக்கறதுக்கு முன்னாடி ரெடின்னு சொல்லுங்கப்பா... நாங்க வயித்த உள்ள இழுக்கணும்...' என்று ஜெய்ஷங்கர் சொன்னது பலருக்கும் உபயோகமாக இருந்ததால், அன்று முழுக்க அப்படியே செய்யப்பட்டது. 'ரெடி' என்று சொல்வதற்கு பதிலாக 'வயித்த எக்குங்க...' என்றே சொல்ல ஆரம்பித்திருந்தோம். ஃபோக்கஸ் செய்ய கொஞ்ச நேரம் ஆனாலும் போதும் 'சீக்கிரம்பா... சிலருக்கு மூச்சு நின்னுடும் போலருக்கு...' என்று கிண்டல் வேறு. நல்ல வேளையாக எனக்கும் சிவகுமாருக்கும் இந்தப் பிரச்சனை இல்லை ;)

(கண்ணன், ஜெய்சங்கர், சிங்.செயகுமார், சிவகுமார், குப்புசாமி, நான், பாலா)

ரதங்களின் இடதுபுறம் சற்று மேலேறிச்சென்றால், ஒரு ரம்மியமான புல்வெளி. நன்றாக பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக புல்வெளியில் நடக்கவோ, அமர்ந்துகொள்ளவோ அனுமதிப்பதில்லை. 'அப்புறம் எதற்கு இந்தப் புல்வெளி...?!' என்று மனதில் எழுந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை! வேலிக்கு அருகிலிருந்த மரத்தடியில் நின்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்ட மாதிரி, 'இங்கல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து வரணும்...' என்று இங்கும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.

(நான், ஜெய் மற்றும் புல்வெளி)

வெளியில் வந்ததும், ஐந்து ரத சிற்பங்கள் பார்த்த பிரமிப்பிலும், கடற்கரைக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்திலும்; சிவகுமார் தன் 'பைக் பார்ட்னர்' பாலாவை மறந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். புலம்பிக்கொண்டிருந்த பாலாவை, போனால் போகிறதென்று என் வண்டியில் ட்ரிபில்ஸ் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரத்தில், சிரித்தபடியே 'சாரி.. சாரி...' என்று சொல்லிக்கொண்டு சிவகுமார் திரும்பிவந்தார். 'ஏய்யா... எட்டு பேர் வந்தமே... ஒருத்தன் என்ன ஆனான்னு கூட யோசிக்கமாட்டீங்களா...' என்று ஆரம்பித்த பாலாவின் புலம்பல்களை சிரித்தபடியே மன்னிப்பு கூறி ஏற்றுக்கொண்டார் சிவகுமார்.

கடற்கரைக் கோயில் அனுபவங்களை ஜெய்சங்கர் சொல்கிறார்...

வலைப்பதிவர் சுற்றுலா - 7 : ஜெய்சங்கர்
வலைப்பதிவர் சுற்றுலா - 8 : குப்புசாமி செல்லமுத்து

Saturday, August 05, 2006

என் முதல் நட்பு

யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!

நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில், உறவினர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் நட்புகளையும் காணலாம். நண்பர்களிடம் மட்டுமல்லாமல், என் தாத்தா பாட்டி முதல் சில வருட வயதுகளேயான என் தங்கை குழந்தை வரை, என் எல்லா உறவுகளிடமும் நட்பாகப் பழகுதலே என் இயல்பாகிப்போனது. அதுவே மிகப் பிடித்ததுமாய் இருக்கிறது.

இந்த நட்புணர்வு எப்போது ஆரம்பித்தது?! என் முதல் நட்பு யார்?!!

என் நினைவறிந்து, என் முதல் நட்பு, என்னுடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்த ஷண்முகப்ரியா தான். அதற்கு முன் எதுவும் நினைவில்லை! ஏனோ அவளை எனக்கு மிகப்பிடித்துவிட்டது. வகுப்பில் அவளிடமே அதிகம் பேசிக்கொண்டிருப்பேன்.

எந்த வகுப்பில் என நினைவில்லை. அப்போது காகிதத்தில் பல வித்தைகள் செய்யக் கற்றிருந்தோம். கப்பல், இரட்டைக்கப்பல், கத்திக்கப்பல், ஏரோப்ளேன், காமிரா என்று ஏதேதோ... கப்பல், ஏரோப்ளேன் செய்யக் கற்றுக்கொடுத்த பெரிய வகுப்பு அண்ணன்கள் கத்திக்கப்பல், காமிரா வெல்லாம் செய்யக் கற்றுத்தரமாட்டார்கள். எவ்வளவு கெஞ்சினாலும்! வேண்டுமானால் மறைவாய் எடுத்துப்போய்(காகிதம் நாம் தரவேண்டும்) செய்துதருவார்கள். அப்படி அவர்கள் செய்து கொடுத்தவற்றை, மிக நுட்பமாய் பிரித்துப்பார்த்து பிரித்துப்பார்த்து கற்றுக்கொள்வேம். ஒரு ஸ்டெப் பிரிப்பது... அதை மீண்டும் செய்வது. சரியாய் வந்துவிட்டால் இரண்டு ஸ்டெப் வரை பிரிப்பது. இப்படி... எங்களின் ரஃப் நோட் காகிதங்கள் ஏகத்துக்கும் கிழிபட்டன.

கற்றுக்கொண்டதும் ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமானவர்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். இதில் ஷண்முகப்ரியாவை ஃபோட்டோ எடுக்கவே அதிகம் பேர்! சில நாட்களில் எல்லோராலும் செய்ய முடிந்துவிட்ட காமிராவில் சலிப்பு உண்டாக ஆரம்பித்தது. ஏதாவது வித்தியாசமாய் செய்து ப்ரியாவை அசத்த வேண்டுமென்று ஆசைவந்தது. உண்மையில் அந்த வயதில் அப்படியொரு ஐடியா எனக்குத் தோன்றியது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

ஒரு சின்ன காகிதத் துண்டு கிழித்து, பெரிய விழிகளும் சுருள் முடியுமாய், ஓரளவிற்கு அடையாளப்படுகிறமாதிரி ப்ரியாவின் முகம் வரைந்தேன்(அங்கே ஆரம்பித்தது என் creativity!). என் காகித காமிரா பிரித்து உள்ளே அதை பத்திரப்படுத்தினேன். ப்ரியாவை ஃபோட்டோ எடுக்க அழைத்ததும், பெரிதாய் ஆர்வமில்லாமல் என் அழைப்பிற்காய் நின்றாள். வழக்கம்போல் க்ளிக் செய்துவிட்டு அவள் முன்பே காமிராவை பிரித்து உள்ளேயிருந்த அவள் ஃபோட்டோவை(!) பெருமையாய் எடுத்துக்கொடுத்தேன்! விழிகள் விரிந்த ஆச்சர்யத்துடன், தாங்க இயலாத மகிழ்ச்சி அவள் முகத்தில். அந்த சிரித்த முகம் இன்றும் அழியாத புகைப்படமாய் என் மனதில்!

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, இன்று காகிதத்தில் காமிரா செய்து பார்த்தேன். முதல்முறையிலேயே சரியாக வந்துவிட்டது! காகித காமிராவை மறந்துபோனவர்களுக்காக இங்கே... :) (முழு செயல்முறை வேண்டுவோர் தனிமடல் செய்யவும்!)

அப்புறம் எனது நான்காம் வகுப்பில் அப்பாவுக்கு டிரான்ஸ்பர். வேறு ஊர். வேறு பள்ளி. அதன்பின் ப்ரியாவை பார்க்கவே முடியாமற்போனது. இப்போது எங்கு இருப்பாள் எப்படி இருப்பாள் என எப்போதாவது நினைத்துக்கொள்வேன். யார் கண்டது... 'என் சின்ன வயசுல என் friend என் படத்த வரைஞ்சி பேப்பர் காமிரா உள்ள வச்சி என்ன போட்டோ எடுத்தான்...' என்று இன்னமும் அவள் யாரிடமாவது பெருமை பொங்கச் சொல்லிக்கொண்டிருக்கலாம்! அல்லது சுத்தமாய் மறந்துபோயிருக்கலாம்.!!

உங்களுக்கெல்லாம் உங்கள் முதல் நட்பு நினைவிருக்கிறதா நண்பர்களே..! நேரம் வாய்ப்பின், இங்கே பின்னூட்டமாகவோ அல்லது உங்கள் பதிவில் தனி இடுகையாகவோ பகிர்ந்துகொள்ளுங்கள் :)

நட்புக்கான இந்த நாளில் நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன், கவிஞர் அறிவுமதியின் சில கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தக் கவிதைகள் அனைத்தும் ஆண்-பெண் நட்பு குறித்து எழுதப்பட்டவை. 'நட்புக்காலம்' தொகுதியில் பெரும்பாண்மையான கவிதைகள் எனக்குப் பிடித்தவை மட்டுமல்ல... நான் உணர்ந்தவையும் கூட! அந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...


  • போகிற இடத்தில்
    என்னை விட
    அழகாய் அறிவாய்
    ஒருவன்
    இருந்துவிடுவானோ
    என்கிற பயம்
    நல்லவேளை
    நட்பிற்கு இல்லை

  • கடற்கரையின்
    முகம் தெரியாத இரவில்
    பேசிக்கொண்டிருந்த நம்மை
    நண்பர்களாகவே
    உணரும் பாக்கியம்
    எத்தனை கண்களுக்கு
    வாய்த்திருக்கும்

  • அந்த நீண்ட பயணத்தில்
    என் தோளில் நீயும்
    உன் மடியில் நானும்
    மாறிமாறி
    தூங்கிக்கொண்டுவந்தோம்
    தூங்கு என்று
    மனசு சொன்னதும்
    உடம்பும் தூங்கிவிடுகிற
    சுகம்
    நட்புக்குத்தானே
    வாய்த்திருக்கிறது

  • அடிவானத்தை மீறிய
    உலகின் அழகு என்பது
    பயங்களற்ற
    இரண்டு மிகச்சிறிய
    உள்ளங்களின்
    நட்பில் இருக்கிறது

நன்றி: கவிஞர் அறிவுமதி