Thursday, February 15, 2007

இன்பம் தொலைந்தது எப்போது?

'சாப்டாச்சு'

'இது அருள் மொபைல்'

'ச்சார்ஜ் இல்ல'

'தோசை'

'2'

'மூவி'

'2'

'மாதவன். சுந்தர் c படம்'

'ரீமா சென்'

'ரோகினில'

'கோயம்பேடு'

'ம். ஆரம்பிச்சிடுச்சி'

'பரவால்ல. சொல்லு'

'நீ சாப்டியா'

'சரி'

'சரி'

'GN'

'TC'

'சரி'

'GN'

'அருள் வீட்டுக்கு'

'சரி'

'GN'

ரொம்ப நாட்களுக்கப்புறம் சென்னை வந்திருந்த என் நண்பன் ஆனந்த், தன் காதல் மனைவிக்கு, என் கை பேசியிலிருந்து அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் தான் மேலே நீங்கள் படித்தவை!

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே ஆரம்பித்திருந்தது அவர்களின் காதல். அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் காதல் கடிதங்களை நாங்கள் படிக்க முயற்சித்து, அவனிடம் கேவலமாய்த் திட்டுவாங்கியதுண்டு. எப்படியோ அதிக பிரச்சனைகள் ஏதுமில்லாது திருமணத்தில் முடிந்த(?) காதல் அவர்களுடையது.

சமீபத்தில் ஏதோ வேலையாக சென்னை வந்தவன், தன் வேலைகளை முடித்துக்கொண்டு, என்னைப்பார்க்க வந்திருந்தான். பழங்கதைகள் பேசியபடி ஊர்சுற்றினோம். தொடர்ந்தார்ப்போல் இடையிடையே தன் கை பேசியிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பியவண்ணம் இருந்தான். 'இன்னும் அடங்கலியாடா நீ' என்றதற்கு மெலிதாக சிரித்துக்கொண்டான்.

இரவு சாப்பிட்டு முடித்தபின் ஏதாவது ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்று கிளம்பினோம். அவன் மொபைலில் ச்சார்ஜ் தீர்ந்துவிட, 'உன் மொபைல் கொடு' என்று அதை ஆக்கிரமித்துக்கொண்டான். படம் ஆரம்பித்து சற்று நேரம் கழித்துதான் மீண்டும் அது என் கைக்கு வந்தது.

இடைவேலையில் என் மொபைல் இன்பாக்ஸை நோண்டினேன். கடைசியாய் எனக்கு வந்த ஒரு மெசேஜ் தான் இருந்தது. எல்லாவற்றையும் தெளிவாக அழித்திருக்கிறான் பாவி! நான் தேடி ஏமாந்ததை அறிந்தவனாய்ச் சிரித்தான். எதற்கும் பார்க்கலாமே என்று சென்ட் மெசேஜ் பகுதிக்குச் சென்றால், அங்கு இவன் அனுப்பிய sms எல்லாம் அப்படியே இருந்தது. 'மாட்டினியா?' என்றபடி இப்போது நான் சிரித்தேன். கொஞ்சமும் பதட்டமில்லாமல், 'படிச்சிக்கோயேன். என்ன இப்ப...?' என்று சாதாரணமாய்ச் சொன்னான்! இவனா இப்படிச் சொல்கிறான் என்ற ஆச்சர்யத்துடன் எல்லாவற்றையும் படித்தேன்.

எல்லா மெசேஜிலும் அவன் வெறும் பதில்கள் மட்டுமே சொல்லியிருக்கிறான். அவன் கேட்டிருந்த ஒரே ஒரு கேள்வி 'நீ சாப்டியா' என்பது மட்டும் தான். 'இல்லன்னா அது பெரிய சண்டையாயிடும்' என்றுதான் அதையும் கூட கேட்டிருக்கிறான்! இவன் பதிகளில், எதிர்ப்பக்கத்துக் கேள்விகளை எளிதாய் அறியமுடிந்தது. அத்தனையும் ஏதோ காவல்துறை விசாரணை போன்றவை! கடைசி சில மெசேஜ்களில், விட்டால் போதும் என்கிற மனோபாவத்தையும், அவன் மனைவியே அந்த உரையாடலை முடித்தவண்ணம் இருக்கவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வையும் அறியமுடிந்தது. கேட்டதற்கு ஆமோதித்தான்.

அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நிச்சயமாக திருமணத்திற்குப் பின் என்றான்! உண்மையில் என்ன செய்கிறது திருமணம்? திருமண வாழ்வின் எந்த இடத்தில் காதல் தொலைக்கப்படுகிறது? அல்லது காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சியா? இதன் தொடர்ச்சியாக ஏதேதோ எண்ணங்களும் கேள்விகளும் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன என்னுள்.

னக்குத் தெரிந்தவரை, பொதுவாகப் பெண்கள்தான் இப்படித் துருவித் துருவி கேள்விகள் கேட்கிறார்கள். ஆண்களுக்கு நம் சமூகம் கொடுத்திருக்கும் சுதந்திரம்தான் இதற்குக் காரணமாய்ப் படுகிறது. அவர்களுக்கு இப்படிக் கேள்விகள் கேட்கும் சூழல் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக் கேள்விகள் கேட்டுத்தவிக்கும் நிலை தங்களுக்கு வராத வகையில் பெண்களைப் 'பாதுகாப்பாய்' வைக்கக் கற்றிருக்கிறார்கள் ஆண்கள்! கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் பெற்றுவரும் பெண்களும், எந்த அளவுக்குச் சுதந்திரம் பெறுகிறார்களோ அந்த அளவுக்கு இத்தகைய கேள்விகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

திருமணத்திற்குப்பின் ஆண் பெண்ணின் உடைமையாகவும், பெண் ஆணின் உடைமையாகவும் ஆகிவிடுவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். ஆண் தன் உடைமையைக் காத்துக்கொள்ள குடும்பம், உறவுகள், கற்பு என்று எத்தனையோ இருப்பதால் சற்று நிம்மதியாகவே இருக்கிறான். பெண்களுக்கு அவர்களின் சந்தேகமும், கண்காணிப்பும் தவிர வேறெதுவும் துணை நிற்பதாய்த் தெரியவில்லை!

இவையாவும், ஒரு பார்வையாளனாய் நம் சமூகத்தின் திருமண வாழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பதால் தோன்றிய எண்ணங்கள். மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இன்பம் தொலைந்தது எப்போது என்றுதான் தேடிப்பார்ப்போமே!

எம்பாட்டு எம்பாட்டு...

காலேஜ்ல நடிக்கறதுக்கு, கவிதை படிக்கறதுக்கெல்லாம் கெடச்ச மேடை பாட மட்டும் கெடைக்கவே இல்லை. இது ரொம்ப நாளா ஒரு ஏக்கமாவே இருந்திச்சி. எப்பவாச்சும் டி.வி ல மோகன், முரளி எல்லாம் மேடைல படறத பாத்தா இந்த ஏக்கம் திரும்பவும் அப்பப்ப தலைதூக்கும்.

நம்ம சர்வேசனோட பாட்டுக்குப் பாட்டு அறிவிப்பு பாத்ததும், ஆஹா... நமக்கும் கெடச்சுதுடா ஒரு எடம்னு பூந்து பாடி வெச்சிட்டேன்... நம்ம மொட்ட பாட்டுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு. அத இப்படி கொல பண்ணியிருக்க வேணாம்தான்... ஆனாலும் ஆச யார விட்டுது!

இங்க என் பாட்டு...

ennulle.wav


இனி உங்க பாடு!

Wednesday, January 24, 2007

தமிழினக்காவலர்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்களா?

போக்கிரி திரைப்படத்தில், IPS அதிகாரியான விஜய், தாதாக்களை ஒழிக்க தானே ஒரு தாதாவாக உருவெடுக்கிறார். பணம் கொடுத்தால் யாரைவேண்டுமானாலும் போட்டுத்தள்ளும் ஒரு இமேஜை தனக்கு உருவாக்கிக்கொண்டு, தாதாக்கள் கூட இருந்தே அவர்களுக்குக் குழிபறிக்கும் பாத்திரம் அவருக்கு. அந்த போக்கிரி தாதா கேரக்டருக்கு தேர்தெடுக்கப்பட்டிருக்கும் பெயர் "தமிழ்"! அவரே போலீஸ் அதிகாரியாக வரும்போது அவரின் பெயர் வெறு. தாதா இமேஜ் கேரக்டர் என்றாலே இப்படித்தான் பெயர் வைக்க வேண்டுமா?

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வில்லன்களின் பெயர்கள் நல்ல தமிழ்ப்பெயர்களாக இருந்தாலே கொதித்தெழும் தமிழினக் காவலர்கள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை! ஒருவேளை கமலஹாசன் இப்படிச் செய்தால் மட்டுமே கேட்பார்களோ என்னவோ ?!

Sunday, January 07, 2007

வக்கிரமானவர்கள் ஆண்கள் மட்டுமா?

மூன்று பாலினங்களிலும் இருக்கும் பொதுவான பல விஷயங்களுக்கு ஆணினம் மட்டுமே பொறுப்பேற்கும் நிலை, இன்னமும் நாம் ஆணாதிக்க சமூகத்தில் இருக்கிறோம் என்பதால் கூட இருக்கலாம். அதிலும் குறிப்பாக, பாலியல் வக்கிரங்கள் என்றாலே அது ஆண்களால் நிகழ்த்தப்படுவது என்ற கருத்துதான் பொதுவில் இருக்கிறது.

பொதுவாக ஆண்கள் இத்தகைய பிரச்சனைகளில் ஈடுபட்டால் ஏற்படும் எதிர்வினைகள், இதில் ஈடுபடும் பெண்களுக்கு நேர்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், பெண்கள் நிகழ்த்தும் பாலியல் வக்கிரங்களை எதிர்கொள்ளும் ஆண்கள், அவற்றை(தங்கள் நெருங்கிய ஆண் நண்பர்கள் தவிர்த்து) வெளியில் அதிகம் சொல்வதில்லை என்பதே உண்மை. இவற்றை வெளியில் சொன்னால் தனக்குத்தான் அவமானம் என்றென்னும் ஆணாதிக்க மனோபாவம் உள்ளிட்ட பல முக்கிய காரணங்கள் இதற்கு உண்டு.

பாலியல் வக்கிரங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு வக்காலத்து வாங்குவதற்காக அல்ல இந்தப்பதிவு. ஒப்பிடும்போது சற்று குறைவாக இருந்தாலும், மற்ற பாலினங்களிலும் இவை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை பெரும்பான்மையோர் உணரவில்லை என்பதையே சொல்ல விழைகிறேன். நான் இங்கே குறிப்பிட விரும்பும் சில நிகழ்வுகள் என் வாழ்வில் இடம்பெறாமல் போயிருந்தால், இந்தப் பெரும்பாண்மையானவர்கள் போலத்தான் நானும் நினைத்துக்கொண்டிருந்திருப்பேன்.

ன் நண்பன் ஒருவனின் பிறந்த நாளுக்காக சென்னை, தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். அன்று அங்கு அதிக கூட்டம் கூட இல்லை. ஆனாலும் சன்னிதியில் இருந்து உள்வாசல்வரை பக்தர்கள் வரிசை. நாங்களும் வரிசையில் இணைந்த சற்றைக்கெல்லாம், எனக்குப் பின்னால் யாரோ மிகவும் ஒட்டி உரசி வருவதை உணர்ந்து திரும்பிப்பார்த்தேன். திருமணமான, கனிவான முகம் கொண்ட ஒரு பெண்! முதலில் எனக்கு வேறெப்படியும் நினைக்கக்கூடத் தோன்றவில்லை. ஆனால், மிக விரைவிலேயே அவரின் நோக்கம் எனக்குப் புரிந்துவிட்டது. வரிசையில் சின்னச்சின்ன அடிகளாக எடுத்து நகரும் ஒவ்வொரு நடையிலும் அவரின் கட்டைவிரல் எனது குதிகாலை அழுத்தி அழுத்திச் சொன்ன செய்திகள் எனக்குப் புரியாமல் இல்லை. மேற்கொண்டு தொடர்ந்த அவரின் நடவடிக்கைகள் யாவும், நிச்சயம் அவை தெரியாமல் நிகழ்ந்தவையல்ல என்பதைத்தவிர வேறென்ன சொல்ல?!

இந்நிகழ்வை நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டபோது, அந்தப் பெண்ணின் வக்கிர(!) எண்ணங்களைவிட, ஒர் திருமணமான பெண்ணுக்கு, கோயிலில் வந்து இப்படி நடந்துகொள்ள வேண்டிய நிலை வந்ததே என்ற வருத்தம்தான் மிகுதியாக நிலவியது! மேலும் என் நண்பர்கள் எதிர்கொண்ட இத்தகைய சம்பவங்கள் பலவற்றையும் அன்று அறிந்துகொள்ள முடிந்தது.

ன்னொரு சம்பவம், நான் வேலையில் சேர்ந்த முதல் வருடத்தில் நிகழ்ந்தது. மாலை வீட்டிற்குக் கிளம்பும் சமயத்தில், தான் அவசரமாய் செல்லவேண்டியிருப்பதால் அருகிலிருக்கும் இரயில் நிலையம் வரை எனது வாகனத்தில் அழைத்துச்செல்ல முடியுமா என்று என்னுடன் பணிபுரியும் ஒரு பெண் கேட்டார். நடந்துசென்றால் இருபது நிமிடங்களுக்குமேல் ஆகுமே என்று அழைத்துச்சென்றேன். வழக்கமாக சற்று வேகமாகவே வாகனம் ஓட்டும் நான், அன்று மிக நிதானித்துச் சென்றேன். ஏதாவது தவறுதலாக நடந்துவிட்டாலும் நம்மைத் தவறாக நினைக்கக் கூடுமே என்ற கவனம் அந்தப்பெண்னை இறக்கிவிடும்வரை இருந்துகொண்டேயிருந்தது. அடுத்த நாள் அலுவலகம் சென்றால் என்னைப்பார்த்து பெண்களெல்லாம் ஒரே கிண்டல். என்னத்தைச் சொல்ல... எனக்கு சரியாக ப்ரேக் போடத்தெரியலையாம்! இந்தச் சம்பவமும் எனக்கு நிறைய புரிதல்களைத் தந்தது.

மீபத்தில், எனக்குத் தெரிந்த, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து ஒரு ஆபாச குறுஞ்செய்தி தவறுதலாக எனக்கு அனுப்பப்பட்டுவிட்டது. எனக்குத் தவறுதலாய் வந்துவிட்டாலும், இந்தப்பெண் இப்படிப்பட்ட குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்பவரா என ஒரு நிமிடம் அதிர்ந்து பின், தங்கள் நட்புவட்டத்திற்குள் அவர்களும் அப்படித்தான் எனப் புரிந்துகொண்டேன். அந்தப்பெண் மிகுந்த தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருப்பாரே என்றெண்ணி, "இது எப்படியோ தவறுதலாய் எனக்கு அனுப்பப்பட்டுவிட்ட குறுஞ்செய்தி என்று எனக்குத் தெரியும். இதை இப்படியே மறந்துவிடுங்கள்" என்று பதில் குறுஞ்செய்தி அனுப்பிவைத்தேன்.

குற்றங்கள் வெளிக்கொணரப்படவில்லை எனில் குற்றங்களே நிகழவில்லை என்று பொருளல்ல. பெண்களின் பாலியல் வக்கிரங்களை ஆண்கள் மனம் திறந்து பேச ஆரம்பித்தால் பலர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகக்கூடும். இதனால் பெண்கள் எல்லோரும் வக்கிரமானவர்கள் என்று சொல்லவரவில்லை. பாலியல் குறித்த நமது சமூகத்தின் அபிமானங்கள், ஆணல்லாத பாலினத்தவரையுமே இப்படித்தான் நடந்துகொள்ள வைக்கின்றன என்பதையே உணர்த்த விரும்புகிறேன். இப்பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல், இது பாலினம் சார்ந்த பிரச்சனை அல்ல. மொத்த சமூகம் சார்ந்த பிரச்சனை!