Thursday, February 15, 2007

இன்பம் தொலைந்தது எப்போது?

'சாப்டாச்சு'

'இது அருள் மொபைல்'

'ச்சார்ஜ் இல்ல'

'தோசை'

'2'

'மூவி'

'2'

'மாதவன். சுந்தர் c படம்'

'ரீமா சென்'

'ரோகினில'

'கோயம்பேடு'

'ம். ஆரம்பிச்சிடுச்சி'

'பரவால்ல. சொல்லு'

'நீ சாப்டியா'

'சரி'

'சரி'

'GN'

'TC'

'சரி'

'GN'

'அருள் வீட்டுக்கு'

'சரி'

'GN'

ரொம்ப நாட்களுக்கப்புறம் சென்னை வந்திருந்த என் நண்பன் ஆனந்த், தன் காதல் மனைவிக்கு, என் கை பேசியிலிருந்து அனுப்பியிருந்த குறுஞ்செய்திகள் தான் மேலே நீங்கள் படித்தவை!

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே ஆரம்பித்திருந்தது அவர்களின் காதல். அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் காதல் கடிதங்களை நாங்கள் படிக்க முயற்சித்து, அவனிடம் கேவலமாய்த் திட்டுவாங்கியதுண்டு. எப்படியோ அதிக பிரச்சனைகள் ஏதுமில்லாது திருமணத்தில் முடிந்த(?) காதல் அவர்களுடையது.

சமீபத்தில் ஏதோ வேலையாக சென்னை வந்தவன், தன் வேலைகளை முடித்துக்கொண்டு, என்னைப்பார்க்க வந்திருந்தான். பழங்கதைகள் பேசியபடி ஊர்சுற்றினோம். தொடர்ந்தார்ப்போல் இடையிடையே தன் கை பேசியிலிருந்து குறுஞ்செய்திகள் அனுப்பியவண்ணம் இருந்தான். 'இன்னும் அடங்கலியாடா நீ' என்றதற்கு மெலிதாக சிரித்துக்கொண்டான்.

இரவு சாப்பிட்டு முடித்தபின் ஏதாவது ஒரு திரைப்படத்திற்குப் போகலாம் என்று கிளம்பினோம். அவன் மொபைலில் ச்சார்ஜ் தீர்ந்துவிட, 'உன் மொபைல் கொடு' என்று அதை ஆக்கிரமித்துக்கொண்டான். படம் ஆரம்பித்து சற்று நேரம் கழித்துதான் மீண்டும் அது என் கைக்கு வந்தது.

இடைவேலையில் என் மொபைல் இன்பாக்ஸை நோண்டினேன். கடைசியாய் எனக்கு வந்த ஒரு மெசேஜ் தான் இருந்தது. எல்லாவற்றையும் தெளிவாக அழித்திருக்கிறான் பாவி! நான் தேடி ஏமாந்ததை அறிந்தவனாய்ச் சிரித்தான். எதற்கும் பார்க்கலாமே என்று சென்ட் மெசேஜ் பகுதிக்குச் சென்றால், அங்கு இவன் அனுப்பிய sms எல்லாம் அப்படியே இருந்தது. 'மாட்டினியா?' என்றபடி இப்போது நான் சிரித்தேன். கொஞ்சமும் பதட்டமில்லாமல், 'படிச்சிக்கோயேன். என்ன இப்ப...?' என்று சாதாரணமாய்ச் சொன்னான்! இவனா இப்படிச் சொல்கிறான் என்ற ஆச்சர்யத்துடன் எல்லாவற்றையும் படித்தேன்.

எல்லா மெசேஜிலும் அவன் வெறும் பதில்கள் மட்டுமே சொல்லியிருக்கிறான். அவன் கேட்டிருந்த ஒரே ஒரு கேள்வி 'நீ சாப்டியா' என்பது மட்டும் தான். 'இல்லன்னா அது பெரிய சண்டையாயிடும்' என்றுதான் அதையும் கூட கேட்டிருக்கிறான்! இவன் பதிகளில், எதிர்ப்பக்கத்துக் கேள்விகளை எளிதாய் அறியமுடிந்தது. அத்தனையும் ஏதோ காவல்துறை விசாரணை போன்றவை! கடைசி சில மெசேஜ்களில், விட்டால் போதும் என்கிற மனோபாவத்தையும், அவன் மனைவியே அந்த உரையாடலை முடித்தவண்ணம் இருக்கவேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வையும் அறியமுடிந்தது. கேட்டதற்கு ஆமோதித்தான்.

அடுத்தவர்கள் அறிவதை விரும்பாத அந்தரங்கங்கள் அவர்களின் உரையாடலில் தொலைந்துபோனது எப்போது என்று அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நிச்சயமாக திருமணத்திற்குப் பின் என்றான்! உண்மையில் என்ன செய்கிறது திருமணம்? திருமண வாழ்வின் எந்த இடத்தில் காதல் தொலைக்கப்படுகிறது? அல்லது காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சியா? இதன் தொடர்ச்சியாக ஏதேதோ எண்ணங்களும் கேள்விகளும் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன என்னுள்.

னக்குத் தெரிந்தவரை, பொதுவாகப் பெண்கள்தான் இப்படித் துருவித் துருவி கேள்விகள் கேட்கிறார்கள். ஆண்களுக்கு நம் சமூகம் கொடுத்திருக்கும் சுதந்திரம்தான் இதற்குக் காரணமாய்ப் படுகிறது. அவர்களுக்கு இப்படிக் கேள்விகள் கேட்கும் சூழல் அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்படிக் கேள்விகள் கேட்டுத்தவிக்கும் நிலை தங்களுக்கு வராத வகையில் பெண்களைப் 'பாதுகாப்பாய்' வைக்கக் கற்றிருக்கிறார்கள் ஆண்கள்! கொஞ்சம் கொஞ்சமாக சுதந்திரம் பெற்றுவரும் பெண்களும், எந்த அளவுக்குச் சுதந்திரம் பெறுகிறார்களோ அந்த அளவுக்கு இத்தகைய கேள்விகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

திருமணத்திற்குப்பின் ஆண் பெண்ணின் உடைமையாகவும், பெண் ஆணின் உடைமையாகவும் ஆகிவிடுவதில் ஆரம்பிக்கிறது சிக்கல். ஆண் தன் உடைமையைக் காத்துக்கொள்ள குடும்பம், உறவுகள், கற்பு என்று எத்தனையோ இருப்பதால் சற்று நிம்மதியாகவே இருக்கிறான். பெண்களுக்கு அவர்களின் சந்தேகமும், கண்காணிப்பும் தவிர வேறெதுவும் துணை நிற்பதாய்த் தெரியவில்லை!

இவையாவும், ஒரு பார்வையாளனாய் நம் சமூகத்தின் திருமண வாழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பதால் தோன்றிய எண்ணங்கள். மாற்றுக்கருத்துக்கள் இருப்பின் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இன்பம் தொலைந்தது எப்போது என்றுதான் தேடிப்பார்ப்போமே!

எம்பாட்டு எம்பாட்டு...

காலேஜ்ல நடிக்கறதுக்கு, கவிதை படிக்கறதுக்கெல்லாம் கெடச்ச மேடை பாட மட்டும் கெடைக்கவே இல்லை. இது ரொம்ப நாளா ஒரு ஏக்கமாவே இருந்திச்சி. எப்பவாச்சும் டி.வி ல மோகன், முரளி எல்லாம் மேடைல படறத பாத்தா இந்த ஏக்கம் திரும்பவும் அப்பப்ப தலைதூக்கும்.

நம்ம சர்வேசனோட பாட்டுக்குப் பாட்டு அறிவிப்பு பாத்ததும், ஆஹா... நமக்கும் கெடச்சுதுடா ஒரு எடம்னு பூந்து பாடி வெச்சிட்டேன்... நம்ம மொட்ட பாட்டுல எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு. அத இப்படி கொல பண்ணியிருக்க வேணாம்தான்... ஆனாலும் ஆச யார விட்டுது!

இங்க என் பாட்டு...

ennulle.wav


இனி உங்க பாடு!