Thursday, April 27, 2006

கற்பு?!

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த கவிதை இது...

"ஸ்கூட்டர்களுக்காகவும்
பிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது"


- கவிஞர் ரோகிணி

படித்த நொடியில் ஏதேதோ பாதிப்புகளை ஏற்படுத்திய இக்கவிதை - தங்கர்பச்சான், குஷ்பு என அனைத்து கற்பு சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கான பதில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது! கற்பின் பயன்பாடு எவ்வளவு சுயநலமானது என்பதை இதவிட எளிமையாகவும், வலிமையாகவும் சொல்லமுடியும் எனத்தோன்றவில்லை. முகத்திலறையும் நிஜமும், மெல்லிதாய் இழையோடும் சோகமும் இக்கவிதையின் வெற்றி.

கவிஞர் ரோகிணி யாரெனத்தெரியவில்லை. அவரைப்பற்றியும், அவரின் பிற படைப்புகள் பற்றியும் காணக்கிடைத்தால் மகிழ்ச்சி. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


24 comments:

Bharaniru_balraj said...

இப்படி மனச அலற வக்கிற கவித படிச்சு ரொம்ப நாளாச்சு.

தேடிப்புடிச்சி பதிந்த அருளுக்கு நன்றி.

ப்ரிட்ஜ் , டி வி , பைக், இத்யாதி கேக்குற மகராசாக்களே சாக்கிரத.

அருள் குமார் said...

//எலிமையாகவும், //
எழுத்துப்பிழையை சுட்டிக்காட்டிய குழலிக்கு நன்றி.

வன்னியன் said...

அருமையான கவிதை,

அட, எங்க உங்கட வெற்றுடம்பைக் காணேல?

அருள் குமார் said...

நன்றி வன்னியன்.

ஒரு change-க்கு இப்படி கொஞ நாள் இருக்கலாமேன்னுதான்! :)

கவிதா | Kavitha said...

சோகம் இருக்கிறது....ஆனால்.. விரிவாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அருள் குமார் said...

//விரிவாக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. // - என்ன சொல்ல வ்ருகிறீர்கள் என புரியவில்லை கவிதா!

Radha N said...

அருள்குமார், கவிதா சொல்வது புரியவில்லையா அல்லது புரியாதமாதிரி நடிக்கின்றீர்களா தெரியவில்லை.

ஆனால், மேற்காணும் கவிதையில் எனக்கு உடன்பாடு இல்லை. கலாச்சாரம் பேணிக்காக்கப்படும் நாம் பாரதமானாலும் சரி, மேம்போக்காக உலாவும் மேலைநாட்டு பெண்டீராயினும் சரி, 'எல்லையை விரிவுபடுத்த' விரும்பமாட்டார்கள்.

இந்த கவிதையில் இரண்டு எல்லைகளைச் சொல்லலாம். ஒன்று. ஒழுக்கமுடன் வாழும் எல்லை. ஒழுக்கத்தினை மீறும் எல்லை. ஆனால், இந்த கவிதை, தற்கால சூழலில், இரண்டாவது கருத்தினை பிரதிபலிப்பதாகக் தெரிகின்றது.

பெண்களின் கற்பின் எல்லையைத் தீர்மானிப்பது பெண்கள் மாத்திரம் அல்ல. ஆண்களும் தான். வயது வந்த பெண்டீரைப் பார்த்து பேசநேரும் தருணங்களில், அவர்களின் பாதங்களை மாத்திரமே பார்த்து பேசவேண்டுமாய் புராணநூல்கள் விவரிக்கின்றன. ஆனால் இன்றைய நிலை என்ன?

மேற்காணும் கவிதையில் அனுமதிக்கப்படும் போது என்றுதானே உள்ளதே தவிர பணிக்கப்படும் போது என்று இல்லை. இங்கே அனுமதி என்பது கணவனும் மனைவியும் கலந்தாலோசனை செய்த பிறகே எடுக்கப்பட்ட முடிவாகவும், அது குடும்பபொருளாதார சூழலைமேம்படுத்தானே அன்றே வேறெதுக்காகவும் தோன்றவில்லை.

ஆடவர்கள் 'பிறரை' நாடாதவராக இருந்தாலே..... நிச்சயம் இந்த கவிதை பொய்யாகிப்போகும்!!!

அருள் குமார் said...

நாகு,
கவிதா சொன்னது உண்மையில் எனக்கு புரியவில்லை. நாம் உணர்ந்துகொண்ட விஷயங்களை

பகிர்ந்துகொள்ளும் இடத்தில் நடிக்கவும் அவசியம் இல்லை.

//இந்த கவிதையில் இரண்டு எல்லைகளைச் சொல்லலாம். ஒன்று. ஒழுக்கமுடன் வாழும் எல்லை.

ஒழுக்கத்தினை மீறும் எல்லை. ஆனால், இந்த கவிதை, தற்கால சூழலில், இரண்டாவது கருத்தினை

பிரதிபலிப்பதாகக் தெரிகின்றது. //

மேற்கண்ட வரிகளில் இருந்து, இந்த கவிதையை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் எனக்கருதுகிறேன்.

ஏனெனில் இங்கு எல்லை என சொல்லப்படுவது நீங்கள் குறிப்பிட்ட இரண்டும் இல்லை! பெண்கள் வேலைக்கு

செல்ல அணுமதிக்கப்படுவதால், தங்கள் ஒழுக்கத்தை மீறவும் அணுமதிக்கப்படுகிறார்கள் என நீங்கள்

பொருள்கொண்டால் அது இக்கவிதையின் தவறல்ல.

இக்கவிதை சொல்ல விழைவதாவது:
ஆண்டாண்டு காலமாக ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்த கையண்ட மிக சக்திவாய்ந்த ஆயுதம் 'கற்பு'.

இப்படி இருந்தால்தான் நீ ஒழுக்கமுள்ளவள் என்ற வரையறைகளின் தொகுப்பே கற்பு. ஒரு காலத்தில் பிற

ஆடவருடன் பேசுவதே ஒரு பெண்ணின் கற்புக்கு கலங்கம் விளைவிக்கும் செயலாக கருதப்பட்டிருக்கலாம். பிற

ஆடவர்களை எத்தேச்சையாக தொட நேர்ந்தால் அது அவள் கற்புக்கு ஏற்பட்ட இழுக்கு என

கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். அப்போது கற்பின் எல்லை மிக பெரியது. ஆனால் உண்மையில் அன்றும் சரி

இன்றும் சரி, ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசுவதையோ, தொடுவதையோ அவர்காளின் ஒழுக்கத்தினை

குறைக்கும் செயல் அல்ல. இருந்தபோதிலும், ஆண் அவளை அப்படி கட்டுப்படுத்தி, மேற்கண்ட விஷயங்களை

அவளின் ஒழுக்கத்துடன் இணைத்து வைத்திருந்தான். ஆனால், தற்போதைய பொருளாதார சூழலில், அதே ஆண்

பேசுதலையும், தொடுதலையும் கற்பின் எல்லையிலிருந்து நீக்கிவிடுகிறான். இது சுயநலமன்றி வேறென்ன?

இக்கவிதையில் எல்லை என சொல்லப்பட்டது பெண்களின் ஒழுக்கத்தின் எல்லை அல்ல. ஆண் தன்

வசதிக்காக, பெண்களை கட்டுப்படுத்த ஏற்படுத்திய கற்பின் வரையறை எல்லைகள்! சுருக்கமாக - "தன்

வசதிக்காக கற்பின் எல்லைகளை மாற்றிக்கொள்கிறான் ஆண்" என்று சொல்கிறது இக்கவிதை. இதில் நீங்கள்

எங்கே உடன்பட மறுக்கிறீர்கள்?

//ஆடவர்கள் 'பிறரை' நாடாதவராக இருந்தாலே..... நிச்சயம் இந்த கவிதை பொய்யாகிப்போகும்!!! // இதற்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம் என உண்மையில் புரியவில்லை நாகு. நான் தவறாக புரிந்துகொண்டிருப்பின் தயவுசெய்து விளக்கம் தாருங்கள். நன்றி.

நட்புடன்,
அருள்.

அருள் குமார் said...

இந்த கவிதையில், "எங்கள் கற்பின் எல்லை விரிவாக்கப்படுகிறது" என்னும் வரி, 'பெண்கள் வேலைக்கு செல்வதை சாக்காக கொண்டு தங்கள் கற்பின் எல்லையை விரிவுபடுத்திக்கொள்கிறார்கள்' என சிலரால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. உண்மையில், கவிஞர் சொல்ல முற்படுவது என்னவெனில் - பெண்களை அடிமைப்படித்த கற்பினை வரையறுத்த ஆண்கள், இபோது தங்கள் வசதிக்காக அதன் எல்லைகளை விரிவாக்குகிறார்கள் என்பதே!

கவிதா | Kavitha said...

அருள், நான் தவறாக பொருள் கொண்டேன்..உங்களின் விளக்கம் சரி ஆமோதிக்கிறேன்.. நன்றி

Radha N said...

'þஇக்கவிதையில் எல்லை என சொல்லப்பட்டது பெண்களின் ஒழுக்கத்தின் எல்லை அல்ல. þ'
கற்பு என்பதே, ஒழுக்கத்தின் சாரங்கள் அடங்கியது தா னே... ஒழுக்கம் என்பது சமூகத்தின் செயல்பா ட்டிலுள்ள சில கூறுகள்.
ஏதோ ஆண்கள், பெண்களின் மீது திணித்ததுபோல் சொல்கி ன்றீர்களே! கட்டுப்பாடுகள் என்பது சமூகத்தின் போக்கினை ஒரு கட்டுக்குள் வைக்கத்தானே அன்றி வேறில்லை!
கற்பு என்ற ஒன்று பெண்களை அடக்கியாள வைக்கப்பட்ட சமூகக்கூறு அல்ல. அவர்களை பாதுகாக்க வைக்கப்பட்ட ஆயுதம்! மரியாதை. விளக்கு காற்றில் அணைந்து விடாமல் இருக்கத்தான் கண்ணாடி சிமிழ் வைக்கப்பட்டிருக்கும். விளக்கின் ஒளியைக்காக்கும் கண்ணாடியைப் போன்றது தான் அது.
கண்ணாடியில் கல்பட்டாலும், கல்லில் கண்ணாடிப்பட்டாலும் உடைவதென்னவோ கண்ணாடி தான்.... புரிந்திருக்கும் என்று நி னைக்கின்றேன்.
//* ஆனால், தற்போதைய பொருளாதார சூழலில், அதே ஆண்

பேசுதலையும், தொடுதலையும் கற்பின் எல்லையிலிருந்து நீக்கிவிடுகிறான்.
*//
இன்றைய காலகட்டத்தில்கூட எந்த ஒரு கணவனும் / மனைவியும், அலுவலகத்தில் அடுத்த பாலினத்தினரை தொ ட்டுப்பேச ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார்கள்.

*// //ஆடவர்கள் 'பிறரை' நாடாதவராக இருந்தாலே..... நிச்சயம் இந்த கவிதை பொய்யாகிப்போகும்!!! // இதற்கும் இந்த கவிதைக்கும் என்ன சம்பந்தம் என உண்மையில் புரியவில்லை
//*
உங்களின் பொருள்படி பார்த்தாலும் கூட "...தொடுதலையும் கற்பின் எல்லையிலிருந்து நீக்கிவிடுகின்றான்" (கவிதையின் படி ...விரிவாக்கப்படுகிறது, அதாவது விரிவாக்கம் முடிந்துவிடவி ல்லை...இன்னும் தொடர்கிறது அல்லது தொடரப்படலாம்.. சரிதானே) அதாவது ஆண், இன்னும் எந்த ஒழுக்கக்கூறுகளை எல்லாமோ நீக்க வாய்ப்புக்கள் இருக்கிறது தானே!
அப்படிப்பட்ட சூழலில் ஒரு ஆண், பிறரை (பிறன்மனை) நா டாமலிக்க வேண்டும் என்ற ஆண்களுக்கான சமுக ஒழுக்கக்கூற்றினை நினைவு படுத்த முயன்றேன் அவ்வளவே!!!

அருள் குமார் said...

நாகு,
//ஏதோ ஆண்கள், பெண்களின் மீது திணித்ததுபோல் சொல்கி ன்றீர்களே! //
இதில் சந்தேகமென்ன?

//கற்பு என்ற ஒன்று பெண்களை அடக்கியாள வைக்கப்பட்ட சமூகக்கூறு அல்ல.//

கற்பு பெண்களை அடக்கியாள வைக்கப்பட்ட சமூகக்கூறு தான். இல்லையெனில் அது பொதுவாக இரு பாலருக்கும் அல்லவா இருந்திருக்க கூடும்?!

//அவர்களை பாதுகாக்க வைக்கப்பட்ட ஆயுதம்! மரியாதை.// - இப்படி சொல்லி சொல்லித்தானே அவர்களை ஏமாற்றி வந்திருக்கிறோம் இவ்வளவு நாளும்.

//விளக்கின் ஒளியைக்காக்கும் கண்ணாடியைப் போன்றது தான் அது.
கண்ணாடியில் கல்பட்டாலும், கல்லில் கண்ணாடிப்பட்டாலும் உடைவதென்னவோ கண்ணாடி தான்// என்னைப்பொருத்தவரை பெண்களின் பாதுகாப்பிற்கும் கற்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால் அவளின் கற்பு பரிபோனதாய் நான் சொல்லமட்டேன்.

//இன்றைய காலகட்டத்தில்கூட எந்த ஒரு கணவனும் / மனைவியும், அலுவலகத்தில் அடுத்த பாலினத்தினரை தொ ட்டுப்பேச ஒருக்காலும் அனுமதிக்கமாட்டார்கள். //
எல்லா அலுவலகங்களிலும் இருபாலினரும் சகஜமாக கைகுளுக்கிக்கொள்வது நான் சொன்ன 'தொடுதல்' களுக்கு ஒரு எடுத்துக்காட்டு. வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால், பெண்களை சமயலறையிலிருந்து எட்டிப்பார்க்கக்கூட அனுமதிக்காத பண்பாடு(!) உடையவர்கள்தானே நாம்? இன்று மட்டும் என்னவாயிற்று?!

//...இன்னும் தொடர்கிறது அல்லது தொடரப்படலாம்.. சரிதானே// -மிகச்சரி. அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை!

உங்களின் கருத்துக்களுடன் நான் உடன்பட மறுத்தாலும் அவற்றை நீங்கள் வெளிப்படுத்திய விதத்திற்கு நன்றி நாகு.

நட்புடன்,
அருள்.

கவிதா | Kavitha said...

சாதரணமாக தொடுவது, கை குலுக்கி கொள்வதை எல்லாம் ஏன் இப்படி இருவரும் விவாதித்து பெரிதாக்குகிறீர்கள். கற்பு என்பது ஆண், பெண் இருபாலராருக்கும் பொருந்தும்.. அதுவும் கூட நம் கலாசாரத்திற்கு மட்டுமே பொருந்தும். அது நமக்கு நல்லதே என்றாலும் எய்ட்ஸ் என்ற வியாதி அதிகம் பரவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை நாகு புரிந்து கொள்ள வேண்டும். கற்பு என்றால் என்ன என்பதை அறியாத நாடுகள் நிஜமாகவே நலமுடன் உள்ளன. ஆனால் அதை நான் சரி என்றும் சொல்ல விரும்பவில்லை..அதில் உள்ள பல்வேறு குறைகளை நான் அறிவேன். சந்தோஷத்திற்க்காக குடும்பத்தையும், அன்பையும் அரவணைப்பயும் தொலைத்தவர்கள். குடும்ப வட்டத்தில் ஒரு பெண் பூவை போன்றும், வெளியில் நெருப்பாகவும் இருப்பதே அவளுக்கு நல்லது..அதில் நாகுவின் கருத்துக்கு ஒத்து போகிறேன்.

அருள் குமார் said...

sorry கவிதா!
மீண்டும் மீண்டும் இக்கவிதைக்கு சம்பந்தமில்லாத விஷயங்களையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

//குடும்ப வட்டத்தில் ஒரு பெண் பூவை போன்றும், வெளியில் நெருப்பாகவும் இருப்பதே அவளுக்கு

நல்லது..அதில் நாகுவின் கருத்துக்கு ஒத்து போகிறேன். // ஒரு பெண் எப்படி இருப்பது நல்லது

என்பதைப்பற்றியெல்லாம் இங்கு சொல்லப்படவில்லை. ஆனால் நீங்கள் இருவரும் அதையேதான்

சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

நான் சொல்லவேண்டியதையெல்லாம் மேலே சொல்லிவிட்டேன். இனி இது பற்றி விவாதிக்க ஒன்றுமில்லை. நன்றி.

Gayathri Chandrashekar said...

Hi Arul Kumar,
Padmapriyavin valai padhivin vazhiyaaga thangal valaikku vandhen.Nalla padhivugal!

nalla kavidhai varigal.adharkku thangal kooriya porul arumai.enakku ingu bharathiyin varigalai ezhudha thonriyadhu.."Achchamum naanamum naaigatku vendumaam.nyaana nallaram, veerasudhandhiram penum narkudi pennin iyalbaam"..
Indru velaikku selvadhaal eththanai per sudhandhiramaai irukkiraargal? padmapriyavin kadayil varum pennai pol eththanai pero..unmai kasappaagaththaan irukkiradhu..

அருள் குமார் said...

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி காயத்ரி.

பொன்ஸ்~~Poorna said...

முன்னேயே படித்திருக்கிறேன்.. கவிதை, நல்ல கவிதை.

ரோகிணி ஒரு professional writer இல்லை என்று நினைக்கிறேன்.. சரியாகத் தெரியவில்லை

அருள் குமார் said...

ஆமாம் பொன்ஸ், நீங்கள் சொல்வதுபோல் ரோகினி ஒரு professional writer இல்லை என்றுதான் நானும் அறிகிறேன். அவர் எழுதிய மற்ற படைப்புகள் படிக்கக் கிடைத்தால் நன்றாய் இருக்கும். நானும் நிரைய பேரிடம் கேட்டுவிட்டேன். யாருக்குமே தெரியவில்லை :(

ப்ரியன் said...

இந்த கவிதையை அன்பு அவர்கள் அன்புடன் குழுமத்தில் இட்டார் அதற்கு பதில் இட்ட ஜெயபாரதன் அண்ணா இப்படி சொல்கிறார்

"நண்பர்களே!


கவிஞர் ரோகிணி, "தேன்முட்கள்" என்னும் தமிழ்க் கவிதை நூல் எழுதிய கவிக்குயில். அந்நூல் 1980 ஆண்டுகளில் பரிசு பெற்றது. எனது நண்பர் அவர். நான் கனடா புலம்பெயர்ந்த பிறகு அவருடன் தொடர்பில்லை.

தமிழும், மலையாளமும் நன்கு அறிந்த சிறந்த தமிழ்க் கவிஞர்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்"

அருள் குமார் said...

மிக்க நன்றி ப்ரியன். பல நாட்க்களாய் தேடிக்கொண்டிருந்த தகவாலை கொடுத்திருக்கிறீர்கள்.

ஜெயபாரதன் அவர்களை தொடர்புகொண்டு 'தேன்முட்கள்' எந்த பதிப்பகத்தில் வெளிவந்தது, எங்கு கிடைக்கும் போன்ற தகவல்கல் தர இயலுமா நண்பரே.

நன்றியுடன்,
அருள்.

ப்ரியன் said...

கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அருள்

அருள் குமார் said...

நன்றி ப்ரியன் :)

ப்ரியன் said...

அருள்,

ஜெயபாரதன் அண்ணா அவர்களுக்கு எந்த பதிப்பகம் என நினைவில்லை என்கிறார்...ஆனால் சென்னை புத்தக நிலையங்களில் கண்டிப்பாக கிடைக்கக்கூடம் என்கிறார்.முடிந்தால் சென்னை புத்தக நிலையங்களில் விசாரித்துச் சொல்கிறேன்.

நன்றி.

அருள் குமார் said...

மிக்க நன்றி ப்ரியன். நானும் சென்னை புத்தக நிலையங்களில் விசாரிக்கிறேன்.