Tuesday, November 21, 2006

சாதி ஒழிப்பு தேவையா?

ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.

சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தில் குறை இருந்தால் அந்த விஷயத்தை அறவே நீக்குவதுதான் அதற்குத் தீர்வா? சாதியை அழிக்க நாம் எடுத்த முயற்சிகளில் ஒரு சதவிகிதமாவது அதிலிருக்கும் குறைகளை நீக்க முற்பட்டிருந்தால், நல்ல முன்னேற்றம் கண்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

இயல்பாகவே குழுமனப்பாண்மை கொண்டவன் மனிதன். சாதி என்றில்லை. எப்போதும் ஏதாவது ஒரு குழுவை சார்ந்தே அவன் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யத்தவறினால், வகுப்புக்கு வந்ததும் நாம் செய்யும் முதல் வேலை என்ன? நம்மைப்போலவே இன்னும் யாராவது வீட்டுப்படம் செய்யாமலிருக்கிறார்களா எனத் தேடுவதுதானே! அப்படி யாரேனும் இருந்துவிட்டால் நமக்கு ஒருவித தைரியமும் தெம்பும் வருவது உண்மைதானே. குழந்தைப்பருவத்திலிருந்து, எந்த பிரச்சனையிலும் நமது முதல்கட்ட நடவடிக்கை நம்மைப்போல் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டுவதாகத்தானே இருக்கிறது. இந்த உணர்வு வாழ்வின் கடைசிவரை, நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையிலும் வரத்தானே செய்கிறது?!

சாதிகள் தவிர, குடியிருப்போர் நலசங்கம் தொடங்கி தொழிலாளி முதலாளி சங்கங்கள் வரை, வேறெந்த வடிவத்திலும் குழுவாய் இயங்கும்
மனிதர்களை நாம் அங்கீகரிக்கிறோம். இந்தக் குழுக்களிலும் வெட்டு குத்து வரை எல்லா பிரச்சனைகளும் இருக்கத்தானே செய்கின்றன? இதற்கும்
மேல், முதலாலளி தொழிலாளிகளுக்கு இடையில் தீண்டாமை இருந்துகூட நான் பார்த்திருக்கிறேன்! ஒரு தொழிலாளியின் பிரச்சனை சக
தொழிலாளிக்குதான் புரியும் என்று ஒன்றுசேர்வது சரியெனில், ஒரு குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்தவர் தன் பிரச்சனைகளை உணர்ந்த தங்கள்
சாதியினருடன் இணைந்து செயல்படுவதும் சரியே!

எனக்குத் தெரிந்து சாதியினால் நிகழும் மிகக் கேவலமான விஷயம் அவற்றுள் ஏற்றத்தாழ்வு பார்த்து சக மனிதனை இழிவாய் நடத்தும் விஷயம் தான். அதற்கான தீர்வு, கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். தலித் மக்களை வீட்டுக்குள் சேர்க்காத ஊரிலிருந்து வந்த எனக்கு, ஒரு தலித் நபர் உற்ற நண்பனாகவும், அறைத்தோழனாகவும் இருக்க இந்தத் தலைமுறையில் வாய்த்திருக்கிறது. சமூகத்தில் அவர்களின் முன்னேற்றம், சாதியினால் நிகழும் கேவலங்களுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

மேலும், 'சாதி வேண்டாம். சாதியை ஒழிப்போம்' என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சதியினால் பாதிக்கப்படாதவர்களாகவும், அதனால் எதையும் இழக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உள்ளுக்குள் சாதி பார்த்தே சகல காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. என்னிலிருந்தே இதை நான் புரிந்துகொண்டேன்!

சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!

இவையெல்லாவற்றையும் விட என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விஷயம் - தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா? 'அவன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது?' என்று சாதிச்சண்டைகளைச் சாடியவர்கள் கார்கில் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தபோது அதே கேள்வி என்னைக் குடைந்து, 'பாக்கிஸ்தானி உடம்புல மட்டும் பச்சை ரத்தம் ஓடுதா என்ன?' என்று கேட்கவைத்தது. இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?

சுருங்கச் சொல்வதென்றால், சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்களிடம் எந்த சிறப்பும் இல்லை; சாதிய உணர்வுள்ளவர்களிடம் எந்த தாழ்வும் இல்லை என்றே அறிகிறேன்! அதது அவரவர் சூழல் சார்ந்தது.

59 comments:

சிறில் அலெக்ஸ் said...

குழுக்களாய் மனிதன் செயல்பட பல தளங்கள் இருக்கும்போது பழமையான, பல சமூக அவலங்களுக்கு மூலமான சாதியத்தை ஒழிக்கத்தான் வேண்டும் என நினைக்கிறேன்.

- யெஸ்.பாலபாரதி said...

//கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான்.//

ஆமென்!

உயர் சாதியில் பிறந்து, கல்வி+பெருளாதாரத்தில் உயர்ந்த இடத்திலேயே இருந்து, பாதுகாப்பான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருபவர்கள் தான் கொஞ்சம், கொஞ்சமாய் மேலேறி வரும் மற்ற சாதிக்காரனைக் காண சகிக்காமல் இப்படி பேசிவருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட/ பாதித்து வரும் மக்கள் ஒரு போதும் சாதி வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

நாமக்கல் சிபி said...

அருள்,
மிகப்பெரிய கேள்வியுடன் வந்திருக்கிறீர்கள்.

இப்போதைக்கு ஒரு உள்ளேன் ஐயா.

இதுபற்றிய பின்னூட்டத்துடன் அல்லது பதிவுடன் பிறகு நிதானமாக வருகிறேன்.

கோவி.கண்ணன் [GK] said...

தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களுக்கு
பொருளாதாரா முன்னேற்றம், திறமை இருந்தால் மட்டும் சாதி பார்க்கப் படாதா ? யார் சொன்னது ?

இன்னும் இளையராஜாவை கீழ்சாதிக்காரராக பார்க்கும் கீழ்தர மனப்பாண்மை நம்மவர்களிடம் இருக்கிறது.

சீனர்களுக்கும் குறிப்பாக மங்கோலிய இனத்திற்குள் சாதி பாகுபாடு இல்லை, இனப்பாகுபாடு உண்டு. அவர்கள் நம்மைக் காட்டிலும் உயர்ந்து சென்று கொண்டே இருக்கிறார்கள்.

சலூன் கடை வைத்திருப்பவன் தாழ்ந்தவனாம், அதையே ஏசி செய்து ப்யூட்டி பார்லராக என்ற பெயரில் நடத்துபவர்கள் உயர்ந்தவர்களாம் ?

பினம் சுடுபவன் தாழ்ந்தவனாம், அதே பினம் மோட்சம் செல்வதற்கு வழிகாட்டுபவன் உயர்ந்தவனாம் !

குழலி / Kuzhali said...

//கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
//
தற்போதைய சூழல் இதை உண்மை என்று சொல்லாது, உனக்கு நம் நண்பன் ஒருவனை நினைவிருக்கலாம், அவன் தந்தை மாவட்ட அளவிலான அரசு செயற் பொறியாளர், அவன் பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களின் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சாதி தெரிந்தவுடன் அவர்களின் வீட்டுக்கு வருவதையும் அவர்களோடு பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்கள், இதை அவன் என்னிடம் சொன்னபோது அதை என் நாட்குறிப்பேட்டிலும் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன்(தலித் தொடர்பான என் முதல் எழுத்து பதிவு அது), முடிந்தால் அந்த நாட்குறிப்பேடுகள் கிடைத்தால் எடுத்து போடுகிறேன், உன் தந்தையையும் என் தந்தையையும் விட பெரிய படிப்பு, அதிக பணம், விசாலமான வீடு வாகனம் என்றிருந்த அவர்களுக்கு தான் அப்படியான ஒரு நிலை.

மீதியை இரவு பின்னூட்டமாக போடுகின்றேன்...

குழலி / Kuzhali said...

பதிவு தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது....

அருள் சாடியிருப்பது புனிதபிம்ப சாதியொழிப்பு என்று பேசுபவர்களை என்று கருதுகின்றேன், அதாவது சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அதே சாதியை பயன்படுத்தி எதிர்ப்பதை சாதியொழிப்பு என்ற பெயரில் ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுதலை மறுதலிப்பவர்களை குறித்தான பதிவு என்பதை கீழ்கண்டவைகள் கருதவைக்கின்றன.

//சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!
//

//இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?
//

Unknown said...

சாதி ஒழிப்புத் தேவையா என்றால்..ஆமாம் தேவைதான்.

அது யாருக்குத் தேவை /யாருக்கு தேவை இல்லை என்பதுதான் பிரச்சனை.

சனாதனதர்மம் எப்போதும் (இப்போதும்) இருக்க வேண்டும் என்று சொன்னவர்கள் உண்டு.தேவதாசி முறை தொடரவேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு.

//சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்களிடம் எந்த சிறப்பும் இல்லை//

தவறு.

சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்கள் அனைவரையும் மனிதராக மட்டுமே பார்ப்பார்கள். இது உங்கள் பார்வையில் சிறப்பு இல்லை. எனது பார்வையில் சிறந்தது.

//சாதிய உணர்வுள்ளவர்களிடம் எந்த தாழ்வும் இல்லை என்றே அறிகிறேன்//

தவறு.

முதலில் எந்த சாதிய உணர்வு உள்ளவர்கள் என்று சொல்ல வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்ட காரணத்தால் மனதில் மருகிக் கொண்டு துயரங்களை அனுபவித்துக் கொண்டு வாழும் மக்கள் இன்னும் உள்ள நாடு இது.

அதே வேறு ஒரு சாதியில் பிறந்த காரணத்தால் தன்னைவிட மற்றவன் கேவலம் என்று எண்ணும் மக்கள் இன்னும் உள்ள நாடு இது.

மனிதன் கூடும் இடங்களில் எல்லாம் குழு/கோஷ்டி/பெரியவர்/சிறியவர்/உயர்ந்தவர்/தாழ்ந்தவர்....எல்லாம் உண்டு. இவை தவிர்க்க முடியாதது.

எதை அளவுகோலாக வைத்து இவை நடக்கிறது என்பதுதான் பிரச்சனை.
பல முறை விவாதிக்கப்பட்ட ஒன்று. விவாதத்தினால் ஏதும் மாறாது.

சாதி/மதம்...
தனக்கு கற்பிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்பவர்கள் அதைத்தாண்டி மேலே போக முடியாது.

சரி அப்படி மேலே என்ன தான் இருக்கிறது..?

ஒன்றுமே இல்லை...
அது ஒரு வெற்றிடம்..
இவர்களால் வெற்றிடத்தில் நிற்க முடியாது.
சாய்ந்து கொள்ள ஏதாவது வேண்டும்.

அருள் குமார் said...

உங்கள் கருத்துக்கு நன்றி அலெக்ஸ்!

சாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வேறெந்த தளத்தில் இணைய முடியும் என்று நீங்கள் நினைக்கீறீர்கள்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த சாதியைக்கொண்டே ஒன்றிணைந்து போராடவேண்டும் என்பதே தெரியாதவர்கள் அதிகம் என நான் நினைக்கிறேன்!

அருள் குமார் said...

உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் பாலா.

நிதானமாக வாருங்கள் சிபி. விவாதிப்போம் :)

Hariharan # 03985177737685368452 said...

அருள் குமார்,

சாதி என்பது வெறும் அடையாளம்.

பாகுபாடுகள் உருவாவது சாதியோடு தனிமனிதன் தன்னை எவ்விதம் இணைத்துக்கொண்டு இருக்கிறான் என்பதைப் பொறுத்து அமைகிறது!

இதிலே மாற்றங்கள் என்பது வரவேண்டிய தளம் தனிமனிதன் தன்னை சாதியோடு இணைத்துக்கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்வதிலே மட்டுமே!

வெறும் சாதியென்ற அடையாளம் மட்டுமே பாதிப்பைத் தந்து விடுவதாகவோ, சாதி என்ற சொல்லே அவலமான பழமை என்று ஆவதில்லை.

It is all the individual's relationship with caste!

பணம் என்பது பழமையானதே ஆனால் தனிமனிதன் இதனுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் இதன் முகம் மாறுகிறது. உழைத்துப் பெற்றால் சம்பளம், திருடினால் கள்ளப்பணம், கையூட்டு வாங்கினால் லஞ்சம். பணத்தைக் குறை சொல்வது அபத்தம் இங்கே தனிமனிதன் பணத்துடன் உறவாடும் விதமே பாகுபேதம் ஏற்படுத்துகிறது!

நேரம் கிடைக்கையில் இது பற்றி விஸ்தாரமாகப் பதிய வேண்டும்!

அருள் குமார் said...

நன்றி கோவி. கண்ணன்,
நீங்கள் இளையராஜா பற்றி சொல்வதற்கும், குழலி எங்கள் நண்பர் ஒருவரை குறிப்பிட்டதற்கும் என் பதில் இது:

இப்படி நினைப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்றே நான் நம்புகிறேன்.

குழலி,
நம் நண்பனின் பக்கத்து வீட்டுக்காரரை விட்டுவிடலாம். நாமும் நமது நண்பர்களும் அவன் வீட்டுக்குச் செல்வது பற்றி இப்படி யோசித்தோமா? அல்லது நம் வீட்டில் தான் தடுத்தார்களா? பெரும்பாண்மை பற்றியே நான் சொல்லிறேன்.

அருள் குமார் said...

//பதிவு தவறாக புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கின்றது....//
ஆம் குழலி, அப்படித்தான் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். கல்வெட்டின் மறுமொழியில் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தவறு நான் கடைசியாய் பொதுவில் சொன்ன வரிகளில் தான்!

நீ குறிப்பிட்டதைத்தான் நான் சொல்ல விழைந்தேன்.

குழலி / Kuzhali said...

//சாதி என்பது வெறும் அடையாளம்.
//
இந்த அடையாளங்கள் எதற்காக? இந்த அடையாளங்கள் சொல்லும் சேதி என்ன? யாருக்கு சொல்கின்றன சேதி?

அருள் தன் நட்சத்திர அறிமுகப்பதிவில் அடையாளமற்று இருப்பதை பற்றி எழுதியிருந்தார், அது குறித்து விரிவாக ஒரு பதிவு எழுதிக்கொண்டுள்ளேன், முடித்தவுடன் போடுகின்றேன்.

குழலி / Kuzhali said...

//நாமும் நமது நண்பர்களும் அவன் வீட்டுக்குச் செல்வது பற்றி இப்படி யோசித்தோமா? அல்லது நம் வீட்டில் தான் தடுத்தார்களா? பெரும்பாண்மை பற்றியே நான் சொல்லிறேன்.
//
உண்மைதான், ஆனால் நம்மை போன்றவர்கள் இன்னும் பெரும்பாண்மை ஆகவில்லை என்பதே கசப்பான உண்மை...

அருள் குமார் said...

கல்வெட்டு,
உங்களின் விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

//முதலில் எந்த சாதிய உணர்வு உள்ளவர்கள் என்று சொல்ல வேண்டும்.// இதைத் தெளிவாய் நான் சொல்லவில்லை என நினைக்கிறேன்.
மன்னிக்கவும்.

//சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்கள் அனைவரையும் மனிதராக மட்டுமே பார்ப்பார்கள்.//

//அதே வேறு ஒரு சாதியில் பிறந்த காரணத்தால் தன்னைவிட மற்றவன் கேவலம் என்று எண்ணும் மக்கள் இன்னும் உள்ள நாடு இது.//

இரண்டையும் நான் ஆமோதிக்கிறேன்.
பதிவின் கடைசி வரியில் இவர்களைக் குறிப்பிடவில்லை நான். நான் குறிப்பிட்ட சாதிய உணர்வு குழலி குறிப்பிட்ட ஒன்றுதான்.

எதைக்கொண்டு தான் புரக்கணிக்கப் படுகிறார்களோ அதைக்கொண்டே குழுவாக இணைவதுதான் எல்லா தளத்திலும் இருக்கிறது! அந்த வகையில் சாதியிலும் அப்படி இணைந்து போராடுதல் சரியென்றே எனக்குத் தோன்றுகிறது.

கருப்பு said...

ஒரே ஒரு ஒற்றை ஆள் சர்வாண்டஸ் கிருஷ்ணன் என்ற பெயரிலும் முகமது யூனூஸ் என்ற பெயரிலும் நாட்டாமை, ராஜரிஷி சோ வெறியன், பஜ்ஜி, சங்கமித்ரன் என்ற பல பெயர்களிலும் தனக்குத்தானே பின்னூட்டம் எழுதி தமிழ்மணத்தினை நாற அடிப்பதோடு மட்டுமின்றி தான் பிறந்த கேடுகெட்ட சாதியை பெருமையாக வேறு சொல்கிறார். அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இப்படி தன் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி உருப்படும் அருள்குமார்?

G.Ragavan said...

அருள்...நீங்கள் என்ன குறிப்பிட்டிருக்கின்றீர்களோ...அதுதான் சாதி ஒழிப்பு. சாதி, இனம், மொழி, மதம், நாடு, நிறம், பாலியல் விருப்பம்...இன்னும் பல காரணங்களினால் மனிதன் வேறுபட்டு குழுவாவது தவிர்க்க முடியாயது. ஆனால் அந்தத் தவிர்க்க முடியாத சூழலில் வேறுபாடு பாராமை மிகத் தேவை. தன்னை விட ஒருவன் வேறுபட்டிருப்பதாலேயே அவன் தாழ்ந்தவனாகி விட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதுதான் உண்மையான சாதி ஒழிப்பு.

சாதி மட்டுமே வேறுபாடுகளைக் கொண்டு வருவதில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆனால் இந்தியாவில் சாதி மிகப் பெரிய வேறுபாட்டிற்குக் காரணமாக இருந்திருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத கருத்து.

கண்டு முட்டு மற்றும் கேட்டு முட்டு என்ற பதங்கள் பழந்தமிழில் உண்டு. அதாவது சைவரைக் கண்டால் தீட்டு. சைவச் சொற்களைக் கேட்டால் தீட்டு என்று ஒரு வழக்கம் இருந்தது. சைவத்தை எடுத்து விடுவோம். பொதுவில் எதையும் கண்டாலும் கேட்டாலும் தீட்டு வரக்கூடாது. ஒரு இஸ்லாமியனோ கிருத்துவனோ கண் முன்னே போனாலோ..அந்தக் கருத்தைக் கேட்க நேர்ந்தாலோ முட்டு வரக்கூடாது. அதே போல ஒரு இஸ்லாமியருக்கோ கிருத்தவருக்கோ திருநீறும் பொட்டும் வைத்துக் கொண்டு செல்கின்றவரைக் கண்டாலோ கேட்டாலோ முட்டு வரக்கூடாது. இன்னும் பல தளங்களில் இந்த முட்டுகளைச் சொல்லலாம்.

இந்த வேறுபாடுகளைக் களைய ஒரு வழிதான் இருக்கிறது. நாம் நாமாக வாழ்ந்து அடுத்தவரை அவர் விருப்பப்படியே வாழ விடுவது. அதே சமயத்தில் வேறுபாடு பார்க்கப் பட்டால்...அது யாராக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியது. அதற்கு எத்தனை பேர் ஆயத்தம் என்பதுதான் விடையில்லாத மிகப் பெரிய கேள்வி இப்பொழுது!

G.Ragavan said...

மற்றொரு தகவல். பிறப்பினால் சொல்லப்படும் இந்தச் சாதீய வேறுபாடுகள் ஒழிய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் இந்த ஒரு வேறுபாடு மட்டும் ஒழிய வேண்டும் என்று நினைப்பதும் நேர்மையின்மையே.

BadNewsIndia said...

நல்ல கேள்வி.

நீங்க சொன்ன மாதிரி குழுக்களா வாழும் மனித இயல்பு மாறவே மாறாது. இனம், நிறம், பழக்க வழக்கம் இதையெல்லாம் வைத்து உருவான பல குழுக்கள் நடுவில் ஏற்பட்ட குழப்பத்தால் இன்று 'சாதி' என்ற குழுவின் பெயரே கெட்ட வார்த்தை ரேஞ்சுக்கு வந்துடுச்சு.

பணம் நடுவில் புகுந்ததும், ஒரு குழு அடுத்த குழுவை அமுக்கி மேலே வந்தது. இப்படி மேலே வர சில பல தில்லு முல்லுகளை செய்தது.

தன் சாதிக்குழுவுக்காக போராடுபவனை யாரும் இழிவு படுத்தவில்லை அருள். (atleast இணையத்தில்).
தன் சாதிக்காக போராடும்போது, அடுத்த குழுவை மட்டம் தட்டி, ஒண்ணும் ஆகப்போறதில்லை. ஒரு குழுவை உயர்த்த அடுத்த குழுவை அமுக்கினால், we will be back in square 1.
கூட்டு முயற்சியில் மேலே வரணும்.

உயர் குழுவில் இருக்கும் தாய்மார்களும், தந்தைமார்களும் தன் பிள்ளைகளுக்கு 'அவன் கூட சேராத, இவன் கூட மட்டும் விளையாடு' இந்த மாதிரி ரேஞ்சுல புத்திமதி சொல்வதை தவிர்க்கணும்.
'தாழ்ந்த்' குழுவில் இருந்து 'உயர்ந்த' நிலைக்கு வந்தவர்கள், கை கொடுத்து மற்றவரையும் தூக்கி விட வேண்டும். சத்தம் போட்டா மட்டும் பத்தாது.
சுகாதாரம் சொல்லித்தரணும், கல்வி புகட்டணும். இன்னும் நிறைய பண்ணனும்.

சிறு வயதில், ஊரில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வந்தது. மீன் விற்றுக் கொண்டிருந்தவன் குடிக்க தண்ணீர் கேட்டான் பாட்டியிடம். பாட்டி அவனை வீட்டை சுற்றி வந்து பின் வாசல் அருகே நிற்கச் சொன்னார். நான் 10 ஆம் வகுப்பு என்று நினைவு. ஓடிச் சென்று டம்ப்ளரில் தண்ணீர் கொடுத்தேன் அவனுக்கு. பாட்டி லபக்கென்று டம்ப்ளரை பிடுங்கி வேறொரு 'ப்ழைய' செம்பில் எடுத்துக் கொடுத்தாள்.
அவள் சொன்ன காரணம் - அவன் குளிச்சே பல நாள் ஆயிருக்கும்.
அவனுக்கு நம்ப டம்ப்ளர்ல கொடுக்காத.
அன்று சரியா தவறா தெரியவில்லை. இன்று யோசிக்கும்போதும் குழப்பம்தான்.
அழுக்காக, சுகாதார அக்கறை இல்லாமல் இருப்போர் 'உயர்' மக்களே ஆயினும், கீழோரே.

என்னமோ சொல்ல வந்து வேற என்னமோ சொல்லிட்டேனோ?

அருள் குமார் said...

விடாதுகருப்பு,

//அனைவரும் சமம் என்று சொல்லிவிட்டு இப்படி தன் சாதியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தால் உலகம் எப்படி உருப்படும் அருள்குமார்?
//

இப்படி இருப்பவர்களை நம் சாதியைச்சொல்லியோ அல்லது நலிந்த சாதிகள் அனைத்துடனும் நாம் ஒன்றிணைந்து போராடுவதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது.

அருள் குமார் said...

//தன்னை விட ஒருவன் வேறுபட்டிருப்பதாலேயே அவன் தாழ்ந்தவனாகி விட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். //
இதை அனைவரும் உணரும்பட்சத்தில் சாதி தேவையே இல்லை ராகவன். ஆனால் இன்றைய நிலை அப்படியா இருக்கிறது. பாதிக்கப்படுபவர்கள் நான் குறிப்பிட்டுள்ளபடி ஒன்றினைவதில் தவறேதும் இருக்கிறதா என்ன?

அருள் குமார் said...

//தன் சாதிக்குழுவுக்காக போராடுபவனை யாரும் இழிவு படுத்தவில்லை அருள். //

எனில் சந்தோஷமே. ஒரு சாதி தாழ்ந்தது என்று இன்னொரு சாதியினர் சொல்லும்போது தான் பிரச்சனையே. அப்படிச் சொல்லும்போது சாதியே இல்லை என்று பாதிக்கப்பட்டவர்களால் எப்படி இருக்க முடியும் என்பதே என் கேள்வி!

We The People said...

ரொம்ப அவசரமா எழுதிப்போட்டுட்டீங்க அருள். எல்லாரும் வேற மாதிர் நினைச்சுட்டாங்க பாத்தீங்களா? க்ளீன் & ஜெர்க்கா இருந்தா நல்லா இருந்திருக்கும். கொஞ்சம் மிஸ்ஸிங். அண்ணன் குழலி மிஸ்ஸிங் லிங் போட்டுக்கொடுத்தாரு போல... நைசா அவர் பாயிண்டையும் அதில விட்டாரு பார்த்தீங்க இல்ல..

என் பாயிண்ட் (லைட்டா சுட்டது தான்):

சாதி ஒரு முகம்பார்க்கு கண்ணாடி மாதிரி, அதை தேவையா இருக்கும் போது உபயோகிக்கனும். சும்ம கண்ணடி முன்னாடியே இருந்து பார்த்துக்கிட்டு இருக்கக்கூடாது, ஏன்னா நம்மக்கு வேற வேலையை பார்க்கமுடியாது. :)

Unknown said...

1.
//தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா?//

:-))

பல வித்தியாசங்கள் உண்டு...திறந்த மனுதுடன் யாராலும் அணுக முடியாது என்பது வேதனையான விசயம்.

ஒருவர் அவரின் தேசிய அடையாளத்தை மாற்ற முடியும். அதிகார பூர்வமாக..

இப்போது X நாட்டின் குடிமகனாக உள்ள ஒருவன் பிற்காலத்தில் Y நாட்டின் குடிமகனாக வாய்ப்பு உண்டு.

சாதி மாற முடியுமா?

அன்புமணி தமிழ் நாடு முக்குலத்தோர் பேரவைத் தேர்தலில் போட்டியிட முடியுமா?

அல்லது

திருமா வன்னியர் சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

:-))

சாதிய அமைப்பில் இது நடக்காது.

ஆனால்

தேசிய அமைப்பில் இருவரும் ஒரே பதவிக்காக யாரும் போட்டியிடலாம்.வெற்றி பெற முடியுமா? என்றால் அது பல அரசியல் குழப்பங்கள் நிறைந்தது..
ஆனால் போட்டியிடல் என்ற அடிப்படைக்கு தேசியக் குடிமகன் என்ற அடிப்படை மட்டுமே போதும்.

நிற்க...

தேசியம் என்பது புவியியல் எல்லை கொண்ட ஒன்று.ஒரு தேசியத்துக்குள் வரும் மனிதர்கள் அந்த தேசியத்தின் கீழ் ஒரே அடையாளமாகப் பார்க்கப்படுவார்கள்.இவர்களின் போராட்டம் என்பது அடுத்த தேசியத்தை (நாட்டை) நோக்கியதாக இருக்கும்.இந்த தேசியவாதிகளின் போராட்டம் அடுத்த நாட்டு (எதிர்க்கப்படும் தேசியவாதிகளால்) மக்களால் தவறாகப் பார்க்கப்படும்.இது உலகெங்கும் நடைபெறும் ஒன்று.

பகத்சிங் நமக்கு ஹீரோவாக தோன்றும் அதே நேரத்தில் பிரித்தானியர்களுக்கு துரோகியாகத் தெரிவார்.

==

2.
//இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், ....//


இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் யாரால் மதிக்கப்பட்டார்கள்?
இந்தியர்களால் மட்டுமே..பாகிஸ்தானியர்களால் அல்ல.

==
3.
//தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?//

சரியில்லை.

ஆனால்....சாதி இருக்கலாம் என்பதே உங்களின் விவாதம் என்று தெரிகிறது.

தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை அந்த சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே உயர்வாகப் பார்ப்பார்கள்.அதாவது மற்ற சாதியினரால் இழிவாகவோ அல்லது அர்த்தமற்ற போராட்டமாகவே பார்க்கப்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதி இருந்துவிட்டுப் போகட்டும் என்றால் ஒரு சாதியின் போராட்டத்துக்கு மற்ற சாதி ஆதரவு தருவார்கள் என்று எப்படி எதிர் பார்க்கலாம்..இங்கு பிரிவே சாதிதானே?

==
சாதியைத் தேசியத்தோடு ஒப்பிடும்போது தேசியத்திற்கான அதே விளைவுகள் பொருந்தும்.சாதிய உணர்வு உள்ளவர்கள் இதைத் தெரிந்தே ஆக வேண்டும்.

===
4.
//எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?//

உண்மைதான்.

சாதியின் பெயரால் முடக்கப்பட்டவர்கள் உரிமையைப் போராடிப் பெற முயலும் போது ...அதே சாதி அடுக்கு தரும் பயனை அடைந்து கொண்டு இருப்பவர்கள் அந்தப் பயனை இழக்கப் பயந்து மற்றொரு புறம் அவர்களின் சாதியின் பெயரால் போராடத்தான் செய்வார்கள்.

Win-Win Situation எனபது சாதியக் கட்டமைப்பில் கிடையவே கிடையாது. அது ஒரு இலாப-நட்டக் கணக்கு.இப்போது இலாபம் அடைபவர்கள் என்றாவது ஒரு நாள் நட்டம் அடைவார்கள்.இது முடிவற்ற செயல்.
..
மேலே சொன்னவை உங்களின் கேள்விக்கான எனது விடையே தவிர மற்ற ஏதும் இல்லை.

Unknown said...

//It is all the individual's relationship with caste!//

:-)))

ஒரு தனிமனிதன் தன்னுடைய சாதியைத் தேர்ந்தெடுக்க முடியாது அது பிறப்பால் வருகிறது என்று இருக்கும் போது ..எப்படி அய்யா இப்படி எல்லாம் அடிச்சு ஆட முடியுது ?

//பணம் என்பது பழமையானதே ஆனால் தனிமனிதன் இதனுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் இதன் முகம் மாறுகிறது. உழைத்துப் பெற்றால் சம்பளம், திருடினால் கள்ளப்பணம், கையூட்டு வாங்கினால் லஞ்சம். பணத்தைக் குறை சொல்வது அபத்தம் இங்கே தனிமனிதன் பணத்துடன் உறவாடும் விதமே பாகுபேதம் ஏற்படுத்துகிறது!//

:-)))

உழைத்துப் பெற்றால் சம்பளம்,
திருடினால் கள்ளப்பணம்,
கையூட்டு வாங்கினால் லஞ்சம்.

இது அனைத்து மனிதருக்கும் பொருந்தும்...

ஆனால்
சாதி...?

x க்கும் x க்கிம் பிறப்பவர் x
Y க்கும் Y க்கும் பிறப்பவர் Y
x க்கும் Y க்கும் பிறப்பவர் Z

என்று உள்ள சாதியக் கட்டமைப்பில் சாதியைக் குறை சொல்லாமல் என்ன செய்ய ?

என்னமோ அடிச்சு ஆடுங்க.

We The People said...

கல்வெட்டுவின் அசத்தல் வாதம் பாராட்டதக்கது!! அருள் சரண்டர் ஆயிடுங்க ப்ளீஸ்.

ஆட்டம் க்லோஸ்! :)

அருள் குமார் said...

கல்வெட்டு,
இந்த விவாதத்தில் உங்கள் மறுமொழிகள் பல கோணங்களில் சிந்திக்க உதவுகின்றன. நன்றி.

சில குழப்பங்களும் இருக்கின்றன...

//சாதி இருந்துவிட்டுப் போகட்டும் என்றால் ஒரு சாதியின் போராட்டத்துக்கு மற்ற சாதி ஆதரவு தருவார்கள் என்று எப்படி எதிர் பார்க்கலாம்..இங்கு பிரிவே சாதிதானே?
//
நிச்சயம் எதிர் பார்க்கவில்லை. மற்ற குழுக்களிலும் இப்படித்தானே! தொழிலாளி போராடினால் முதாலாளி ஏற்பானா என்ன? ஆனாலும் பொதுவில் வெளியில் இருக்கிறவர்கள் அந்த தொழிலாளியின் போராட்டத்தை மதிக்கத்தானே செய்கிறார்கள்.

//Win-Win Situation எனபது சாதியக் கட்டமைப்பில் கிடையவே கிடையாது. // இப்படி சுத்தமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது என்றே நான் நினைக்கிறேன். அப்படி அது சாத்தியமே இல்லையெனில் அது வேறு குழுக்களுக்கும்(உம்: தொழிலாளி-முதலாளி) பொருந்தும் என்றே கொள்ளமுடியும்.

மற்ற குழுக்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறலாம். சாதியில் அப்படி இல்லை என்பது ஒரு முக்கியமான் வித்தியாசம். ஆனால் மற்ற எல்லா விஷயங்களும் இதற்கு பொருந்தும்.

நீங்கள் சொல்வது போல் இந்தியாவுக்காக போராடியவனை பாக்கிஸ்தானி மதிக்கப்போவதில்லை. அதை அறிந்தே இருக்கிறேன். ஆனால் தேசியம் என்ற உணர்வை அவனும் மதிக்கிறான் தானே. தேசியம் ஒரு கேவலமான விஷயம் என்று யாரும் சொல்வதில்லையே! நான் எனது தேசத்துக்காக போராடுகிறேன். நீ உனது தேசத்துக்கக போராடு. பொதுவில் தேசியம் ஒரு உயர்ந்த உணர்வு என்கிற நிலைதானே இருக்கிறது. இதே போல் சாதியை ஏன் நினைக்க முடிவதில்லை?

தேசியத்தில் Win-Win Situation ஒத்துவரும் என நீங்கள் நம்பும்போது என் சாதி உயர நான் முனைகிறேன், உன் சாதி உயர நீ முயற்சி செய். நாம் ஒருவருக்கொருவர் தொந்தரவுசெய்யாமல் வளரலாம் என்ற எண்ணம் தவறானதா?

கல்வெட்டு, தயவுசெய்து விதண்டாவாதமாக கேட்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். இயல்பாகவே எழுகின்ற சந்தேகங்கள் இவை. விளக்கினால் சந்தோஷப்படுவேன். மிக்க நன்றி!

அருள் குமார் said...

//அருள் சரண்டர் ஆயிடுங்க ப்ளீஸ்.
//

ஜெய், இதில் சரண்டர் ஆக என்ன இருக்கிறது? :)

சாதியம் தவரானது என்று தீவிரமாக நம்பியவன் தான் நானும். நான் சந்தித்த அனுபவங்கள் சாதி கொண்டு போராடுபவர்களின் பக்கம் இருக்கும் நியாயங்களை உணர்த்தியதால் எழுந்த கேள்விகள் இவை.

//எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.// இது உணமையாக சொன்ன வர்த்தைகள்.
இங்கு யாரின் வாதங்கள் எனக்கு ஏற்புடையதாயிருந்தாளும் குழப்பங்கள் தெளிந்த மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ளுவேன்!

அருள் குமார் said...

சில நண்பர்களின் பின்னூட்டங்களை வெளியிட இயலாமைக்கு வருந்துகிறேன். அவர்களின் மின்னஞ்சல் முகவரியும் இல்லை. அவர்களை தயவுசெய்து தனிமடலில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!

Hariharan # 03985177737685368452 said...

//It is all the individual's relationship with caste!//

//ஒரு தனிமனிதன் தன்னுடைய சாதியைத் தேர்ந்தெடுக்க முடியாது அது பிறப்பால் வருகிறது என்று இருக்கும் போது ..எப்படி அய்யா இப்படி எல்லாம் அடிச்சு ஆட முடியுது//

கல்வெட்டு,

சாதி என்பது பிறப்பால் வருவதாகத் தடம் பிறழ்ந்து திரிந்து இன்று நாற்றமெடுக்கிறது.

சாதி எனும் classification தனிமனிதன் அவனது நல்ல, கெட்ட குணங்களால் வருவது.

மெக்காலே கல்வி முறைக்கு மாறிவிட்டபின் இந்திய கலாச்சாரத்தின் சாரம்சம் கல்வியினின்று விலகிப்போய் கோவில் அர்ச்சனை மந்திரங்களும் அதனைச் சொல்பவரது குடுமியும் மட்டுமே ஹிந்துமதக் கலாச்சாரம் என்று பிழைப்புவாத ஆதாயத்திற்காகக் சத்தமாக எழுப்பும் குரல்களால் குரல்வளை நெறிக்கப்பட்ட நிலையில் ஒரிஜினல் அக்மார்க் இந்திய வாழ்க்கைமுறை சொன்ன சமூக classification சாதியாக பல குழுவினர் அவ்வப்போது Political Might is right என்ற பாணியிலே அவரவர்க்கான ஆதாய ஆட்டம் ஆடுகின்றனர்.

உண்மையில் இந்திய சமூக classification தவறல்ல. தற்போது சில நூற்றாண்டுகளாக நம்மால் இந்த முறை புரிந்து கொள்ளப்பட்ட விதம் முன்னெடுத்துச்செல்லும் விதம் மிகவும் தவறானது!

இது குறித்துப் பின்னர் விரிவாகப் பதிவிடுகிறேன்.

Unknown said...

1.
//ஆனாலும் பொதுவில் வெளியில் இருக்கிறவர்கள் அந்த தொழிலாளியின் போராட்டத்தை மதிக்கத்தானே செய்கிறார்கள்.//

யார் பொதுவில் இருப்பவர்கள்?
பொது என்ற கருத்தே தவறானது என்பது எனது எண்ணம். மித வாதி அல்லது மிதச்சார்பு என்று சொல்லலாம்.

தொழிலாளிக்கு இன்னொரு தொழிலாளிதான் ஆதரவு கொடுப்பான் (ஒரே வர்க்கம்). முதலாளி வர்க்கம் தமக்கும் இப்படி நடந்து விடும் என்று பயந்து அடுத்த முதலாளிக்கே ஆதரவாக இருப்பர். ஏனென்றால் அது அவர்களின் வர்க்கம்.

தமிழகத்தில் ஆசிரியர் போராட்டத்துக்கு விவசாயிகளும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆசிரியர்களும் ஆதரவு கொடுத்து களமிறங்கிய வரலாறு உண்டா?

சாதீய வேறுபாடு என்பது ஆரம்பம் தான் அது போல் நிறைய உள்ளது.இந்தக் களத்தில் சாதிய வேறுபாடு களையப்பட்டு (மதமும் ...பேராசை) சமூக குழுக்கள் தோன்ற வேண்டும் என்பதே ஆசை.


2.
//அப்படி அது சாத்தியமே இல்லையெனில் அது வேறு குழுக்களுக்கும்(உம்: தொழிலாளி-முதலாளி) பொருந்தும் என்றே கொள்ளமுடியும்.//

எல்லா குழுக்கள் என்று பொதுப்படுத்த முடியாது.

தொழிலாளி-முதலாளிக்கு இது உண்மை.
ஆனால் தொழிலாளி-முதலாளி அமைப்பு குறைந்த பட்சம் உட்கார்ந்து பேசும்.
பேச்சு வெற்றியோ தோல்வியோ அது வேறு...

ஆனால் எந்த இரண்டு சாதி அமைப்புகளும் கூட்டணிப் பங்கீட்டைத் தவிர வேறு எதற்கும் உட்கார்ந்து பேசியதில்லை. :-))


3.
//மற்ற குழுக்களில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறலாம். சாதியில் அப்படி இல்லை என்பது ஒரு முக்கியமான் வித்தியாசம். ஆனால் மற்ற எல்லா விஷயங்களும் இதற்கு பொருந்தும்.//


..மற்றஎல்லா விஷயங்களும் இதற்கு பொருந்தும் என்று என்னால் பொதுப்படுத்த முடியவில்லை.சாதியம் என்ற அமைப்பில் எழும் குழுக்களுக்கும் மற்றவைக்கும் "குழு" என்பதைத தவிர எந்த ஒற்றுமையும் கிடையாது.

இது எனது கருத்து மட்டுமே.வேறு நிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேறு கோணம் கிடைக்கலாம்.

4.
//ஆனால் தேசியம் என்ற உணர்வை அவனும் மதிக்கிறான் தானே.//

:-))
தேசியம் என்பது ஒன்று ஆனால் இருவரின் தேசமும் வேறு.
அவரவர் அவரின் தேசத்தை மதிக்கிறார்.

5.
// தேசியம் ஒரு கேவலமான விஷயம் என்று யாரும் சொல்வதில்லையே! நான் எனது தேசத்துக்காக போராடுகிறேன். நீ உனது தேசத்துக்கக போராடு. பொதுவில் தேசியம் ஒரு உயர்ந்த உணர்வு என்கிற நிலைதானே இருக்கிறது. இதே போல் சாதியை ஏன் நினைக்க முடிவதில்லை? //

x நாட்டு மக்களின் தேசிய உணர்வினால் Y நாட்டிற்கு ஏதாவது பயன் உண்டா?

அது போல் A யின் சாதிய உணர்வால் B க்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஆனால் A ன் குழுவில் அதற்கான சாதியத்திற்கு மதிப்பும் B ன் குழுவில் அதற்கான சாதியத்திற்கு மதிப்பும் இருக்கும். ஆனால் பரஸ்பரம் பகை இருக்கவே செய்யும்.

==
சாதியின் ஊற்றுக்கண்ணே தவறு எனும் போது அந்த விசச்செடியில் இருந்து நல்ல கனி வரவே முடியாது.
==

6.
//தேசியத்தில் Win-Win Situation ஒத்துவரும் என நீங்கள் நம்பும்போது என் சாதி உயர நான் முனைகிறேன், உன் சாதி உயர நீ முயற்சி செய். நாம் ஒருவருக்கொருவர் தொந்தரவுசெய்யாமல் வளரலாம் என்ற எண்ணம் தவறானதா?//


தேசியத்தில் Win-Win Situation உள்ளது என்று நான் சொல்லவில்லை. சாதியத்தில் இல்லை என்று மட்டுமே சொன்னேன்.

இரண்டு சாதிகளுக்கான போட்டியில் எப்படி Win-Win Situation கிடையாதோ அதே போல் இரண்டு நாடுகளுக்கான போட்டியில் Win-Win Situation கிடையாது.

போட்டி என்று வந்து விட்டால் தேசியம்/சாதியம் இரண்டும் அதன் சார்பாளர்களுக்காக மட்டுமே களமிறங்கும்.

இரண்டு இயங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம்.

**தனது நாடு என்ற தொடர்பு இல்லாமல் இந்த கட்டமைக்கப்பட்ட உலகத்தில் வாழவே முடியாது.


**தனது சாதி/மதம் என்று எதுவும் இல்லாமல் (பிரச்சனைகளுடனாவது) வாழமுடியும்.

ஏற்கனவே அசுரன் பதிவில் சொன்னது தொடர்புடைய சில..:

http://poar-parai.blogspot.com/2006/10/blog-post_19.html

நாடு என்ற கட்டமைப்பு ....> பெரிய ஆளாக இருந்தால் பிற நாடுகள் உங்களுக்கு இருக்க இடம் தரும்.
மற்றவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தக் கட்டமைப்பை உடைக்க முடியாது.

இருக்கும் நாட்டை எத்தனை நாடுகளாக பிரித்தாலும் ..உடைத்த பிறகு வரும் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆகவேண்டும்.

அதுவும் பிடிக்கவில்லையா அதையும் உடை...அந்த உடைப்பினால் வரும் புது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படவேண்டும்....


யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நாட்டின் குடிமகன்களே.
அப்படி இருக்கும் பட்சத்தில் அவன் தான்/மனமுவந்து தனது தேசமாக என்னும் (கவனிக்க அவன் அவனாக நம்பினால்தான் உண்டு) அந்த நாட்டின் நல்லது/கெட்டதுகளில் பங்கேற்று வாழ்வது அவன் கடமைகளில் ஒன்று.

இல்லையா பாஸ்போர்ட்டை தூக்கி குப்பையில் போட்டு விட்டு ஒரு International Airpot -ல் செட்டிலாகி விட வேண்டும்.

அப்படி இல்லாமல் பிடிக்காத ஒரு நாட்டின் அடையாளங்களை தாங்குவது விரும்பாத மனைவியுடன் (அல்லது கணவனுடன்) ஊருக்காகச் சேர்ந்து வாழ்வது போல ஆகிவிடும்.
ஒருவன் தனக்கு முதலில் உண்மையாக இருக்க வேண்டும்.தன்னையே நேசிக்கத் தெரியாதவனின் எந்தப் பற்றும் (குடும்பம்,தெரு,ஊர்,மாநிலம்,நாடு,உலகம்...) போலியானது.

முதலில் ஏதாவது ஒரு நாட்டைத் தன் நாடு என்று ஒருவன் நம்பினால்தான் இந்தக் கேள்வி பொருந்தும்.

தனக்கு நாடு என்ற வரைமுறைகளில் நம்பிக்கை இல்லை. சும்மாங்காட்டியும் நாட்டோட இருக்கேன்.என்றால் இந்தக் கேள்வி அர்ததம் அற்றது.

நாடு என்று புவியியல் ரீதியாகவாது நம்பினால்தான் பதில்... :-))))

அப்படி ஒரு நாட்டை நீங்கள் உங்கள் நாடு என்று நீங்களாக நினைக்கும் பட்சத்தில் ...எது தேசப்பற்று இல்லை என்று அட்டவணை போடுங்கள்.மற்றது எல்லாம் சுலபமாக வந்துவிடும்.
.....

தேசப்பற்று என்றால் என்ன?

ஒரு வீட்டை உங்கள் வீடு என்று நம்பும் பட்சத்தில் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில்) என்ன செய்ய மாட்டிர்களோ/செய்வீர்களோ அது எல்லாம் ...நீங்கள் உங்கள் நாடு என்று நம்பும் (அய்யா நீங்களாக நம்பும் பட்சத்தில் தான்) நாட்டிற்கும் பொருந்தும்.

ஒன்று வீட்டுப்பற்று (கடமை) மற்றது நாட்டுப் பற்று (கடமை).

உங்கள் வீடாக இருந்தாலும் சமூத்தில் (தெரு,பஞ்சாயத்து..) இருந்து நீங்கள் விலக முடியாது (காட்டிற்கு போனால்தான் உண்டு..அங்கேயும் கூட்டம் வரும் போது இதே பிரச்சனைதான்) அது போல் நாட்டின் சட்டதிட்டங்களில் இருந்தும் விலக முடியாது.
---

முடிவாக......




தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் மாற்றவே முடியாத,பிறப்பினாலேயே அறியப்படும் சாதியை ஏற்றுக்கொள்வதும் கைவிடுவதும் அவரவர் விருப்பம்.

இந்த சாதிய முறையால் ஏற்கனவே சீரழிந்து போன மக்களை அதனைக் கொண்டேதான் அடையாளப்படுத்த முடியும் என்பதையும் மறுக்க முடியாது.

சீரழிந்து போன மக்களை அதனைக் கொண்டு அடையாளப்படுத்தும் அதே நேரத்தில் நல்ல நிலையில் உள்ள யாவரும் எந்தவிதமான சாதி/மத அடையாளத்தையும் தாங்காமல் விட்டொழிப்பதே நல்லது.

நல்ல நிலையில் உள்ளவர்கள் ஊர்,தெரு,மாநிலம்,நாடு என்று சேர்ந்து அதற்கான பொது நலனுக்காக களமிறங்க வேண்டும் என்பதே எனது பேராசை.

அருள் குமார் said...

கல்வெட்டு,

1. //தமிழகத்தில் ஆசிரியர் போராட்டத்துக்கு விவசாயிகளும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆசிரியர்களும் ஆதரவு கொடுத்து களமிறங்கிய வரலாறு உண்டா?
//
தேவையில்லை, ஆனால் அடுத்த வர்க்கத்தின் போராட்டத்தை இழிவாக நினைக்கிறானா என்பதே என் கேள்வி. ஆனால் சாதியைப் பொருத்தமட்டில், தனக்காக போராடினால் கூட ஒரு கேவலமான பிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது என்பதே என் கருத்து. முன்னதில் வேறு அமைப்புகள் உதவ வாய்ப்புள்ளது. பின்னதில் அதற்க்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அவனின் போராட்டமே கேவலமாக பார்க்கப்படுகிறது.

2. //ஆனால் எந்த இரண்டு சாதி அமைப்புகளும் கூட்டணிப் பங்கீட்டைத் தவிர வேறு எதற்கும் உட்கார்ந்து பேசியதில்லை//
எங்கள் ஊரில் பல பிரச்சனைகளில் இரண்டு சாதி மக்களும் உட்கார்ந்து பேசியிருக்கிறார்கள். பேச்சு வெற்றியோ தோல்வியோ அது வேறு... என்ற நிலைதான் அங்கும்!

4. //தேசியம் என்பது ஒன்று ஆனால் இருவரின் தேசமும் வேறு.
அவரவர் அவரின் தேசத்தை மதிக்கிறார்.// இதைத்தான் நானும் கேட்கிறேன். சாதியிலும் இதே நிலைதானே? ஆனால் தேசிய உணர்வு என்றால் அது உயர்ந்த உணர்வென்றும் சாதிய உணர்வென்றால் அது தாழ்ந்தது என்றும் இருக்கும் மாயை ஏன்?

5. //சாதியின் ஊற்றுக்கண்ணே தவறு எனும் போது அந்த விசச்செடியில் இருந்து நல்ல கனி வரவே முடியாது.// சரிதான். ஆனால் சாதியால் வஞ்சிக்கப்பட்டவனுக்கு சாதியைத்தவிர வேறு எந்த ஆயுதமும் உதவாது என நினைக்கிறேன்.

6. //இரண்டு சாதிகளுக்கான போட்டியில் எப்படி Win-Win Situation கிடையாதோ அதே போல் இரண்டு நாடுகளுக்கான போட்டியில் Win-Win Situation கிடையாது.//
இதை நாணும் உணர்கிறேன். இங்கும் மீண்டும் அதே கேள்விதான்! தேசிய உணர்வு என்றால் அது உயர்ந்த உணர்வென்றும் சாதிய உணர்வென்றால் அது தாழ்ந்தது என்றும் இருக்கும் மாயை ஏன்? தேசிய அளவில் ஒருவன் தாக்கப்படும்போது தேசிய உணர்வு அவனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாதிய அளவில் தாக்கப்படும்போது அவன் கொள்ளும் சாதிய உணர்வு. தன் தேசத்திலேயே வேறு ஒரு சாதியைச் சார்ந்தவன் தன்னைத் தாக்கப்படும்போது அவனுக்கு தேசிய உணர்வா எழும்? சாதிய உணர்வுதானே எழும்? அதிலென்ன கேவலம்? மீண்டும் மீண்டும் இதெ மட்டுமே என் கேள்வியாகிறது!

முடிவாக...

//தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் மாற்றவே முடியாத,பிறப்பினாலேயே அறியப்படும் சாதியை ஏற்றுக்கொள்வதும் கைவிடுவதும் அவரவர் விருப்பம்.

இந்த சாதிய முறையால் ஏற்கனவே சீரழிந்து போன மக்களை அதனைக் கொண்டேதான் அடையாளப்படுத்த முடியும் என்பதையும் மறுக்க முடியாது.//

இவை இடண்டையும் தான் என் பதிவில் சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன் :) என்ன, இரண்டாவது விஷயத்தை கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கிறேன்!

//சீரழிந்து போன மக்களை அதனைக் கொண்டு அடையாளப்படுத்தும் அதே நேரத்தில் நல்ல நிலையில் உள்ள யாவரும் எந்தவிதமான சாதி/மத அடையாளத்தையும் தாங்காமல் விட்டொழிப்பதே நல்லது.

நல்ல நிலையில் உள்ளவர்கள் ஊர்,தெரு,மாநிலம்,நாடு என்று சேர்ந்து அதற்கான பொது நலனுக்காக களமிறங்க வேண்டும் என்பதே எனது பேராசை.
//
இதில் தான் ஒரு சின்ன கருத்து வேறுபாடு. ஊர்,தெரு,மாநிலம்,நாடு என்று சேர்ந்து இயங்கும்போது சாதியாக மட்டும் ஏன் சேர்ந்து இயங்கக்கூடாது? மாநிலங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகலாம் அல்லது நல்லினக்கத்துடன் முன்னேரலாம்; ஆனால் சாதிகளுக்கு இடையில் மட்டும் இவை இரண்டுமே ஏன் ஏற்கத்தகாதவையாக இருக்கின்றன என்பதுதான் எனக்கு புரியவே இல்லை :(

Anonymous said...

அருள்,

நோய் ஆரம்ப நிலையில் இருக்கும் போது மருந்து கொடுத்துக் குணப்படுத்தலாம். புரையோடி தசைகளில் நஞ்சைப் பரப்ப ஆரம்பித்து விட்ட பிறகு அந்தப் பகுதியையே அறுவைச் சிகிச்சை மூலம் வெட்டி எறிவதே தீர்வு.

சாதிப் பிரிவுகளைச் சீர்திருத்தி, மோசமான கூறுகளைக் களைந்து நல்ல அம்சங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று நடந்த முயற்சிகள் எதுவும், அடிப்படையிலான 'உயர்ச்சி தாழ்ச்சி கருதும்' இழிவை நீக்க முடியவில்லை.

கல்வெட்டு சொல்வது போல நல்ல நிலைக்கு வந்து விட்ட அனைவரும் சாதி அடையாளத்தை ஒதுக்கி விடுவதுதான் முன்னேற்றத்துக்கு வழி என்று நானும் நினைக்கிறேன்.

முன்பெல்லாம் உறவுக்குள்ளேயே திருமணம் செய்து வைப்பார்கள். அது மரபியல் படி பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கிறது என்று தெரிகிறது இப்போது. குறுகிய வட்டத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டிருக்கும் பழக்கத்தால் மரபணு குறைபாடுகள் நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாமா என்று நினைத்துப் பாருங்கள்.

ஒத்த பழக்க வழக்கம் உடைய குடும்பத்தில் உறவு கொள்ள சாதி அடையாளம் உதவுகிறது என்பதைத் தவிர வேறு பலன் எதுவும் பார்க்க முடியவில்லை. அதனால் விளையும் தீமைகளுடன் ஒப்பிடும்போது, குழுவாக செயல்பட இது ஒரு தளம் என்னும் ஆதாயம் அடிபட்டு விடுகிறது.

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட குழுவினர் தமக்கு பரிகாரம் தேட இந்த அடையாளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், நல்ல நிலையில் இருப்பவர்கள் சாதி அடையாளத்தை கைவிட்டு விடுவது நல்லது என்றே தோன்றுகிறது

அன்புடன்,

மா சிவகுமார்

Unknown said...

அருள்,
நம்மால் இப்போது இங்கே விவாதிக்கப்படும் இந்த சாதிய அடையாள விவாதத்தில்

சாதி என்றால் என்ன?
சாதி எப்படி வருகிறது?

என்று உங்களிடம் கேட்டுவிட்டு பிறகு எனது கருத்தை கூறியிருக்கலாம் என்று நினைக்கிறேன். :-)))

உங்களின் சாதியை நீங்கள் ஏற்கும் போதே....

*உங்களின் நிலைக்கு மேலே உள்ளவனை நீங்களே அங்கீகாரம் செய்கிறீர்கள்.

*கீழே உள்ளவனை நீங்களே அவமானம் செய்கிறீர்கள்.

*எல்லாரும் அங்கேயே அதே பழைய அடையாளத்தில் இருக்க வகை செய்கிறீர்கள்.

*அதை தொடரவும் விரும்புகிறீர்கள்.

*இந்த நுண்ணிய விருப்பம்தான் இந்த சாதியை ஏற்படுத்தியவர்களின் ஆசை.

---------
எனது கோணம் உங்களுக்கும் புரியாமல் இருக்கலாம்.அது இருவரின் அனுபவமாக இருக்கலாம்.அதனால் என்ன? நல்ல விவாதக் களம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி!

G.Ragavan said...

// அருள் குமார் said...
//தன்னை விட ஒருவன் வேறுபட்டிருப்பதாலேயே அவன் தாழ்ந்தவனாகி விட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும். //
இதை அனைவரும் உணரும்பட்சத்தில் சாதி தேவையே இல்லை ராகவன். ஆனால் இன்றைய நிலை அப்படியா இருக்கிறது.//

அப்படியில்லை என்பதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன் அருள். அனைவரும் உணர வேண்டும் என்பது எனது விருப்பம். அதில் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

// பாதிக்கப்படுபவர்கள் நான் குறிப்பிட்டுள்ளபடி ஒன்றினைவதில் தவறேதும் இருக்கிறதா என்ன? //

அதிலும் தவறில்லை. நான் சாதி வேறுபாடுகள் பார்ப்பது கண்டிப்பாக ஒழிய வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். இந்த வேறுபாடு பார்ப்பது சாதியையும் தாண்டிச் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஆனால் சாதி வேறுபாடுகளோடே நாம் இன்னும் சண்டை போட வேண்டியிருக்கிறது என்பதும் உண்மையின் ஒரு பகுதியே.

Unknown said...

கடைசியில் உள்ள பத்தியை மறு இடுகை செய்கிறேன்.

**----**
எனது கோணம் உங்களுக்கும் ,உங்கள் கோணம் எனக்கும் புரியாமல் இருக்கலாம்.அல்லது இருவரின் அனுபவங்கள் தந்த பாடங்கள் வேறாக இருக்கலாம்.

அதனால் என்ன? நல்ல விவாதக் களம் ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி!

Floraipuyal said...

நல்ல பதிவு. வரவேற்கிறேன். ஆனால் சாதி என்பது ஒழிக்க முடியாதது. பற்பல உருக்களில் இன்றும் வளர்ந்து கொண்டிருப்பதோடு இன்னும் பல புதிய சாதிகள் உருவெடுத்துக் கொண்டிருக்கின்றன.

//
தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் மாற்றவே முடியாத,பிறப்பினாலேயே அறியப்படும் சாதியை ஏற்றுக்கொள்வதும் கைவிடுவதும் அவரவர் விருப்பம்.
//
இதில் முதற்பாதியை நான் மறுக்கிறேன். சாதி என்பது நாமாக வெளிப்படுத்தாமல் யாருக்கும் தெரியப் போவதில்லை. சாதியைக் குறிப்பிடாமல் எதுவும் செய்ய முடியாதா என்ன?

இன்றுள்ள சூழலில் ஒரு மருத்துவரின் மக்கள் மருத்துவர்களாகின்றனர். நடிகரின் மக்களும் அரசியலாரின் மக்களும் அப்படியே. இன்னும் சில ஆண்டுகளில் இப்புதிய சாதிகளின் பிடியில் நமது குமுகாயம் சிக்கும் என்பதில் ஐயமில்லை.

//
நல்ல நிலையில் உள்ளவர்கள் ஊர்,தெரு,மாநிலம்,நாடு என்று சேர்ந்து அதற்கான பொது நலனுக்காக களமிறங்க வேண்டும் என்பதே எனது பேராசை.
//
இது தான் ஒரே தீர்வையாகப் படுகிறது. உங்கள் ஊரில் உள்ளவர்களை ஒன்று திரட்டுங்கள். ஊரார் சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை அரசியலில் ஈடுபடுத்துங்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு பணம் தரப்படுகின்றது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
ஊர் பள்ளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். அப்பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்துவதைத் தடுங்கள்.

கருப்பு போன்றோரின் எழுத்துத் திறனும் வேகமும் என்னை வியக்க வைக்கின்றது. ஆனால் அவர் திறமையை வீணடிக்கின்றாரோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. முகம் தெரியாத பலரை ஈர்க்கும் அவர்போன்றோருக்கு தன்னுடைய ஊரில் உள்ளோரை ஈர்க்க முடியாதா என்ன?

ஒரு ஊரில் இது போல் நடந்தால் அது மற்ற ஊர்களுக்குக் காட்டுத்தீ போல் பரவும் என்பதில் ஐயமில்லை. இதனால் இன்றைய அரசியலிலும் பெரும் மாற்றம் வரும்.

அருள் குமார் said...

கல்வெட்டு,
//*உங்களின் நிலைக்கு மேலே உள்ளவனை நீங்களே அங்கீகாரம் செய்கிறீர்கள்.

*கீழே உள்ளவனை நீங்களே அவமானம் செய்கிறீர்கள்.

*எல்லாரும் அங்கேயே அதே பழைய அடையாளத்தில் இருக்க வகை செய்கிறீர்கள்.

*அதை தொடரவும் விரும்புகிறீர்கள்.
//

சாதியை ஏற்படுத்தியவர்களின் ஆசை இதுவாக இருந்திருக்கலாம். அதற்காக மேற்சொன்னவைகள் இல்லாமல் சாதி இருக்கவே முடியாது என்று சொல்ல இயலாது. இன்றைய நிலையில் சாதியை முழுவதுமாக ஒழிக்க எடுக்கும் முனைப்பில் சிறிதை மேற்சொன்ன விஷயங்கள் தவிர்க்க எடுத்தால் நல்ல பயன் கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

இன்றைக்கு சாதி முதற்கொண்டு எந்த அடையாளத்தையும் புறந்தள்ளும் நான், உன் சாதி என்னவென்று கேட்டால் இயல்பாக சொல்லிக்கொண்டிருந்த நாட்களில் கூட மற்ற சாதியை உயர்ந்ததாகவோ அல்லது தாழ்ந்ததாகவோ நினைத்ததில்லை. இப்படி மற்றவர்களும் இருக்க வாய்ப்பே இல்லையா என்ன?

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நாம் உதாரணம் காட்டிப் பேசிக்கொண்டிருக்கும் எல்லா குழுக்களிலுமே மற்றவர்களைத் தாழ்த்தியோ அல்லது உயர்த்தியோ எண்ணும் மனோபாவம் இருந்துகொண்டுதானிருக்கிறது! எனில் எல்லா குழுக்களையும் அழித்துவிட முடியுமா? முதலாளி தொழிலாளியை தாழ்வாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறான் இன்றைக்கும். ஒரு அளவில் தீண்டாமை கூட இருக்கிறது! முதலாளியை உயர்ந்த வர்கமாக எண்ணும் தொழிலாளிகளும் இருக்கிறார்கள். அங்கே என்ன செய்ய?

உண்மையில் இது நல்ல விவாதமாக அமைந்தமைக்கு உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும். நீங்கள் சொன்ன பல விஷயங்கள் பல வழிகளை(நீங்களே நினைக்காதவையாகக் கூட இருக்கலாம்! :) ) எனக்குள் திறந்துவிட்டிருக்கின்றன. அவற்றைப் பற்ரியும் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன் :) நன்றி!

சீனு said...

You 2 Arul... :(

இரா.செந்தில் said...

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;

கணியனின் இந்த வார்த்தைகளுக்கு முரணாக எழும் எந்த சித்தாந்தங்களும் குழு உணர்வுகளும் ஒழிக்கப்படவேண்டியவையே.

நற்கீரன் said...

Let me pose the question differently:

Is it necessary to end slavery?
Is it necessary to grant equal rights to women?

If not, then we would probaly have to get rid of caste based on birth.

குழலி / Kuzhali said...

//உண்மையில் இந்திய சமூக classification தவறல்ல.//
ஹரிகரரே, நீவிர் சேரியில் இருந்தால் இதை சொல்லியிருப்பீரோ?

//தற்போது சில நூற்றாண்டுகளாக நம்மால் இந்த முறை புரிந்து கொள்ளப்பட்ட விதம் முன்னெடுத்துச்செல்லும் விதம் மிகவும் தவறானது!
//
இருக்காதே பின்னே, செத்து போன பெரியார் கொடைச்சலே இன்னும் தாங்கலை, இதுக்கு முன்னாலே வள்ளலார் வேற, அவங்கவங்களுக்கு இந்திய சமூக classification படி தரப்பட்ட பீயள்ளும், சேறு மிதிக்கும், காவல்நாய் வேலையை பார்த்துக்கொண்டிருந்தா சாதி சங்கம் வைத்து உரிமைக்காக போராடி கேட்குற நிலை வருமா? சே... சே... நாடு கெட்டு போயிடுச்சிப்பா.... என்ன ஹரிகரரே நாஞ் சொன்னது சரிதானே?

Chellamuthu Kuppusamy said...

அருள்,

இந்தச் செய்தியை நீங்கள் நேரிலும் கூட ஏறத்தாழ இதே அழுத்ததுடம் பேசியிருக்கிறீர்கள். பதிவு சற்று கூடுதல் அழுத்தத்துடன் உள்ளது. உங்கள் செய்தி சரியானதா இல்லையா என்ற தீர்மானத்திற்கு வரக்கூடிய சமூக அனுபவன் எனக்கில்லாமல் போகலாம். ஆனால், செய்தியைத் திருத்தமாகச் சொன்ன விதம் இரசிக்குக் வண்ணம் உள்ளது.

Hariharan # 03985177737685368452 said...

//ஹரிகரரே, நீவிர் சேரியில் இருந்தால் இதை சொல்லியிருப்பீரோ?//

சேரி என்பது பொருள், பணம், கல்வி வசதிகள் குறைவான சூழல் என்று எடுத்துக்கொள்கிறேன். நான் அம்மாதிரி சூழலில் இருந்து சுயமாகத்தான் முன்னேறி இருக்கிறேன்.
பூணுல் பார்ப்பான் என அரசே ஆதரிக்காத எதிர்சூழலில் தந்தை ரத்தத்தை சிந்திப் புகட்டிய கல்வி மட்டுமே மேலே ஏற்றிவிட்டது. சமூகத்தில் க்ளாசிபிகேஷன் என்பது குணங்களால் ஏற்படுத்தப்பட்டது அது திரிந்து இன்று சாதியாக நாற்றத்துடன் திரிகிறது.

//இருக்காதே பின்னே, செத்து போன பெரியார் கொடைச்சலே இன்னும் தாங்கலை, இதுக்கு முன்னாலே வள்ளலார் வேற, அவங்கவங்களுக்கு இந்திய சமூக classification படி தரப்பட்ட பீயள்ளும், சேறு மிதிக்கும், காவல்நாய் வேலையை பார்த்துக்கொண்டிருந்தா சாதி சங்கம் வைத்து உரிமைக்காக போராடி கேட்குற நிலை வருமா? சே... சே... நாடு கெட்டு போயிடுச்சிப்பா.... என்ன ஹரிகரரே நாஞ் சொன்னது சரிதானே? //

குழலி,

பீயள்ளுவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த இசுலாம் தந்தது. இந்திய சமூகத்தின் உண்மையான கட்டமைப்பு இதைத் தரவில்லை.

ஈவெரா வெறும் குடைச்சல் என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றிகள்!

நாடு கெட்டுத்தான் போயிருக்கிறது ஜாதி வியாபாரிகள் அரசியலில் முன்னோடியாய்ச் செயல்படுவதால்.

இன்றைய ஆதிக்க சாதியினர் அன்றைய அரசர்களின் வழித்தோன்றல்கள். அரச வம்சம் காவல்நாய் வம்சம் இல்லை என்றைக்கும் அதிகாரத்தில் இருக்கும் வம்சம்.

இன்று சமூகத்தில் அரசு கெஜெட்டில் வசதி வாய்ப்புகளுக்காக மிகப்பின்பட்டுப் போன ஆதிக்க சாதி நடைமுறையில் சக மனிதனை மலம் தின்னச்செய்து விட்டு, சேறுமிதித்து வயல்வேலைக்கு வரும் பெண்களை பம்புசெட் ரூமில் வன்புணர்வதும் என்று(காவல்)நாய் வேலை செய்து சாதி சங்கம் வைத்து சமூக நீதி என்று முதலைக்கண்ணீர் வடிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

என்ன குழலி மனச்சாட்சியோடு பேசுங்கள்!

குழலி / Kuzhali said...

//சேரி என்பது பொருள், பணம், கல்வி வசதிகள் குறைவான சூழல் என்று எடுத்துக்கொள்கிறேன். நான் அம்மாதிரி சூழலில் இருந்து சுயமாகத்தான் முன்னேறி இருக்கிறேன்.

பூணுல் பார்ப்பான் என அரசே ஆதரிக்காத எதிர்சூழலில் தந்தை ரத்தத்தை சிந்திப் புகட்டிய கல்வி மட்டுமே மேலே ஏற்றிவிட்டது
//
உம் தந்தைக்கு உம் படிப்புதான் முக்கியம், அதுவே உமக்கு எல்லாம் தரும் என்ற விழிப்புணர்வை அல்லது காலம் காலமாக இருக்கும் உந்துதலை உமக்காக பூணுல் பார்ப்பான்(நீர் சொன்னது தான்) என அரசே ஆதரிக்காத போதும்(இதுவும் நீர் சொன்னது தான்) உமக்காக ரத்தம் சிந்தி படிக்க வைத்தார், ஏன் அது மற்ற தந்தைகளுக்கு இல்லை, குப்பை அள்ளுபவனும், பேங்கிலும் அரசு அலுவலகங்களிலும் கடைநிலை ஊழியனாகவும், டி குரூப் ஊழியனாகவும் இருந்த(இதுவும் கூட இடஒதுக்கீட்டினால் வாய்த்தது)எத்தனை தந்தைகள் உம் தந்தை போல வாய்த்தனர், உம் தந்தைக்கு மட்டும் குழந்தையின் படிப்பு முக்கியம் என்பது எப்படி தெரிந்தது, படிப்பு வந்தால் எல்லாம் வந்துவிடும் இடஒதுக்கீடு தரப்பட்டும் கூட பலர் படிப்பு பற்றி தெரியாமல் இருப்பதன் காரணம் என்ன? இதில் சமூகத்தின் பங்கு என்ன? சாதியின் பங்கு என்ன?
(நல்ல வேளை என் படிப்பு விடயத்தில் என் தந்தை பூணுல் போடாத பார்ப்பானாக இருந்தார்) யோசித்து பாரும் ஓய்... புரியும்...

//இன்றைய ஆதிக்க சாதியினர் அன்றைய அரசர்களின் வழித்தோன்றல்கள். அரச வம்சம் காவல்நாய் வம்சம் இல்லை என்றைக்கும் அதிகாரத்தில் இருக்கும் வம்சம்.
//
பெரியார்தாசன் சொல்வது போல வரலாறு என்பது காலையில் சுப்ரபாரதத்தில் வருவது போன்று அரசர்களின் பெயர் பட்டியலும், அவர்கள் செய்த போர்களும், அவர்கள் கட்டிக்கொண்டும் வைத்துக்கொண்டும் இருந்த மனைவிமார்களின் எண்ணிக்கையும் ஆசை நாயகிகளின் எண்ணிக்கையும் மட்டுமே என்றிருந்தால் இப்படித்தான் நினைக்கத்தோன்றும், உங்களையும் இதில் சொல்வதற்கொன்றுமில்லை, ஏனெனில் மேலோட்டமான வரலாற்று புத்தகங்கள் இதைத்தான் பேசுகின்றன.

இன்றைக்கு எந்த சாதியை எடுத்தாலும் அவர்கள் தாங்கள் அரசின் வம்சம் என்று கூறிக்கொள்பவர்கள் தான், இதற்கு தாழ்த்தப்பட்டவர்களான பள்ளர்களும், பறையர்களும், பரதவராஜ குலம் என்னும் மீனவர்களும், பள்ளிகளும், பல்லவர்கள் பிராமணர்கள் என்று எல்லா சாதியினரும் சொல்லிக்கொள்வதுண்டு... அதற்காக சில ஆதாரங்களும் காட்டுவதுண்டு...
அழகுமுத்துகோன் (வீரன் சுந்தரலிங்கத்திற்கு பதில் இந்த பெயரை ஒரு இடத்தில் சொன்னீர்களே ஞாபகம் இருக்கா உங்களுக்கு?) சாதி பற்றி சொல்லும்போது 'கோன்' என்பது கோனார் சாதி என்றும் இல்லை இல்லை 'கோன்' என்றால் அரசன் என்று குறிப்பது என்றும் பேசுகின்றனர், அதே போல தேவர், தேவன் (பொன்னியின் செல்வன் புன்னியத்தில் எல்லோருக்கும் தெரிந்த அருண்மொழித்தேவன் பெயர்) என்பது அரசர்களின் பட்டம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது உண்டு. சரி விசயத்துக்கு வருவோம், இப்படியாக ஏதோ ஒரு காலகட்டத்தில் அரசர்கள் அந்த சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் பெயர்களும், அவர்கள் செய்த போர்களும் அவர்களின் மனைவி, ஆசைநாயகிகளின் எண்ணிக்கைகளையும் தாண்டி சமுதாய வாழ்க்கை என்று ஒன்று இருக்கின்றது அதுதான் உண்மையான வரலாறு, வெறும் ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாசு, வைகோ போன்றவர்களை அவர்களின் வரலாற்றை வைத்து இன்றைய சமுதாயம் இப்படித்தான் என்று சொல்லமுடியுமா? இன்றைக்கு தமிழக்த்தை ஆட்சி செய்பவர் கருணாநிதி அவர் 'மருத்துவர்' சாதி, இப்படி சொன்னா புரியுமோ என்னமோ அவர் முடிதிருத்தும் சாதியை சேர்ந்தவர், கருணாநிதி ஆட்சி செய்வதால் முடிதிருத்தும் சாதியினரின் ஆட்சி நடக்கிறது என்று சொல்ல முடியுமா? முடிதிருத்தும் சாதியினர் இன்றைக்கு சமூகத்தில் உயர்நிலையில் உள்ளனர் என்றுதான் சொல்லமுடியுமா? ஆனால் அருண்மொழித்தேவன் ஆட்சியில் இருந்தாலும் நரசிம்ம பல்லவன் ஆட்சியிலிருந்தாலும் எந்த பாண்டியன் ஆட்சியிலிருந்தாலும் அவர்கள் கிராமம் கிராமமாக, வேலி வேலியாக, வரிவிலக்கு செய்து பட்டயம் பட்டயமாக அடித்து கொடை கொடுத்தது எந்த சாதியினருக்கு என்று ஹரிகரரே தெரியுமா உமக்கு?

வரிவிலக்கோடு கொடையாக அரசர்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை விளிம்பு நிலை மக்களின் எழுச்சி காலமான களப்பிரர்கள் காலத்தில் பறிமுதல் செய்து அதை பிரித்து கொடுத்து முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு களப்பிரர்கள் ஆட்சி வீழ்ந்த பின் பாண்டிய அரசன் பவனி வரும்போது தெருவில் உருண்டு பிரண்டு மீண்டு அந்த நிலங்களை வாங்கியது எந்த சாதியென்று தெரியுமா ஹரிகரரே?

படையாட்சி, படையையே ஆட்சி செய்தவர்கள் என்று பெருமை பேசுபவர்களிடம் நான் சொல்வது தான், அது சரி படையாட்சி எல்லாம் இருக்கட்டும் உன் பாட்டன் நிலை என்ன? உன் அப்பன் நிலை என்ன? அட இன்னைக்கு என்ன உன் நிலமை, உன் சாதியினரின் பெரும்பாண்மை மக்களின் நிலையென்ன? எல்லோருக்கும் படிப்பு இருக்கா? மூன்று வேளை சோறு இருக்கா? சட்டை துணி மணி இருக்கா? பன்னி குடிசை மாதிரி இருக்கே உம் வீடு, உம் தெரு நாறிப்போய் இருக்கே? எல்லாத்துக்கும் மேல புள்ளைங்க படிக்க ஒரு நல்ல சூழ்நிலையை வீட்டில் தருகிறாயா? குடிச்சிட்டு வம்பு வளக்கறப்ப புள்ளைங்க எப்படி படிக்கும்(ஹரிகரரே இந்த இடத்தில் உம் படிப்புக்காக ரத்தம் சிந்திய உம் தந்தையோடு இணை செய்து பார்க்கவும்)அப்புறம் என்ன மசுரு படையாட்சி என்று கூறுவேன். இந்த படையாட்சி, கள்ளர், மறவர், தேவர் பெருமை எல்லாம் காவல்நாய் வேலைக்கு தான்... வர்ணாசிரமத்தை காக்க கொஞ்சம் கொஞ்சமாக உருவேற்றப்பட்ட உருவாக்கப்பட்ட காவல்நாய்களுக்கு தீனி தான் இந்த பெருமை எல்லாம்.

//என்ன குழலி மனச்சாட்சியோடு பேசுங்கள்! //
எம்மை சொல்வதற்கு முன் உம் மனசாட்சியை கேளுமய்யா அது என்ன சொல்கிறது என்று....

குழலி / Kuzhali said...

//சேரி என்பது பொருள், பணம், கல்வி வசதிகள் குறைவான சூழல் என்று எடுத்துக்கொள்கிறேன்.
//
இது மட்டுமா சேரி, அடடே உங்களுக்கு சேரினா என்னது தெரியலை போல, நீங்க தமிழ்நாட்டுக்கு வரும் போது சொல்லுங்க, நானும் அப்போது அங்கே இருந்தால் உங்களை நானே கூப்பிட்டுக்கொண்டு போய் காண்பிக்கிறேன், இல்லையென்றால் யாராவது ஆள் ஏற்பாடு செய்கிறேன் சேரி எப்படி இருக்குமென்று உங்களை காண்பித்து வர....

அருள் குமார் said...

//இல்லையென்றால் யாராவது ஆள் ஏற்பாடு செய்கிறேன் சேரி எப்படி இருக்குமென்று உங்களை காண்பித்து வர.... //

குழலி, சேரிக்கான ஹரிஹரனின் விளக்கத்தைப் பார்த்தவுடனேயே உண்மையான சேரியை ஒளியும் ஒலியுமாகப் பதிவுசெய்ய நினைத்திருக்கிறேன். விரைவில் ஆவன செய்யப்படும்.

மற்றபடி இப்போது உங்கள் விவாதத்தின் இடையில் புகுந்து குழப்பாமல் நான் விலகிக்கொள்கிறேன்.

அருள் குமார் said...

மன்னியுங்கள் அனானி. நிச்சயம் உங்கள் பின்னுட்டம் தேவையற்ற பிரச்சனைகளை இங்கே கொண்டுவரும் என்பதால் அனுமதிக்க இயலவில்லை.

அருள் குமார் said...

தாமதமான மறுமொழிக்கு மன்னியுங்கள் மா.சி.

//சாதிப் பிரிவுகளைச் சீர்திருத்தி, மோசமான கூறுகளைக் களைந்து நல்ல அம்சங்களை மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று நடந்த முயற்சிகள் எதுவும், அடிப்படையிலான 'உயர்ச்சி தாழ்ச்சி கருதும்' இழிவை நீக்க முடியவில்லை.
//

இங்கே அறுவை சிகிச்சைகளுக்கான நிலையும் இதேதானே சிவகுமார் :(

மேலும் சாதியை முற்றிலும் அழித்துவிட்டால் உயர்வும் தாழ்வும் நீங்கிவிடும் என நீங்கள் நம்பினால் ஒன்றும் சொல்வதற்கில்லை!

//ஆனால், செய்தியைத் திருத்தமாகச் சொன்ன விதம் இரசிக்குக் வண்ணம் உள்ளது//

நன்றி குப்புசாமி!

தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றி!

Sridhar V said...

//சாதி/மதம்...
தனக்கு கற்பிக்கப்பட்ட ஒவ்வொன்றையும் கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்பவர்கள் அதைத்தாண்டி மேலே போக முடியாது.

சரி அப்படி மேலே என்ன தான் இருக்கிறது..?

ஒன்றுமே இல்லை...
அது ஒரு வெற்றிடம்..
இவர்களால் வெற்றிடத்தில் நிற்க முடியாது.
சாய்ந்து கொள்ள ஏதாவது வேண்டும்.
//

மிகச்சரியான கருத்து. இதைப்பற்றி நான் நிறைய தடவை யோசித்திருக்கின்றேன். ஆனால் கல்வெட்டு அருமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார். நன்றி!!!

ஓகை said...

நல்ல பதிவு. புதிய சிந்தனை. சிறந்த வாதங்கள்.

தலித்துகளைத் தவிர வேறு எந்த ஜாதிக்கும் பெரிதாக பிரச்சனைகள் இல்லை. மற்ற ஜாதிகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் தலித்துகளின் பிரச்சனைகளுடன் ஒப்பிடும்போது அவை ஒன்றுமே இல்லை. இந்தப் பிரச்சனை இருக்கும் வரை மற்ற ஜாதிகள் இருந்தால் என்ன, இல்லாவிட்டல் என்ன?

பார்க்க:

அருள் குமார் said...

நன்றி ஓகை!

உங்கள் பதிவையும் அதில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவையும் முன்பே மேலோட்டமாய் பார்த்தேன். நேரம் கிடைக்காததால் பின்னர் பொருமையாய்ப் படிக்கவேண்டும் என்று வைத்திருக்கிறேன்!

Madhu Ramanujam said...

நீங்கள் நினைப்பது சரி தான். சாதியை முற்றிலும் ஒழிப்பது என்பதெல்லாம் இப்போதைக்கு நடக்கப் போவதில்லை. அதனால், சாதியை சாடுவதை விட்டு, அந்தச் சாதியின் பெயரால் நடந்து வரும் தவறுகளை சரி செய்வதே சாலச் சிறந்தது என்பது என் கருத்து.

அருள் குமார் said...

சரியாய்ப் புரிந்துகொண்டமைக்கு நன்றி மதுசூதனன் :)

குழலி / Kuzhali said...

//தலித்துகளைத் தவிர வேறு எந்த ஜாதிக்கும் பெரிதாக பிரச்சனைகள் இல்லை. மற்ற ஜாதிகளுக்கு இருக்கும் பிரச்சனைகள் தலித்துகளின் பிரச்சனைகளுடன் ஒப்பிடும்போது அவை ஒன்றுமே இல்லை.//
ஓரளவிற்கு இதில் உண்மை இருந்தாலும், நேரடி மோதல், நேரடி அழுத்தம் என்பது மட்டும் தான் பிரச்சினை என்றால் இது சரி, ஆனால் நேரடி மோதல் மட்டும் தான் சாதிப்பிரச்சினை என்றால் அது தவறு,
தலித்களையும் பிற்படுத்தப்பட்ட / மிகப்பிற்படுத்தப்பட்டவர்களிடையேயான மோதலை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது உயர்சாதியினர் என்பது சத்தியமான உண்மை, உங்களுக்கு தெரியுமோ இல்லையோ எனக்கு தெரிந்த செய்தியை பதிக்கின்றேன், ஊரில் நிறைய நிலங்கள் வைத்திருக்கும் சில நிலவுடமை சாதியினர் விடுதலை சிறுத்தைகள் எழுச்சியின் போதும் அதற்கு முன் திரு.இளையபெருமாள் அவர்கள் தலைமையில் தலித்கள் இணைந்து வலுவாக உருவான போதும் என்ன படையாச்சி நீங்க, நீங்க இதெல்லாம் கேட்க கூடாதா? நீங்களாம் இப்படி கேட்காம இருக்கறதாலதான் அவனுங்க(தலித்கள்) ஆடுறானுங்க என்று தூண்டிவிட்ட சம்பவங்கள் நடந்தேறின, இன்றும் நடக்கின்றன, நாங்கலாம் இதை கேட்கமுடியாது நீங்கதான் இதெல்லாம் கேட்கனும் என்று தூண்டுவது இன்றும் நடக்கின்றது, மேலும் ஏற்கனவே தாம் சத்திரிய சாதி என்ற மப்பில் இருப்பவர்களும் இது மாதிரியான செயல்களை செய்கின்றனர். இதைத்தான் நான் என் முந்தைய பின்னூட்டங்களில் காவல்நாய்கள் என்று சொன்னதன் காரணம், தலித் மற்ற பிற்படுத்தப்பட்ட/மிகப்பிற்படுத்தப்பட்டவர்களின் மோதலில் முக்கிய பங்கு (இது மட்டுமே காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் முக்கிய காரணம்) உயர்சாதியினரின் பங்கு இருக்கின்றது, அவ்வளவு ஏன் 1987 வன்னியர் சங்க சாலைமறியல் போராட்டத்தை அடக்க சாதி கலவரத்தை காவல்துறையே தூண்டியது, இதை பெருமையாக உளவுத்துறை அதிகாரி ஒருவர் தன் பணிக்கால சாதனையாக குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதியபோது குறிப்பிட்டிருந்தார், ஓகை நீங்கள் நினைப்பதும் கேள்விப்படுவதும் ஊடகங்களால் உங்களுக்கு தெரிவிக்கப்படுவது மட்டுமே உண்மையல்ல அதையும் தாண்டி நிறைய இருக்கின்றது, ஒன்று நீங்களை அதை நேரில் பார்க்கனும், அல்லது நேரில் பார்த்தவர்கள் சொல்வதை நம்பும் மனநிலை வேண்டும், இரண்டும் இல்லையென்பதால் ஐம்பது சதவீத எச்சில் என்றுதான் எழுத தோன்றும்.

Hariharan # 03985177737685368452 said...

//உம் தந்தைக்கு உம் படிப்புதான் முக்கியம், அதுவே உமக்கு எல்லாம் தரும் என்ற விழிப்புணர்வை அல்லது காலம் காலமாக இருக்கும் உந்துதலை உமக்காக பூணுல் பார்ப்பான்(நீர் சொன்னது தான்) என அரசே ஆதரிக்காத போதும்(இதுவும் நீர் சொன்னது தான்) உமக்காக ரத்தம் சிந்தி படிக்க வைத்தார், ஏன் அது மற்ற தந்தைகளுக்கு இல்லை//

என்னை விடுதியிலே சேர்த்துப் கல்லூரிப் படிப்பைப் படிக்கவைக்க வேண்டும் என்பதை பள்ளிப் படிப்பின் போதே இலக்காகக் மாணவனாக நான் கொண்டிருந்ததும் முதல் உந்துதல், இதை நிறைவேற்றிக்கொள்ள எனது பெற்றோரை வீட்டில் ஒரு அறைக்குள் இருநாட்கள் பூட்டி சிறைவைத்ததும் பிரதான உந்துதல்கள்.

தனி மனிதனுக்குத் தனது இலக்கு தெளிவாக இருக்கவேண்டும். சில நாட்களில் "போஸ்ட்பாக்ஸ்" ஆகப் புரொமோஷன் ஆகக்கூடிய டவுசர் போட்டுப் பள்ளிக்குச் செல்லும் போதே எது எங்கு எடுத்துச்செல்லும் என்று பகுத்தறிவுக்கு வேலை தரவேண்டும்.

பிரியாணிப் பொட்டலத்துக்கும் பேட்டாக் காசுக்கும் லாரியேறி சிறைநிரப்பும் போராட்டங்களில் பஞ்க்கேற்றபடி இருக்கும் அப்பன்களை படிக்கும் மாணவர்களாகிய மகன்கள் தைரியத்துடன் தனது வீட்டுச் சிறையிலிட்டு ரிவிட் அடிக்க வேண்டும்.

படித்து விளங்கிவந்து தனது சூழலை மேம்படுத்திக்கொள்ளாத காரணத்திற்கு உயர்சாதி என்றும் வர்ணாஸ்ரமம் என்று ஏதானும் ஆ! சிரமங்களைச் சாடுவது
சேரிக்குள்ளேயே இன்னொரு வீடு/வீதி என்று தொடரமட்டுமே அனுமதிக்கும்.

Better to be alone than in a bad company!

//சேரி என்பது பொருள், பணம், கல்வி வசதிகள் குறைவான சூழல் என்று எடுத்துக்கொள்கிறேன்//

சேரி என்ற அமைப்புக்கு பிரதானம் இவையில்லாமையால் வருபவைகளே வெளிப்புற -உட்புற சுகாதாரக்குறைவு என எல்லாமே கல்வி,பொருள்,பணம் இல்லாததால் /முறையாகப் பயன்படுத்தாததால் வருவது.

ஓகை said...

//என்ன படையாச்சி நீங்க, நீங்க இதெல்லாம் கேட்க கூடாதா? நீங்களாம் இப்படி கேட்காம இருக்கறதாலதான் அவனுங்க(தலித்கள்) ஆடுறானுங்க என்று தூண்டிவிட்ட சம்பவங்கள் நடந்தேறின,//

நான் இதை ஒத்துக் கொள்கிறேன். இதற்கிணையான சம்பவங்களைக் கண்டிருக்கிறேன். அதனால்தான் என் பதிவில் ஒரு பின்னூட்டத்தில் அது ஐம்பத்திமூன்று சதவீத எச்சில் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கூறியிருகிறேன்.

தூண்டப்படுவதால் இந்து நடக்கிறது அதனால் தூண்டுகிறவர்களைச் சாடுகிறோம் என்றால் அது சரிதான். அதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் தூண்டப்படுகிறவர்களும் சாடப்படுகிறார்களா என்பது என் கேள்வி. மேலும் தூண்டுதல் மட்டுமே தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.

மூன்றைப் பொருத்தவரையில் 15ம் ஒன்றுதான் 50ம் ஒன்றுதான் என்று நான் கூறியதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

எனக்கு எந்த அளவுக்குத் தெரியும், எனக்குள்ள அனுபவங்கள் என்னென்ன, வெரும் ஊடக அறிவை மட்டுமே கொண்டிருக்கிறேனா என்பது எப்படி உங்களுக்குத் தெரியும்? உங்களைப் பற்றி ஏதும் அறியாத நிலையில், உங்கள் கருத்துகளை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதற்காக நான் அவ்வாறு ஒரு முடிவுக்கு வரமுடியுமா? யாரைப் பற்றியும் அந்த முடிவுக்கு வர நான் தயாராய் இல்லை.

Anonymous said...

//தூண்டப்படுவதால் இந்து நடக்கிறது அதனால் தூண்டுகிறவர்களைச் சாடுகிறோம் என்றால் அது சரிதான். அதை நான் மறுக்கவே இல்லை. ஆனால் தூண்டப்படுகிறவர்களும் சாடப்படுகிறார்களா என்பது என் கேள்வி.//

சிலருக்கு சிலநேரங்களில் சில பழமொழிகள் மறந்துபோகும். உதாரணத்துக்கு

1. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் (எய்தவன் நல்ல காரணத்துக்காக எய்ய நினைத்தான் (அவனவன் அந்தந்த வேலையைச் செய்தால் சரியாக இருக்கும், அதற்க்கு அவனவன் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் நன்றாகத்தானே இருக்கும்!) ஆனால் அம்புக்கென்று தானாய் ஒரு மனம் இருக்கிறது, அது குத்தவேண்டும் என்று நினைப்பவனை கரெக்டாகப் போய்க் குத்துகிறது, ஆக முடிவாக வில்லுக்கு இதிலே சம்பந்தம் ஏதுமில்லை)

2. தும்பை விட்டு வாலைப் பிடிப்பானேன் (ஏனென்றால் மாடு ஓடும்போது தும்பு அலட்டிக்கொள்ளாமல் கிளுக் கிளுக்கென்று அடக்கமாகத்தான் ஆடுகிறது, ஆனால் வாலின் ஆட்டம்தான் தாங்கமுடியவில்லை, பார்க்கச் சகிக்கவில்லை ;-))

வில்லை ஒடித்தால் அம்பு எவனையும் குத்தாது, தும்பை இழுத்து வைத்து மரத்தில் கட்டினால் மாடு எவனையும் முட்டாது - இது புரியாதே யாருக்கும்!!

ESMN said...

//தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா? 'அவன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது?' என்று சாதிச்சண்டைகளைச் சாடியவர்கள் கார்கில் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தபோது அதே கேள்வி என்னைக் குடைந்து, 'பாக்கிஸ்தானி உடம்புல மட்டும் பச்சை ரத்தம் ஓடுதா என்ன?' என்று கேட்கவைத்தது. இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?
//

very good blog...