Tuesday, December 19, 2006

நட்சத்திர மாணவர்கள்

ன்று வெட்டிப்பயல் அவர்களின் நட்சத்திரப் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் "கடந்த வாரங்களின் நட்சத்திரங்கள்" பகுதியைக் கவனித்தேன். தொடர்ந்து மூன்று ஒன்று விட்ட ஒரு வாரத்தின் நட்சத்திரங்களுக்குள் ஒரு இனிய ஒற்றுமை! ஆம், வெட்டிப்பயல், செந்தழல் ரவி மற்றும் நான்... மூவரும் கடலூர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள்!!


பார்த்ததும் ஒரு சின்ன சந்தோஷம். உடனே உங்க கிட்ட பகிர்ந்துக்கலாமேன்னுதான் இந்தப் பதிவு :)

பின் குறிப்பு: எங்களுக்கெல்லாம் ரொம்ப காலம் முன்பே மின்னிய, எங்கள் பள்ளியின் இன்னொரு நட்சத்திரம் நம்ம குழலி என்பதையும் இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன் :)

Wednesday, November 29, 2006

மகனாய் இருந்தவர்கள்!

ல்லூரி விடுதி நாட்களில் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும்போது அப்பாவின் பொதுவான புலம்பல்(!)களில் ஒன்று, "பணம் வேணும்னாதான் லெட்டர் போடணுமா? அப்படி எழுதறப்பவாவது நாலு வார்த்தை எல்லாரையும் விசாரிக்கறதில்லை! 'அன்புள்ள அப்பா, பணம் இல்ல; இவ்ளோ பணம் அனுப்புங்க'ன்னு ரெண்டே ரெண்டு வரிதான்!". எப்போதும் இந்தக் கேள்விகளுக்கு மொளனமாய் வழிந்துவைப்பது எங்கள் வழக்கம்.

இப்படி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள் அப்பா ஒரு முறை வசமாக மாட்டினார். எங்கள் கிராமத்து வீட்டுக்குச் சென்றிருந்த போது, பொழுதுபோகாமல் பழைய அலமாரிகளைக் குடைந்ததில் கிடைத்த ஒரு பொக்கிஷம் இது...



அன்புள்ள அப்பாவுக்கு,
நலம், நலம் காண நாட்டம். நான் தீபாவளிக்கு மாமா பரமசிவம் ஊருக்கு சென்றிருந்தேன். அவர் சைக்கிளையும் எடுத்து வந்துள்ளேன். என்னிடம் இப்போது பணம் இல்லை. உடனடியாக பணம் ரூ. 40 அனுப்பி வைக்கவும்.

பிற பின்பு.

இப்படிக்கு,
M. Sivasamy

முகவரி:-
மா. சிவசாமி,
I B.A
வரிசை எண் 437
சரபோஸி கல்லூரி
தஞ்சை

வழக்கமான டெம்ளேட்டில் ஒரு வரி சேர்த்திருக்கிறார்! வீட்டில் எல்லோரையும் மொத்தமாய் அழைத்து, இந்த கடிதத்தைக் காண்பித்து அப்பாவிடம் நியாயம் கேட்டதற்கு...

:))

வேறென்ன செய்திருப்பார் என நீங்கள் நினைக்கிறீர்கள்!

எல்லா அப்பாக்களுமே மகனாய் இருந்தவர்கள்தானே :)

Sunday, November 26, 2006

தொடரும்...

காலேஜில் எக்ஸாமும் கல்ச்சுரல்ஸ்ஸூம் ஒன்றாக வந்தது போல், சென்ற வாரம் முழுக்க அலுவலக வேலையும் நட்சத்திர வாரமும் ஒன்றாக வந்து திணரடித்துவிட்டன! மூன்று இரவுகள் விழித்திருக்கும்படியான வேலைக்கு நடுவில் பதிவுகள் இடுவதும் பின்னூட்டங்கள் வாசிப்பதும் நல்ல இளைப்பறல்களாக இருந்தது. ஆனாலும், நட்சத்திர வாரத்தில் எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்த அனைத்தையும் எழுத முடியாமற் போனது எனக்கு வருத்தம் தான்.

இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தும், முன்னேற்பாடாய் எந்த பதிவையும் முழுமையாய் எழுதிவைத்துக்கொள்ளாதது என் தவறுதான். என்ன செய்ய? படிக்கும்போது எக்ஸாமுக்குக்கூட கடைசிநாள் உட்கார்ந்து படித்தே பழக்கம் எனக்கு. இன்னும் அந்தப் பழக்கம் மாறவில்லை என்பதைத் தெளிவாக உணரமுடிந்தது :)

தமிழ்மணத்தின் இந்த நட்சத்திர சேவையின் முழு வீச்சையும், நாம் நட்சத்திரமாக இருக்கும்போதுதான் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். இங்கு அதிக அறிமுகமில்லாத எனக்கு ஓரளவு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்ததுடன், தனிமடல் மூலம் தொடர்புகொண்ட(வலைப்பதிவர் அல்லாதவர்கள் உட்பட) சில நல்ல நண்பர்களைக் கொடுத்திருக்கிறது இந்த நட்சத்திர வாரம். சாதியம் பற்றிய பதிவில், கல்வெட்டு அவர்களுடனான விவாதம் பல புதிய சிந்தனைகளுக்கு வழிவகுத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பொதுவாய், நிறைய எழுத வேண்டும் என்ற ஆர்வம் எழுந்திருக்கிறது. முன்பெல்லாம் வாரக்கணக்கில் எதுவும் எழுதாமல் இருப்பது போலல்லாமல், அடிக்கடி எழுதவேண்டும் என்ற உந்துதல் வந்திருக்கிறது. பார்க்கலாம்... :)

மற்றபடி, இந்த வாய்ப்பளித்த தமிழ்மணம், மதி அவர்கள், படித்து ஊக்கம் கொடுத்த அனைத்து நண்பர்கள் மற்றும் என் அலுவலகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், சென்ற வார நட்சத்திரமாயிருந்து என்னை வாழ்த்தி வரவேற்ற துளசியக்கா ஸ்டைலில், புதிதாய் வரவிருக்கும் நட்சத்திரத்திற்கு என் வாழ்த்துக்களைச் சொல்லி வரவேற்கிறேன் :)

தொடரும் உங்கள் ஆதரவை எதிர் நோக்கி,இன்னும் நான் பேச நினைத்த, நினைக்கும் அனைத்தும் இனிவரும் என் இடுகைகளில் தொடரும்...

நட்புடன்,
அருள்.

Saturday, November 25, 2006

எனக்குத் தெரியாத நான்!

பொதுவாகவே நம் அனைவரின் மனதிலும் நம்மைப்பற்றியே ஒரு பிம்பம் இருக்கும். பெரும்பாலும் இந்த பிம்பம் நம் நல்ல குணங்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இளங்கலை இறுதியாண்டுவரை எனக்குள் என்னைப்பற்றி இருந்த பிம்பமும் அப்படித்தான்.

அருள் ரொம்ப சாஃப்ட். ரொம்ப கேர் எடுத்துப்பான். கோவமே வராது. எல்லாருக்கும் ரொம்ப ஹெல்ப் பண்ணுவான்... இப்படி மற்றவர்கள் என்னைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட அந்த பிம்பம், ஒரு நாள் சுக்கு நூறாக உடைந்து போனது! அன்றுவரை, நல்லதை மட்டும் தானே நேரில் சொல்வார்கள் என்பது உறைக்கவே இல்லை!

ளங்கலை இறுதியாண்டின் இறுதி நாட்கள். மாற்றி மாற்றி ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆளாளுக்கு பக்கம் பக்கமாக எழுதிக்கொள்வதால் பழைய டைரிகளை ஆட்டோகிராஃப் நோட்டாக உபயோகப்படுத்தினோம். என் டைரியைப் புரட்டினால் ஒரே புகழ் மழை. நீ அப்படி... இப்படி... உன்னைப்போல் ஒருவன் உண்டா என்றெல்லாம். இத்தனைக்கும் என் டைரியின் முதல் பக்கத்தில் 'என்னைப் பற்றிய குறைகளையும் குறிப்பிட்டு எழுதுங்கள். என்னைத் திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்' என்றெல்லாம் அறிவிப்பு வேறு! 'யோசித்தாலும் உன்னிடம் குறைகள் ஏதும் காணமுடியவில்லை' என்று சிலர் எழுதியிருந்தார்கள். நான் எதிர்பார்த்ததும் அதுதானே!

ஆனால், மொத்தத்திற்கும் சேர்த்து எழிதினான் ஒருவன். என் நண்பன் அருணகிரி. எடுத்த எடுப்பிலேயே என்னைச் சுருட்டிப் போட்டுவிட்ட அந்த ஆட்டோகிராஃப் இப்படி ஆரம்பிக்கிறது...
அருள்,
நாம் பழகிய இந்த மூன்றாண்டுகளில் நினைவுகளைப் புரட்டிப் பார்த்து
மகிழும் அளவிற்கு நம் நட்பு உருவாகவில்லை என்பதே உண்மை!

ஒரு கணம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. மனதை கொஞ்சம் திடப்படுத்திக் கொண்டுதான் அடுத்த வரிகளைத் தொடர முடிந்தது.

உன்னுடன் நான் பேசும்போதெல்லாம் ஊசியில் நூல் கோர்ப்பது போலவே நிதானமாய் வார்த்தைகளை விடுவேன். ஏன் என்றால் எந்த வார்த்தையை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று எனக்கு இது வரை புரிந்ததில்லை. I year-ல் hostel-ல் 'அறைந்தது' இன்னும் என் நினைவுகளில். மேலும் இந்த வருடம் பொன்னுசாமி மூலம் வந்த கடித பிரச்சனை இவையெல்லாம் நான் விசாரிக்கப்படாமலேயே நீ தண்டித்த குற்றங்கள்.

இவையெல்லாம் உன்னிடம் இருந்து என்னை மனதளவில் மட்டுமல்ல நடைமுறையிலும் பிரித்து வைத்திருந்தது. எப்படிப் பழகினால் உன்னிடம் நட்பை பெறலாம் என்பதை விட எப்படி பழகினால் உன்னிடம் வெறுப்பை பெறாமல் இருப்பேன் என்றே இதுவரை நினைத்து பழகி வந்தேன்.

இவற்றில் எதையுமே என்னால் ஏற்க முடியவில்லை. நான் என்றைக்குமே விரும்பாத குணங்கள் இவை. ஆனால் இவை என் குணங்களாக ஒருவனால் நினைக்கப்பட்டிருக்கிறது! கடமைக்கா எனத் தெரியவில்லை. என்னைப்பற்றி கொஞ்சம் நல்ல விதமாகவும் சிலவற்றைச் சொல்லிவிட்டு, கடைசியில் இப்படி முடித்திருந்தான்.

என் சார்பாகவும் நம்மைச் சார்ந்த நண்பர்கள் சார்பாகவும் உன்னிடம் ஒரு வேண்டுகோள். நாக்கின் நீளம் வெறும் ஆறு இன்ச் தான். ஆனால் அது ஆறடி மனிதனையே கொன்றுவிடும். எனவே பேசும்முன் சற்று சிந்தித்துப் பேசு!

அப்புறம் இப்படி ஒரு கவிதை வேறு...

என் மீது நீ/ அன்பு செலுத்தாததைப்பற்றி/ எனக்கு கவலையில்லை/ அன்பு செலுத்துவதை/ ஓவியங்களில் இருந்தாவது/ கற்றுக் கொள்கிறாயே அது போதும் எனக்கு/ அந்த நல்ல நேசம்/ நகர்ந்து நகர்ந்து/ மனிதனிடத்திலும்/ மையம் கொள்ளட்டும்!

ந்த ஆட்டோகிராஃப் என்னை ரொம்பவும் பாதித்துவிட்டது. அதன் பின் ஆட்டோகிராஃப் எழுத இந்த டைரியை யாருக்குமே கொடுக்கவில்லை. 'அது தீந்துபோச்சு...' என்று சொல்லி புதுசு கொடுத்தேன். வெகுநாள் வரை யாரிடமும் அதைப் பகிர்ந்துகொள்ளவும் இல்லை. ஆனால் அடிக்கடி என்னை அழ்ந்த சிந்தனையில் ஆழ்த்திவிடும் அந்தப் பக்கங்கள். அந்த சிந்தனையின் தாக்கத்தில் விளைந்த பயன்கள் நிறைய.

உண்மையில் இந்த ஆட்டோகிராஃப்-க்கு அப்புறம் தான் என்னைப்பற்றிய உண்மைகளை என்னிடமே நேர்மையாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தேன். அதன் பின், என் பேச்சு, நடவடிக்கைகளில் இன்னும் கவனம் கூடிற்று. அடுத்தவர்களைப் பற்றி எந்த ஒரு முடிவு எடுக்கும் முன்னும் நிறைய யோசிக்கக் கற்றேன். அவனின் சூழல்கள் என்னை இப்படித் தவறாகப் புரிந்துகொள்ள வைத்துவிட்டன என்று இன்றுவரை நம்பினாலும், அவ்வப்போது என்னை சுய விசாரனை செய்துகொள்ள, இன்றுவரை அந்த ஆட்டோகிராஃப் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது!

Friday, November 24, 2006

சிலை சொல்லும் கதை

குதிரையின் மீது நிர்வானமாய் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்னிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் ஒரு இளவரசி. தன் நாட்டின் நலனுக்காக இப்படிச் சொய்யவேண்டிய சூழல் அவளுக்கு.

எங்கள் AVC கல்லூரியின் கலையரங்கத்தின் முன் இந்த சிலை முன்பு இருந்தது. ஒத்திகைகளின் இடையிலோ அல்லது தனிமை தேவைப்படும்போதோ, இந்த சிலைக்கு எதிரில் இருந்த மைதானத்தை ஒட்டிய பெஞ்சில் அமர்வது என் வழக்கம். இவளின் கதை உண்மையா பொய்யா என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் ஏனோ இந்த சிலையை எனக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு ஓவிய கண்காட்சிக்காக அந்த சிலையைப் பார்த்து நான் வரைந்த ஓவியம் தான் மேலே இருப்பது.

ரி கதைக்கு வருவோம். முன்னொரு காலத்தில், இவளுடைய நாட்டில் சில ஆண்டுகளாக மழை பொய்த்துப்போய் பெரும் பஞ்சம் சூழ்ந்தது. அரசினால் சமாளிக்கவே முடியாத சூழல். ஏதேதோ முயற்சிகளுக்குப் பின், மழை வேண்டி ஒரு யாகம் நடத்துகிறார் மன்னர். அந்த யாகத்தின் ஒரு பகுதியாய், அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு கன்னிப் பெண், நிர்வானமாய் குதிரையின் மீதமர்ந்து நாட்டை வலம்வர வேண்டும்!

நாடெங்கும் இந்தச் செய்தி அறிவிக்கப் படுகிறது. இந்த யாகத்திற்கு உதவ முன்வரும் பெண்ணுக்கு அரசின் சார்பில் என்னென்ன வழங்கப்படும் என்றும் அறிவிக்கிறார்கள். ஆனால் நாட்டிற்காகவோ, பரிசுப் பொருள்களுக்காகவோ யாருமே தங்களின் மானத்தை இழக்க முன்வரவில்லை அந்த நாட்டில்! யாகத்திற்கு குறிக்கப்பட்ட நாள் நெருங்க நெருங்க மன்னர் மிக வேதனைக்குள்ளாகிறார். இறுதியாக, தன் நாட்டிற்காக தானே அந்த யாகத்திற்கு உதவுவதாக இளவரசி முடிவெடுக்கிறாள்!

இளவரசியின் இந்த முடிவும் நாடெங்கும் அறிவிக்கப்படுகிறது. மனம் நெகிழ்ந்த மக்கள், தங்கள் இளவரசியின் மானம் காக்க ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அதன் படி, யாகத்தன்று, இளவரசி நிர்வானமாய் குதிரையில் நாட்டை வலம் வரும்போது எல்லா மக்களும் வீட்டுக்குள் அடைந்துகொள்கிறார்கள். ஒருவரென்றால் ஒருவரைக்கூட வெளியில் பார்க்க முடியவில்லை. வீடுகளின் கதவு, ஜன்னல்கள் கூட அடைக்கப்பட்டு கிடக்கின்றன. நாட்டையே காலி செய்துவிட்ட மாதிரி வெறிச்சோடி கிடைக்கிறது எல்லா வீதிகளும்.

இப்படியாக இளவரசி வலம் வர, நாடுமுழுக்க பெருமழை பெய்ய ஆரம்பிக்கிறது என்பதாக அந்தக் கதை முடிகிறது!

பின்குறிப்பு: அந்த இளவரசியின் பெயர் முதற்கொண்ட விபரங்கள் சிலைக்குக் கீழே எழுதப்பட்டிருந்ததாய் நினைவு. இப்போது மறந்துபோய்விட்டது :(

அத்துடன், இந்தச் சிலையை எங்கள் கல்லூரியில் ஏன் வைத்தர்கள் என்பது பற்றியும் தெரியவில்லை!

Thursday, November 23, 2006

தலைவனும் தொண்டனும்

ரசியல் என்றில்லை. எல்லாத் துறையிலுமே தொண்டனைக் கொண்டுதான் தலைவனின் போக்கு அமைகிறது. அல்லது தன் போக்குக்குத் தொல்லைதராத விதத்தில் தொண்டனை வைத்திருக்கத் தெரிந்த தலைவன், தான் போன போக்கில் கவலையின்றிப் போகிறான்.

தலைவன் எது செய்தாலும், குறைந்தபட்சம் ஒரு பரிசீலனை கூட இல்லாமல், ஏற்பவனே தொண்டன் என்று யார் கற்றுக்கொடுத்தார்கள் எனத்தெரியவில்லை. தொண்டர்கள் இப்படி ஏற்பதற்கு ஒரு முக்கிய காரணமாக அவர்களின் ஈகோவைக் கருதுகிறேன் நான். தன் தலைவனின் அவமானம் தன் அவமானமாகப் போய்விடுகிறது அவனுக்கு. ஒரு தலைவன் செய்யும் எல்லா தவறுகளுக்கும், சக மனிதர்களிடம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான் தொண்டன். அதிலும் அந்த சக மனிதன் எதிர்ப்பக்கத் தலைவனின் தொண்டனாக இருந்துவிட்டால், தன் தலைவனின் தவறுகளுக்கான நியாயங்களையும் கற்பிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது அவனுக்கு - தன் தலைவன் செய்தது தவறென்று தானே உணர்ந்திருந்தாலும் கூட! ஆனால், இதையெல்லாம் நினைத்துப்பார்த்தா ஒரு தலைவனின் செயற்பாடுகள் இருக்கின்றன?!

தான் எது சொன்னாலும்; செய்தாலும் எந்தக் கேள்வியும் கேட்காமல் கடைசிவரை உடன்வர ஒரு கூட்டம் இருக்கிறது எனில், உண்மையில் நல்லது செய்யவேண்டும் என்று வருகிற தலைவன் கூட மாறிவிடுவான்!

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, என் தாத்தா(அம்மாவின் அப்பா) தி.மு.க சார்பில் தொடர்ந்து மூன்று முறை விருத்தாசலம் பஞ்சாயத்து யூனியன் ச்சேர்மனாக இருந்தார். தீவிரமான தி.மு.க குடும்பம் எங்களுடையது. பாட்டி வீட்டிற்குப் போனால் ஆங்காங்கே கலைஞர் அவர்கள் படமும், கழக சம்பந்தமான இதழ்களுமாகவே இருக்கும். தாத்தா, கலைஞரின் அருமை பெருமைகளை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பார். கலைஞர் அவர்கள் எழுதிய எல்லா புத்தகங்களும் தாத்தாவின் அலமாரியில் உண்டு. ஊரிலிருந்து தாத்தாவுக்கு பொங்கல் வாழ்த்து அனுப்ப, இன்லேண்ட் லெட்டரில் கலைஞரின் படம் வரைந்து அனுப்புவேன். இப்படியே கலைஞர் எனக்கும் தலைவராகிப் போனார்.

பள்ளி விடுமுறை நாட்கள் பெரும்பாலும் பாட்டி வீட்டில்தான். நாங்கள் எப்போது வருவோம் என்று ஒரு நண்பர்கள் கூட்டம் எங்களுக்காகக் காத்திருக்கும். அங்கே எங்களுக்கு எதிர் கோஷ்டி ஒன்றும் இருந்தது. அவர்களெல்லாம் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்! எப்போதும் எலியும் பூனையுமாகத் திரிவோம் நாங்கள். 'கட் கட் கமர்கட், கருணாநிதிய ஒழிச்சி கட்' என்று கத்திக்கொண்டே அந்த கோஷ்டி ஒருவர் பின்னால் ஒருவர் சட்டையைப் பிடித்தபடி சந்து சந்தாய் இரயில் விடும். அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தார் என நினைக்கிறேன். 'எனக்கு ஒரு டவுட்டு... எம்ஜியாரு அவுட்டு' என்று கத்திக்கொண்டு நாங்களும் இரயில் விடுவோம். கலைஞர் எங்களுக்குத் தலைவர் ஆன ஒரே காரணத்தால் எம்.ஜி.ஆர் எதிரியானார்! இரு வண்டியும் எதிர்ப்படும் சின்ன சந்துகளில் கடந்துபோகவும் முடியாமல், பின்வாங்கவும் மனமில்லாமல் கைகலப்பு கூட நிகழ்திருக்கிறது! நங்கள் பின்வாங்கினால் எங்கள் தலைவர் அல்லவா தோற்றுவிடுவார். அதனினும் பெரிய அவமானம் ஏதாவது இருக்கிறதா என்ன?!

எங்கள் இரு கோஷ்டியினருக்குமே கலைஞர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார், எம்.ஜி.ஆர் என்னென்ன நல்லது கெட்டது செய்தார் என்று உண்மையாய்த் தெரிந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனாலும் நாங்கள் எங்கள் தலைவர்கள் இவர்கள்தான் என முடிவு செய்துவிட்டிருந்தோம். இந்த முடிவு செய்யும் விஷயம்தான் பிரச்சனை என்று நினைக்கிறேன். நாம் எடுக்கும் முடிவுகளைப் பின்னர் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடிவதில்லை, அல்லது அது அவ்வளவு எளிதில்லை.

'தன் தொண்டர்களைத் தானே திட்டும் ஒரே ஒரு தலைவரைத்தான் நான் பார்த்திருக்கிறேன்' என்று தந்தை பெரியாரைப் பற்றி என் அப்பா அடிக்கடி குறிப்பிடுவார். தன் குழந்தைக்குப் பெயர் வைக்கக் கோரும் தொண்டர்களிடம் கட்டணம் கேட்பாராம் அவர். கண்மூடித்தனமாக தன்னை ஒரு தலைவனாக அவர்கள் ஏற்பதைக்கூட அவர் விரும்பவில்லை! சுய மரியாதையைத் தன் 'தலைவன்' என்கிற இடத்திலிருந்தே ஆரம்பித்திருக்கிறார் அவர். அப்படித்தான் நானும் நினைக்கிறேன். பெரியார் சொன்ன கருத்துக்களையே கூட, நான் ஒருமுறை பரிசீலித்த பின்னரே ஏற்றிருக்கிறேன். அவரின் கருத்துக்களில் நான் ஏற்காத சிலவும் உண்டு. ஏற்றுக்கொண்ட கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக்களை இன்றைக்கு யாராவது முன்வைத்தாலும் அவற்றை பரிசீலிக்கிறேன்! உண்மையில் பெரியார் அவர்கள் விரும்பிய சுயமரியாதையும் இதுதான் என நான் நம்புகிறேன்.

ன்றைக்கும், படிக்காத பாமர மக்கள் மட்டும் என்றில்லாமல், நன்கு படித்த; சிந்திக்கத்தெரிந்த பலரிடமும் கூட கண்மூடித்தனமாக ஒரு தலைவனைப் பின்பற்றும் போக்கு இருப்பதுதான் மிகவும் வருந்தச்செய்கிறது. எம்.ஜி.ஆர்-ஐ தொடர்ந்து ஜெயலலிதா அவர்களே தன் தலைவி என்று முடிவெடுத்துக்கொண்ட ஒரு நண்பன், 'என்ன இருக்குன்னு விஜயகாந்துக்கு பின்னாடி ஒரு கூட்டம் அலையுது!' என்று ஆச்சர்யப்பட்டான். நீயும் அப்படித்தானடா இருக்கிறாய் என்று சுட்டிக்காட்டியதும் தன் தலைவியின் அருமை பெருமைகளை விளக்க ஆரம்பித்துவிட்டான். அவரிடம் என்னளவில் நான் கண்ட குறைகளைக் குறிப்பிட்டதற்கு, அதற்கான நியாயங்களைத்(!) தேட ஆரம்பித்துவிட்டான். விஜயகாந்த் அவர்களின் தொண்டர்களிடம் கேட்டால் நீ கேட்ட கேள்விகளுக்கான நியாயங்கள்(!) கூட நிச்சயம் கிடைக்கும் என்று சொன்னதுடன் அந்த விவாதத்தை முடித்துக்கொண்டேன். வேறென்ன செய்ய, இன்னும் எங்கள் பாட்டி ஊரின் கிராமத்து ரயிலை ஓட்டிக்கொண்டிருக்கிறான் அவன்!

கடைசியாய் ஒரு பஞ்ச்(டயலாக்!). வள்ளுவன் சொன்னதானாலும் சரி, வழிப்போக்கன் சொன்னதானாலும் சரி; நீ ஒருமுறை பரிசீலித்து முடிவெடு. அந்த முடிவும் ஒரு முடிவான முடிவில்லை என்பதை உணர்ந்திரு.

தலைவர்களின் தவறுகளைத் தயங்காமல் தட்டிக்கேட்கிற - முடியாதபட்சத்தில் ஏற்கவாவது மறுக்கிற - தொண்டர்களால் மட்டுமே ஒரு உண்மையான தலைவனைத் தரமுடியும்!

பின்குறிப்பு: உண்மையிலேயே எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படாததால், 'எந்த தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணத்துடன் இப்பதிவு எழுதப்படவில்லை' என்பன போன்ற டிஸ்க்ளைமர்களைத் தவிர்க்கிறேன்.

Wednesday, November 22, 2006

கல்லூரி கலாட்டாக்கள்

நாங்க B.Sc படிச்சப்போ எப்போ பாத்தாலும் கலை இலக்கியம்னு சுத்திகிட்டு இருந்தோம். ஆனா MCA வந்தப்புறம் ஒரே கலாட்டா, கூத்துதான். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி கொஞ்சம் ஸ்டிரிக்ட். அதுலயும் physics, computer science டிப்பாட்மென்ட்னா கேக்கவே வேணாம். internel marks க்கு பயந்தே வாழ்கைய ஓட்டணும். ஆனா, எங்க கலை, இலக்கிய தாகத்துக்கு அங்க கிடைச்ச தீனி வேற எதப்பத்தியும்(படிப்பயும் சேத்துதான்!) எங்கள யோசிக்க விடல.

அதுக்கு நேர்மாறா, சென்னை crescent-ல கலை இலக்கியத்துக்கெல்லாம் வேலையே இல்லை. ஆனா, சினிமாவ மிஞ்சற கலாட்டாவெல்லாம் தினமும் பாக்கலாம் எங்க கிளாஸ்ல. சேந்த புதுசுல ஊர் பசங்கல்லாம் ஏதொ புது கிரகத்துல கொண்டுபோய் விட்ட மாதிரி முழிச்சோம். சிட்டி பசங்களோட துணிச்சலும், நுனிநாக்கு பீட்டரும் பாத்து மெரண்டுபோய்க் கெடந்தோம்.

போன வருஷம் BE முடிச்சிட்டு இந்தவருஷம் MCA ஃபஸ்ட் இயருக்கு க்ளாஸ் எடுக்க வந்த மேடம்கள் இவனுங்க கிட்ட பட்ட பாடு இருக்கே... முதல் செமஸ்டர் முடிவுலயே மூணு பேர் போர்க்கொடி தூக்கிட்டாங்க. இனிமே 96-99 batch க்கு கிளாஸ் எடுக்கவே மாட்டோம்ணு. அதேமாதிரி அவங்க அப்புறம் எங்களுக்கு கிளாஸ் எடுக்க வரவே இல்லை. ஆனாலும் எப்பயாச்சும் எக்ஸாம் சூப்பர்வைசரா வந்து மாட்டுவாங்க. ஒரு எக்ஸாம்ல அப்படி மாட்டின ஒரு மேடம் கிட்ட எங்க க்ளாஸ் பையன் ஒருத்தன் எழுந்து 'மேடம் பேப்பர்...' -ன்னான். அவங்க கைல வச்சிருந்த வெள்ளை பேப்பரை நீட்ட, 'அது எங்கிட்டயே இருக்கு மேடம். அதோ அவனோட ஆன்ஸர் ஷீட்லதான் ஃபுல்லா எழுதியிருக்கு... அது தான் வெணும்.' -ன்னான். தலைல அடிச்சிகிட்டே திட்டிகிட்டு போய்ட்டாங்க அவங்க. AVC காலேஜ்ல நெனச்சிகூட பாக்க முடியாத இந்தக் காட்சியை கண்முன்னே பார்த்து அசந்துபோய்ட்டேன். இதுக்குள்ள ஊர் பசங்களும் சிட்டி பசங்களுக்கு சளச்சவங்க இல்லன்னு நிரூபிச்சிட்டோம்(அதர் ஸ்டேட் பொண்ணுங்களோட பீட்டர் விட்டு கடலை போடுவதைத்தவிர!).

நாங்க எல்லாரும் பயப்படுற ஒருத்தர் யாருன்னா, எங்க HOD, முனைவர். பொன்னவைக்கோ அவர்கள் தான். செம ஸ்ரிக்ட். பசங்க முன்னாடியே வாத்தியாருங்கள வாங்கு வாங்குன்னு வாங்கிடுவார்னா பாத்துக்கோங்களேன். ஆனா ரொம்ப நல்ல மனுஷர். கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்னு சொல்வாங்கல்ல... அப்படி. மிகுந்த தமிழ்ப்பற்றாளர். இப்போ தமிழ் இணையப் பல்கலைக்கத்தின் துணைவேந்தராக இருக்காரு.

அவரையே ஒருவாட்டி கலாய்ச்சிட்டான் எங்க க்ளாஸ் கணேஷ்! அது எங்களுக்கு கடைசி வருஷம். எக்ஸாமுக்கு அப்ளிகேஷன் போட்டுகிட்டு இருக்கோம். கணேஷ் காலேஜ் பக்கமே ரொம்ப நாள் வரல. போதிய வருகைப்பதிவு இல்லாததால அவன் எக்ஸாம் எழுதனும்னா form-ல HOD கையெழுத்து வாங்கணும். அன்னிக்குன்னு பாத்து ஒரு கேம்பஸ் இன்டர்வியூ. MCA பசங்க யாரும் செலக்ட் ஆகல. ஆனா BE பசங்க சிலர் செலக்ட் ஆகிட்டாங்க. அவர் எங்க மேல செம கடுப்புல இருந்தது தெரியாம இவன் அவர் ரூமுக்கு போயிருக்கான் - சிங்கத்த அதோட குகைலயே சந்திக்கிற மாதிரி!

'என்ன...?' ன்னு அவர் கர்ஜிக்க, இவன் ஏதோ சொல்ல வர்ரதுக்குள்ள இவன் final year MCA ன்னு ஞாபகம் வந்திருச்சி அவருக்கு.

'நீ MCA final year தான..?' ன்னு திரும்பவும் ஒரு கர்ஜனை!

எதுக்குடா இப்படி விழுந்து புடுங்கறார்ன்னு யோசிச்சிக்கிட்டே தயங்கித்தயங்கி, 'ஆமா சார்...' ன்னு இவன் சொல்ல,

'எதுக்குடா நீங்கல்லாம் காலேஜ் வரீங்க..?' ன்னு கத்தியிருக்கார்.

இவன் கொஞ்சம் கூட யோசிக்காம, 'ஹிஹி... வர்ல சார். அதான் அப்ளிகேஷன்ல உங்க sign வாங்க வந்திருக்கேன்..!' ன்னு சொல்ல, அவரே சிரிச்சிட்டார்.

ன்னிக்கு இந்த சம்பவமே ஒரு ஃபிளாஷ் பேக் ஆகிட்டாலும், இது நடந்தப்போ கணேஷூக்கு ஒரு ஃபிளாஷ் பேக் இருந்துது. அவனோட ஸ்கூல் லைஃப் அது!

ஒரு நாள் க்ளாஸ்ல மிஸ் ரெக்காட் நோட்டெலாம் திருத்திகிட்டு இருந்திருக்காங்க. கணேஷோட நோட்டைப் பாத்ததும் அரண்டு போயி,

'டேய் கணேஷ்.. இங்க வா...'-னு கூப்பிட

நம்ம சார் 'எஸ் மிஸ்...' ஆஜர் ஆகிறார்.

'என்னடா இது...?' ரோட்ல காக்கா குதறின எலி மாதிரி இருந்த படத்த காமிச்சு அவங்க கேக்க,

'digestion system of rat மிஸ்!' -னு கூலா இவர் பதில்!

அவங்க டென்ஷன் ஆகி, 'பாத்தா அப்படியா இருக்கு...?' ன்னு முறைக்க,

'அதனாலதான் மிஸ் கீழ எழுதியிருக்கேன்..!' -ன்னு சொல்லியிருக்கார் நம்ம கணேஷ் :)

Tuesday, November 21, 2006

சாதி ஒழிப்பு தேவையா?

ரொம்ப நாளாக எனக்கு நானே கேட்டுக்கொண்ட ஒரு கேள்வியை இன்று உங்கள் முன் வைக்கிறேன். என்ன கேள்வி இது? என்ன ஒரு பிற்போக்கான சிந்தனை? என்றெல்லாம் டென்ஷன் ஆகாமல், தயவுசெய்து எனது எண்ணங்களை பரிசீலனை செய்யும் மனநிலையில் மேற்கொண்டு தொடரவும். எனது எண்ணங்கள் தவறெனில் ஏனென்று சொல்லுங்கள், ஏற்றுக்கொள்கிறேன்.

சாதியை ஒழிக்கத்தான் வேண்டுமா? எல்லா விஷயங்களைப்போலவே சாதியிலும் சில தீமைகள் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு விஷயத்தில் குறை இருந்தால் அந்த விஷயத்தை அறவே நீக்குவதுதான் அதற்குத் தீர்வா? சாதியை அழிக்க நாம் எடுத்த முயற்சிகளில் ஒரு சதவிகிதமாவது அதிலிருக்கும் குறைகளை நீக்க முற்பட்டிருந்தால், நல்ல முன்னேற்றம் கண்டிருக்கலாம் என்பது என் எண்ணம்.

இயல்பாகவே குழுமனப்பாண்மை கொண்டவன் மனிதன். சாதி என்றில்லை. எப்போதும் ஏதாவது ஒரு குழுவை சார்ந்தே அவன் இருக்கிறான். பள்ளிக்கூடத்தில் வீட்டுப்பாடம் செய்யத்தவறினால், வகுப்புக்கு வந்ததும் நாம் செய்யும் முதல் வேலை என்ன? நம்மைப்போலவே இன்னும் யாராவது வீட்டுப்படம் செய்யாமலிருக்கிறார்களா எனத் தேடுவதுதானே! அப்படி யாரேனும் இருந்துவிட்டால் நமக்கு ஒருவித தைரியமும் தெம்பும் வருவது உண்மைதானே. குழந்தைப்பருவத்திலிருந்து, எந்த பிரச்சனையிலும் நமது முதல்கட்ட நடவடிக்கை நம்மைப்போல் பாதிக்கப்பட்டவர்களைத் திரட்டுவதாகத்தானே இருக்கிறது. இந்த உணர்வு வாழ்வின் கடைசிவரை, நாம் எதிர்கொள்கிற ஒவ்வொரு பிரச்சனையிலும் வரத்தானே செய்கிறது?!

சாதிகள் தவிர, குடியிருப்போர் நலசங்கம் தொடங்கி தொழிலாளி முதலாளி சங்கங்கள் வரை, வேறெந்த வடிவத்திலும் குழுவாய் இயங்கும்
மனிதர்களை நாம் அங்கீகரிக்கிறோம். இந்தக் குழுக்களிலும் வெட்டு குத்து வரை எல்லா பிரச்சனைகளும் இருக்கத்தானே செய்கின்றன? இதற்கும்
மேல், முதலாலளி தொழிலாளிகளுக்கு இடையில் தீண்டாமை இருந்துகூட நான் பார்த்திருக்கிறேன்! ஒரு தொழிலாளியின் பிரச்சனை சக
தொழிலாளிக்குதான் புரியும் என்று ஒன்றுசேர்வது சரியெனில், ஒரு குறிப்பிட்ட சாதியினைச் சேர்ந்தவர் தன் பிரச்சனைகளை உணர்ந்த தங்கள்
சாதியினருடன் இணைந்து செயல்படுவதும் சரியே!

எனக்குத் தெரிந்து சாதியினால் நிகழும் மிகக் கேவலமான விஷயம் அவற்றுள் ஏற்றத்தாழ்வு பார்த்து சக மனிதனை இழிவாய் நடத்தும் விஷயம் தான். அதற்கான தீர்வு, கீழ்சாதியினர் என்று ஒதுக்கப்பட்டவர்கள் படிப்பு, பணம், பதவி என்று எல்லா விஷயத்திலும் உயர்வதுதான். இன்றைக்கு இப்படி உயர்ந்தவர்களிடம் தீண்டாமை போன்ற கேவலங்கள் இல்லாதிருப்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். தலித் மக்களை வீட்டுக்குள் சேர்க்காத ஊரிலிருந்து வந்த எனக்கு, ஒரு தலித் நபர் உற்ற நண்பனாகவும், அறைத்தோழனாகவும் இருக்க இந்தத் தலைமுறையில் வாய்த்திருக்கிறது. சமூகத்தில் அவர்களின் முன்னேற்றம், சாதியினால் நிகழும் கேவலங்களுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

மேலும், 'சாதி வேண்டாம். சாதியை ஒழிப்போம்' என்று சொல்பவர்கள் பெரும்பாலும் சதியினால் பாதிக்கப்படாதவர்களாகவும், அதனால் எதையும் இழக்காதவர்களாகவுமே இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் உள்ளுக்குள் சாதி பார்த்தே சகல காரியங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. என்னிலிருந்தே இதை நான் புரிந்துகொண்டேன்!

சாதிய உணர்வு கொண்டு போராடும் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது, 'எந்த சாதியைச் சொல்லி நாங்கள் வளர இயலாமல் முடக்கப்படுகிறோமோ அதே சாதியைச் சொல்லித்தானே நாங்கள் போராட முடியும்? அதே சாதியைச் சேர்ந்தவர்களுடன் தானே இணைந்து செயல்படமுடியும்?!' என்று கேட்டார். அவர் கருத்தை ஆமோதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை!

இவையெல்லாவற்றையும் விட என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விஷயம் - தேசிய உணர்வை 100% சரியென்கிற நாம், சாதிய உணர்வை 100% தவறென்று ஏன் சொல்கிறோம்? தன்னுள் கொண்டிருக்கிற உறுப்பினர்களின் எண்ணிக்கை தவிர்த்து, இரண்டிற்கும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தையாவது யாரவது சொல்ல இயலுமா? 'அவன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தானே ஓடுது?' என்று சாதிச்சண்டைகளைச் சாடியவர்கள் கார்கில் போருக்கு நிதி திரட்டிக் கொடுத்தபோது அதே கேள்வி என்னைக் குடைந்து, 'பாக்கிஸ்தானி உடம்புல மட்டும் பச்சை ரத்தம் ஓடுதா என்ன?' என்று கேட்கவைத்தது. இந்தியர்களின் பாதுகாப்புக்காக போராடியவர்கள் மதிக்கத்தக்கவர்கள் எனில், தன் சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடும் ஒருவனை நாம் இழிவாய்ப் பார்ப்பது எவ்வகையில் சரி?

சுருங்கச் சொல்வதென்றால், சாதிய உணர்வு இல்லாதிருப்பவர்களிடம் எந்த சிறப்பும் இல்லை; சாதிய உணர்வுள்ளவர்களிடம் எந்த தாழ்வும் இல்லை என்றே அறிகிறேன்! அதது அவரவர் சூழல் சார்ந்தது.

Monday, November 20, 2006

திருமண வாழ்க்கை கசப்பானதா?!

"னக்கெல்லாம் பரவாயில்லை. எங்களையெல்லாம் பாத்து கொஞ்சம் தெளிவாயிருப்ப! நாங்க தான், கண்ணக்கட்டி காத்துல விட்டமாதிரி மாட்டிகிட்டு தவிச்சோம்..." - என் நண்பர்கள் வட்டத்தில், முதல் சுற்றிலேயே திருமணம் செய்துகொண்ட ஒருவனின் வழக்கமான புலம்பல் இது! மிக உண்மையும் கூட.

இதில் ஆண், பெண்னென்ற பேதமில்லை. "எந்த எக்ஸ்பெக்டேஷனும் வச்சிக்காத அருள். எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கோ அவ்வளவு பிரச்சனை இருக்கு மேரேஜ் லைஃப்ல" - என் கல்யாணக்கனவுகள் தெரிந்த ஒரு தோழியின் அட்வைஸ் இது! முன்னதை விட முக்கியமான உண்மை இது.

வண்ணவண்ணக் கனவுகளுடன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டு திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து, அங்கே முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை எதிர்கொண்ட நண்பர்களின் தவிப்பிலிருந்து நான் கொஞ்சம் தெளிவடைந்திருப்பது உண்மை. பொதுவாக, 'உங்க வீடு; எங்கவீடு, உங்க அப்பாம்மா; எங்க அப்பாம்மா' என்கிற மனோபாவம் இருக்கிறவரை இவர்களின் பிரச்சனைகளும் சமாளிக்க முடியாதவையாகவே இருக்கின்றன.

இதில் புரியாதது என்னவென்றால், இருதரப்பிலிருந்தும் புலம்பல்களைக் கேட்க நேர்வதுதான். எனில், பிரச்சனைகளுக்கான காரணிகள் பொதுவானவையாகவே இருக்கவேண்டும். இதில் முக்கியமான காரணியாக நான் கருதுவது 'சுதந்திரம்' என்கிற விஷயத்தைத் தான். தங்கள் தரப்பில் மிகத்தேவை என்றுணரும் சுதந்திரத்தை, எதிர்த்தரப்பிலிருந்து மட்டும் யோசிக்காமலேயே பரித்துவிடுகிறார்கள் இருதரப்பினரும்! எதிர்பார்ப்புகளும் இப்படித்தான் ஆகிவிடுகின்றன. தமதைப்போலவே பல வருடங்களாக சுமந்துவரப்பட்டிருக்கும் எதிர்த்தரப்பின் எதிர்பார்ப்புகளை என்னவென்றுகூட விசாரிக்காமல், தங்களின் எதிர்பார்ப்புகள் உடைந்துபோவதில் சுயமிழக்கிறார்கள் இருவரும்!

இன்றைய திருமணங்கள் அதிக அளவில் தோள்வியடைவதற்கும், மேற்சொன்ன காரணிகளுக்கும் நெருக்கமான தொடர்பிருக்கிறது. பொதுவாக குடும்பம் என்கிற அமைப்பு ஒற்றைத்தலைமையில் இயங்குவது. தாயோ, தந்தையோ, மகனோ அல்லது மகளோ... ஒரு குடும்பத்தின் தலைமை, சூழலுக்கிணங்க மாறி மாறி வெவ்வேறு உறுப்பினர்களிடம் இருக்கலாம். ஆனால் ஒரு நேரத்தில் ஒருவர் தலைமையேற்றிருந்தால் மட்டுமே குடும்பம் சிறக்கும். ஆண்களையே பெரிதும் சார்ந்த சொன்ற தலைமுறைகளில் இதில் அதிகம் பிரச்சனையில்லை. பெண்கள் தங்கள் சுதந்திரம் பற்றிய நினைவேயில்லாத, ஆண்களைச் சார்ந்திருப்பதே அழகென்று நினைத்திருந்த காலம் வரை, குடும்பம் என்கிற அமைப்பு நன்றாகவே இயங்கிவந்திருககிறது.

இன்றைக்கு பெண்களும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்திருக்கிறார்கள். அந்த உணர்வை மனதளவிலாவது ஆண்களால் ஏற்றுக்கொள்ளவும் முடிந்திருக்கிறது. இந்தச் சூழலுக்குப் பொருந்தவியலாத பழைய குடும்ப அமைப்பைத் தொடரவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் தவிக்கும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இதற்கு ஒரே தீர்வாய் நான் நினைப்பது, கனவன் மனைவிக்கிடையிலான நட்புணர்வு. கனவன்-மனைவி மட்டுமல்லாமல் குழந்தைகளுடனும் நட்புறவாய்ப் பழகுதலே இன்றைய சூழலுக்குச் சிறந்தது. ஆமாம்! இந்தத் தலைமுறை குழந்தைகளும் தங்கள் சுதந்திரத்தை உணர்ந்தேயிருக்கிறார்கள். மற்ற எல்லா உறவுகளையும் விட, நட்பில் சுதந்திரத்தின் அளவு அதிகமென்பதாலேயே இக்கால குடும்ப அமைப்புக்கு இதுவே சிறந்ததென்று தோன்றுகிறது.

சில மாதங்களுக்கு முன், அலுவலக வேலையாக சேலம் சென்று, என் தோழி அகிலாவின் வீட்டில் தங்க நேர்ந்தபோது இந்த எண்ணம் மிகவும் வலுப்பட்டது. நம்புங்கள்! அவர்கள் வீட்டில் அனைவரும் இப்படி நட்புணர்வுடன்தான் பழகிக்கொள்கிறார்கள். ஒவ்வொருவரின் சுதந்திரத்தை மற்றவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அகிலாவும் அவர் கணவர் அமீரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயங்களிலும், தொலைபேசி உரையாடல்களிலும் ஏற்கனவே ஓரளவு அறிந்திருந்தாலும் நேரில் பார்க்க மிக பிரப்பாய் இருந்தது எனக்கு.

வெவ்வேறு வயதில் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து தங்கியிருப்பது போலத்தான் இருக்கிறது அவர்கள் வீடு. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களும் இவர்கள் வீட்டுக்கு வந்தால், ஏதோ ஒரு கல்லூரியின் பூங்காவில் நண்பர்களைச் சந்திக்க வந்தவர்கள் மாதிரி ஆளே மாறிவிடுகிறார்கள்!

அந்தவாரம் ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் ஏற்காடு சென்றுவரலாம் என்று திட்டம் இருந்தது. அகிலாவின் மாமியார், தான் வரவில்லை என்று சொன்னதும், 'உங்கள ஒன்னும் மலமேலேர்ந்து தள்ளிவிட்டுட மாட்டேம்மா... நான் அவ்ளோ கொடுமக்காரி இல்ல. பயப்படாம வாங்க!' என்று கலாய்க்கிறார் அகிலா! இத்தனைக்கும் அவர் பார்த்துவைத்த மருமகள் இல்லை இவர்! இவர்களுடையது மதங்களைக் கடந்த காதல் திருமணம்.

இந்தக் குடும்பத்தில் அமீர் அம்மாவின் புரிதல்கள் மிக முக்கியமானவை. அவருடன் பொறுமையாக பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தில், உறவினர்கள் தன் மருமகள் பற்றி தன்னிடம் முன்வைக்கும் புகார்கள் பற்றியும் அவற்றை அவர் நாசூக்காகப் புறந்தள்ளும் விதம்பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். 'அவகிட்ட கொறையே இல்லன்னு சொல்லல தம்பி... ஆனா அதே போல நானும் எல்லாத்தையும் சரியா பண்றேன்னு சொல்லமுடியாது இல்லையா? ரெண்டுபேரும் வெளிப்படையா கேட்டுக்குவோம். அதோட அந்த பிரச்சனை முடிஞ்சிடும்...' என்றவரை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

இருவரும் சேர்ந்து சேலத்திலேயே ஒரு அழகான வீடு வாங்கியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும் மகன்-ரியாஸ்; நடக்க ஆரம்பித்திருக்கும் மகள்-ரோஷினி. மனசு நிறைந்த வாழ்க்கை. நான் கனவுகண்ட வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்கிற அந்தக் குடும்பத்தைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது. அதை அவர்களிடமே சொன்னேன். எனக்கும் அப்படி அமைய வாழ்த்தினார்கள்!

ஞாயிறு காலையில் ஏற்காடு புறப்பட்ட எங்களுக்காக சிக்கன் பிரியாணி செய்து ஹாட் பாக்ஸில் வைத்துத்தந்தார் அம்மா. இருசக்கர வாகனங்களில் கிளம்பினோம். ரியாஸ் என்னுடன் வர, அவர்கள் மூவரும் ஒரு வண்டியில்.

மலைப்பாதையில் ஏற ஆரம்பித்ததும் ரியாஸ் தன் இஷ்டத்திற்கு கத்த ஆரம்பித்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் நானும் சேர்ந்துகொண்டேன். சற்றைக்கெல்லாம் பின்னல் இன்னும் யாரோ கத்திக்கொண்டுவரும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தால்... அமீரும் அகிலாவும்! என்னவெற்றே புரியாமல் ரோஷிணியும் அவளால் முடிந்த அளவு கத்திக்கொண்டு வருகிறாள்!! வழி நெடுக ரியாஸ் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டு வந்தார் அமீர்.

மலைமேல் நன்றாக சுற்றிவிட்டு ஒரு பூங்காவில் அமர்ந்து பிரியாணியை ஒரு பிடி பிடித்தோம். அமீரின் அம்மாவை மறந்தாலும் அவர் செய்துகொடுத்த பிரியாணியை மறக்கவே முடியாது. கொஞ்ச நேரத்தில் அப்பாவும் மகனும் பூங்கவிலேயே ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். ரியாஸ் எவ்வளவோ முயன்றும் அமீரைப் பிடிக்க முடியவில்லை. களைத்துச் சோர்ந்த மகனைப் பார்த்து 'என்னடா இவர பிடிக்க முடியலங்கற... இரு நானும் வரேன்...' என்று அகிலாவும் சேர்ந்துகொள்ள, இருவருக்கும் பிடிகொடுக்காமல் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தார் அமீர். நானும் ரோஷினியும் அவர்கள் விளையாட்டை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தோம். வழக்கமாக, மிகைப்படுத்தப்பட்ட சினாமாக் காட்சிகளில் மட்டுமே இப்படிப் பார்த்திருக்கிறேன்! உண்மையில் எல்லோருக்குள்ளும் இப்படிப்பட்ட ஆசைகள் இருக்கின்றன என்றாலும் எத்தனைபேர் நடைமுறைப்படுத்துகிறோம்?

வீடுதிரும்பி, இரவு சாப்பிட்டு முடித்து எல்லோருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். காதல் திருமணத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வீடுவாங்கி குடிபுகுந்ததுவரை இவர்கள் சந்தித்த எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சு சென்றது. திருமணமான புதிதில் மதமாற்றம், பெயர்மாற்றம் என ஆரம்பித்து இருவரும் ஏகப்பட்ட பிரச்சனைகளைக் கடந்துதான் வந்திருக்கிறார்கள். பொதுவாக நாம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளும் அவர்கள் வாழ்விலும் இருக்கத்தான் செய்கின்றன. நாமெல்லாம் பிரச்சனைகளிளேயே இருந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அவற்றைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறார்கள்!

உதாரணத்திற்கு ஒன்று: புதுவீட்டிற்கு இஸ்லாமிய முறைப்படி எல்லாம் செய்தபின்னும், கணபதி ஹோமம் செய்தால் தன் மனதிற்கு நிறைவாய் இருக்கும் என்று அகிலா நினைத்திருக்கிறார். அதை அவர் கணவர் மூலமாகக் கொண்டுசெல்லாமல், 'உங்களுக்கு கஷ்டமாயில்லன்னா செஞ்சிக்கலாமாம்மா...?' என்று நேரடியாக மாமியாரிடம் கேட்டிருக்கிறார். வேண்டாமென்றுவிட்டால் அது காலத்திற்கும் மருமகள் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் என்று நினைத்து, தன் உறவுகள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கணபதி ஹோமத்திற்கு அனுமதித்திருக்கிறார் அவர். இப்படி இவர்கள் கடந்துவந்த ஒவ்வொரு பிரச்சனையும் நம் மனதின் ஏதேதோ தாழ்களைத் திறந்துவிட்டுக்கொண்டே செல்கின்றன. உடனிருக்கும் மனித மனங்களைத்தாண்டி வேறெதுவும் பெரிதில்லை என்று இவர்கள் எப்படிக்கற்றார்கள் எனத்தெரியவில்லை!

எனக்கு நேரமாகிவிட, கிளம்ப ஆயத்தமானேன். எல்லோருமாக வாசல் வந்து வழியனுப்பினார்கள். நான் பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பினேன்,

'உங்க குடும்பத்துக்கே மொத்தமா சுத்திப்போடுங்க..!'

பூங்கா நவம்பர் 27, 2006 இதழில் இக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.

புது ஆட்டம்

விஞர் ஆதவன் தீட்சண்யா குறித்த சரியான அறிமுகங்கள் எனக்கு இல்லாததால், புத்தக நிலையங்களில் பலமுறை இவரின் புத்தகங்களை ஆர்வமில்லாமல் ஒதுக்கிச் சென்றிருக்கிறேன். ஆனால், செல்வநாயகி அவர்களின் 'ரோடும் ரோடு சார்ந்ததும்...' என்ற பதிவில் சேமிக்கப்பட்டிருந்த ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி, அவரின் புத்தகங்களைத் தேடிப்படிக்க வைத்துவிட்டது.

சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத் தேடினேன். 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' இரண்டு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வலியை, அதனால் எழுந்த அவர் எழுத்தின் தீவிரத்தை வேறு எப்படிச்சொல்வதைவிடவும், 'தந்துகி' தொகுப்பிலிருக்கும் அவரின் முன்னுரைய உங்களுக்கு படிக்கக்கொடுப்பதே சிறந்தது எனத்தோன்றியதால்...

"அடியில் ஒப்பமிட்டுள்ள ஆதவன் தீட்சண்யாவாகிய என்னால் பூரண சித்த சுவாதீனத்துடன் எழுதப்பட்ட கவிதைகளின் மூன்றாம் தொகுப்பிது.

எது கவிதை யார் கவிஞன் என்று சஞ்சாரம் பண்ணும் முடிவுகளெதுவும் என்னோடு கலந்தாலோசித்து எடுக்கப்படாததால் அதுபற்றிய யாதொரு நிபந்தனையும் நம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், முறையான தாக்கலோ தகவலோ இல்லாமல் இதன்பேரில் ஒருதலைப்பட்சமாய் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் செல்லாதவை என்றும் அறிவித்து ரத்து செய்யப்படுகிறது.

கவிதையின் சொல் பொருள் ஏதேனும் தம்மை புண்படுத்துவதாய் யாரேனும் கருதும்பட்சம் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேனென்றும், இதுகாறும் அவர் கைக்கொண்டு பரிபாலிக்கும் தீம்பான சிந்தனைகளுக்கும் காரியங்களுக்கும் பிராயசித்தமாக வியாகுலங் கொள்ளவும் அவமானப்படவும் முழுப் பொருத்தம் கொண்டவராகிறார் என்றும் வாசகரறிக.

எல்லாம் வல்ல தங்களின் கடவுள் பல கவிதைகளில் என்னிடம் சின்னப்பட்டு சேதாரமாகுதல் கண்டு பக்தர்கள் பதற வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உவப்பானவற்றிலிருந்து அல்லாமல் கசப்பானவற்றிலிருந்தே நான் எழுத நேர்ந்தது ஏனென்றும், கழுத்திலிருந்து கழற்றியெறிந்த எச்சில் கலயம் தலைமுறைகள் தாண்டி கனவிலும் கனப்பது குறித்தும், இன்னும் இப்படியாக எங்கள் இருவருக்குமிடையில் அனேக வியாஜ்ஜியங்களுண்டு. அதற்கு அவர் பொறுப்பு சொல்லிவிட்டு தன்னை விடுவித்துக் கொள்வதில் நமக்கு யாதொரு ஆட்சேபமுமில்லை.
"

இந்த முன்னுரை, பின்வரும் கவிதை மற்றும் அவரின் எழுத்துகள் அனைத்திலுமிருக்கும் திமிர் எனக்குப் பிடித்திருந்தது. வெறுமனே புலப்பிக் கொண்டிருக்காமல், காலங்காலமாய் தன்னைப் புறக்கணித்தவர்களை, 'நீயென்ன என்னைப் புறக்கணிப்பது. நான் புறக்கணிக்கிறேன் உன்னை' என்று எதிர்கொள்கிற விதம் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. கவிதைகளின் வடிவம் பற்றி அவர் எங்கும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆனாலும் அந்தந்த கவிதைக்கு அவர் கொடுத்திருக்கும் வடிவங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.

'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்' தொகுப்பின் பின்னட்டைக் கவிதை:

'என்னை கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச் சொல்லியல்ல
எடுத்துக் கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்'


'புது ஆட்டம்' கவிதையில் சலுகைகள் மற்றும் திறமைகள் பற்றி இவர் சொல்லும் விஷயம் சில புதிய கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

'நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை'
- என்ற முடிவுடன் துவங்கும் இக்கவிதையில்,

'இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது'
- என்று தன் சமூகம் கொண்டிருக்கும் தகுதி மற்றும் திறமைகள் மீதான நம்பிக்கையுடன் புதிய ஆட்டத்திற்கு துணிச்சலுடன் அழைக்கிறார்.

பல இடங்களில் வன்மையான சொற்களைக் கையாண்டிருந்தாலும், அவர் தரப்பின் நியாயங்களை உணரும்பட்சத்தில் அவை ஒன்றுமேயில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அனேக கவிதைகள் மேற்சொன்ன விஷயம் பற்றியவையே என்றாலும், வேறுசில உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் இரு தொகுப்பிலுமே காணப்படுகின்றன.

மாதிரிக்கு ஒன்று:

'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'


இதனுடன் சேர்ந்த இன்னும் சில கவிதைகளுக்குமாக இவர் கொடுத்திருக்கும் தலைப்பு - 'ம்ணயமாரா'!

நன்றி: 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' - சந்தியா பதிப்பகம்.

Sunday, November 19, 2006

சொந்தக்கதை

யக்குனர் பேரரசுவின் கதாநாயகிகள் போல் தமிழ்மணத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த என்னை, ஒரு வாரத்திற்கு, அதே இயக்குனர் பேரரசுவின் கதாநாயகர்கள் ரேஞ்சுக்கு ஓவர் பில்டப் கொடுத்து நட்சத்திரம் ஆக்கியிருக்கிறார்கள். மகிழ்வுடன் நன்றி!

உணர்வின் பதிவுகள் தான் நான் முதலில் ஆரம்பித்த பதிவென்றாலும், நட்சத்திர வாரத்தில் இங்கே எழுதச்சொல்லியிருக்கிறார்கள்.

நட்சத்திர அறிமுகமாய் சிலவரிகள் எழுதச்சொல்லியிருந்தார்கள் மதி அவர்கள். நமக்குதான் சுருக்கமாய் நாலுவரியில் எழுதிப் பழக்கமில்லையே. என் இஷ்டத்திற்கு வளவளவென்று எழுதியனுப்பிவிட்டேன். 'இதை உங்கள் நட்சத்திர வாரத்தின் முதல் பதிவாய்ப் போட்டுக்கொள்ளுங்கள்... அறிமுகம் சின்னதாய் இருக்கட்டும்' என்று மதி அவர்களிடமிருந்து பதில்! வளவளன்னு எழுதாம சுருக்கித்தா என்பதை டீசண்டாக கேட்கிறார்கள் என நினைத்து,முதலில் எழுதியதையே கொஞ்சம் வெட்டி, ஒட்டி, சுருக்கி அனுப்பினேன். முதலில் எழுதியது நிஜமாவே நல்லா இருந்தது என்றும், அதை சுருக்காமல் அப்படியே முதல் பதிவாய் போடுங்கள் என்றும் மீண்டும் அவரிடமிருந்து பதில்! 'நிஜமாவேவா..?!' என்ற ஆச்சர்யத்துடன் ரொம்ப சுருக்கமாக அறிமுகவரிகள் எழுதியனுப்பிவிட்டேன். அதனால், இப்போது அவரின் பரிந்துரைப்படி முதல் பதிவாய் என் சொந்தக்கதை... :)

ந்தந்த வயதில் கிடைக்கவேண்டியவை, எந்த பிரச்சனையும் இல்லாமல், இலய்பாகவே கிடைத்துவிட்ட மிகச்சாதாரண வாழ்க்கை என்னுடையது. இருப்பினும், எங்கே ஆரம்பித்தது எனத்தெரியாமல், எனது எண்ணங்களும், ஒவ்வொரு விஷயத்தின் மீதான எனது தீர்மானங்களும்(!) நானே அதிர்ச்சிக்குள்ளாகும்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. இந்த அதிர்வுகளைப் பகிர்ந்துகொள்ள எழுந்த ஆர்வமே நான் எழுத ஆரம்பித்திருப்பதற்குக் காரணம்!

தந்தை ஒரு அரசுக்கல்லூரி நூலகர் என்பதாலேயே, கோகுலம் மற்றும் பூந்தலிரிலிருந்து எல்லா பத்திக்கைகளும் தடையின்றி வாசிக்கக் கிடைத்தது என் பாக்கியம்.

பள்ளிப்பருவம் கடலூர் St. Joseph's-ல். இளங்கலை அறிவியல் மயிலாடுதுறை AVC கல்லூரியில். முதுகலை கணிப்பொறி பயன்பாட்டியல் சென்னை Crescent Engg. -ல். இப்படி மூன்று மதங்கள் சார்ந்த கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பும் எத்தேச்சையாகவே அமைந்தது! இதில் நான், என்னில் பெரிதும் மாற்றம் கண்டது AVC கல்லூரியில் தான். அங்கு நாங்கள் நடத்திய மாணவர்கள் இதழான 'இளந்தூது'வும், அக்கல்லூரியின் நுண்கலை மன்றமும், முதன் முதலாய் கிடைத்த ஹாஸ்டல் வாழ்கையும் என் மற்றங்களுக்கு முக்கிய காரணங்கள்.

இலட்சியங்கள் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல், வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொண்டு, அந்தந்த நிமிடங்களை முழுமையாய் அனுபவிக்க நினைப்பவன் நான். சின்னவயதிலிருந்தே business தான் செய்யவேண்டும் என்ற என் ஆசை, MCA படித்தபின் வேலைக்குப் போவதே சரி என்றிருந்த சூழலில், எந்த ஏமாற்றமும் இல்லாமல் மாறிப்போனதற்கும்; பின் வேலைக்குப் போய் lay-off ஆன சமயத்தில், அதே துறையில் தனாகவே கிடைத்த business வாய்ப்பை மறுதலிப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதற்கும் தேவையான பக்குவத்தை, மெற்சொன்ன என் வாழ்க்கை முறையே கொடுத்தது.

அடையாளங்கள் நம் ஆக்கபூர்வ சிந்தனைகளுக்கு தடையாய் இருப்பதை உணர்ந்து தெளிந்ததால்; கணிப்பொறியாளன், இந்த ஜாதியைச் சேர்ந்தவன், இந்த மதத்தைச் சேர்ந்தவன், இந்தியன், எழுத்தாளன், ஆத்திகன், நாத்திகன்... போன்ற எந்த அடையாளமுமில்லாமல் இருக்கவே ஆசைப்படுகிறேன். 'இப்போது வாழ்வது வாழ்க்கையில்லை, நாம் இறந்தபின் வரலாற்றில் நிற்கும்படி வாழ்வதே வாழ்க்கை' என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை! ஏதாவது ஒரு லட்சியத்துடன்தான் வாழ்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நான் பரிந்துரை செய்வது: 'வாழ்வின் லட்சியம் வாழ்ந்து தீர்ப்பதே!' :)

சொல்ல விரும்பும், ஓஷோ அவர்களின் கருத்து ஒன்று:

தட்டத்தேவையில்லை,
திறந்தே இருக்கிறது
கதவு!

Tuesday, October 10, 2006

சப்ப மேட்டர்!

போன வாரம் அம்மா, தங்கச்சியெல்லாம் ஊருக்குப் போய்ட்டாங்க. ரெண்டு மூனு நாளா ஹோட்டல் சாப்பாடுதான். வழக்கம்போல ரெண்டே நாள்ல, சாப்பிட போறதுன்னாலே கடுப்பான வேலையாயிடுச்சி.

ஞாயித்துக்கெழம மதியானம் சாப்பிட கெளம்பிட்டு இருந்தப்ப, நம்ம வீரமணி வீட்டுக்கு வந்தான். அவனையும் கூட்டிகிட்டு சாப்பிட கெளம்பினா எங்கடா போறதுன்னு ஒரே குழப்பம். பக்கத்துல இருக்க எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டு அலுத்துப்போச்சி. யாராச்சும் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போயி வீட்டு சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டலாமான்னு கூட யோசிச்சோம். நம்ம வலையுலக நண்பர்கள் கூட ரெண்டுமூனுபேர் நம்ம ஏரியாக்கு பக்கத்துலயே இருக்காங்க. ஆனா ஒருத்தரும் ஒரு நாள் கூட வீட்டுக்கு சாப்பிட வாடான்னு கூப்டதே இல்ல!

திடீர்னு வீரமணி ஒரு ஐடியா குடுத்தான்.

'நாமளே சமச்சா என்ன?!'

'சமச்சி ரெம்ப நாளாச்சேடா... சரியா வருமா' ன்னு கேட்டேன்.

'நா அப்பப்போ சமச்சிட்டு தானே இருக்கேன். உனக்கு என்னவேணும்னு சொல்லு. செஞ்சிடலாம்...'-னு தைரியம் சொன்னான்.

சரி களத்துல எறங்கிடவேண்டியதுதான்னு முடிவுகட்டி, கத்திரிக்கா புளிக்கொழம்பு வெக்கலாம்ன்னு முடிவு பண்ணோம்!

புளிக்கொழப்புக்கு தேவையான எல்லாம் வீட்ல இருக்கான்னு பாத்தோம். காய்கறி தவற எல்லாமே இருந்திச்சி. ஒரு வாரம் சமையல் இல்லன்னா, வீணா போற ஐட்டமெல்லாம் மட்டும் எப்படி கரெக்ட்டா காலி பண்னிட்டு போறாங்கன்னு தெரியல. அம்மா கிட்ட டீட்டெய்லா கேட்டு ஒரு பதிவு போடணும்.(பதிவுக்கு மேட்டர் எங்கலாம் கிடைக்குது பாருங்க!) அப்புறம்... தொட்டுக்க சோத்து வத்தல் இருக்கு. பொறிச்சிக்கலாம். புளிக்கொழம்ப்புக்கு பெஸ்ட் காம்பினேஷன்னு நெனச்சப்பவே நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சி.

கத்திரிக்கா, சின்னவெங்காயம், தக்காளி, தயிர் மட்டும் போய் வங்கிட்டு வந்து வேலைய ஆரம்பிச்சோம். வீரமணி காயெல்லாம் கழுவி நறுக்க ஆரம்பிச்சான். நான் அரிசி களஞ்சி, குக்கர் வச்சேன். திடீர்னு ஒரு டவுட். எவ்ளோ தண்ணி வக்கிறது? ஒன்னுக்கு ரெண்டா இல்ல மூனான்னு. அம்மாக்கு போன்பண்ணி கேக்கலாம்னு போனேன். நாங்க சமயல் பண்றோம்னு சொல்லி அவங்கள அதிர்ச்சியாக்க வேணம்னும் ஒரு யோசனை.

'ரெண்டுதான் வப்பாங்க... சாதம் கொஞ்சம் கொழைவா வேணும்னா ரெண்டர தண்ணி சேத்துகிட்டு ஒரு விசில் அதிகமாக்கிக்கலாம்...'-னு வீரமணி சென்னான்.

அப்படியே ஆகட்டும்னு குக்கர மூடி வெயிட்ட போட்டாச்சி. நாளஞ்சு கத்திரிக்காவ பெரிசு பெரிசா நறுக்கி வச்சிகிட்டோம். அப்படியே ரெண்டு தக்காளியையும். பத்து பதினஞ்சி பூண்டு உரிச்சி வச்சிகிட்டோம். சின்னவெங்காயத்த அப்படியே முழுசு முழுசா உரிச்சி வச்சாச்சி. கையளவு புளி எடுத்து ஒரு கிண்ணத்து தண்ணில கரச்சு ஊறவச்சிட்டோம். இன்னொரு பர்னல பத்தவச்சி அதுல வானல போட்டோம். நெறைய எண்ண ஊத்தி கடுகு, உளுந்து போட்டு தாளிச்சோம். அப்புறம் அதுல பூண்டு, கருவேப்பிலய போட்டு லேசா வதக்கிட்டு, சின்ன வெங்காயத்த போட்டு நல்லா வதக்கினோம். சின்ன வெங்காயம் பொன்னிறமா வந்ததும் தக்காளி கத்திரிக்காவெல்லாம் போட்டு திரும்பவும் வதக்கினோம். அப்புறம் நாலஞ்சி (பெரிய)ஸ்பூன் சாம்பார் மொளகா பொடி, நாலு (சின்ன)ஸ்பூன் உப்பு போட்டு நல்லா கிண்டினோம். காயெல்லாம் நல்லா வெந்ததும், திக்கா புளி தண்ணிய புழிஞ்சி ஊத்தினோம்(புளி ஊத்தினப்புறம் காய் சீக்கிறமா வேகாது. அதனால மொதல்லயே நல்லா வேக வச்சிடணும்). அவ்ளோதான்... நல்லா கொதிக்கட்டும்னு விட்டுட்டு டீவி பாக்க வந்துட்டோம். நடுவுலயே குக்கர் நாலு விசில் வந்து அடுப்ப அணச்சாச்சி.

கொஞ்ச நேரத்துல நல்லா கொதிச்சி தண்ணி கொஞ்சம் வத்தினதும் கொழப்பு ரெடி. அவ்ளோதாங்க கத்திரிக்கா புளிக்கொழம்பு. சப்ப மேட்டர்! இதுக்கு இந்த பொம்பளைங்க என்னா ஜமுக்கு உட்றாங்க! கைபடாம யூஸ் பண்ணா ரெண்டு நாளைக்கு வச்சிருந்து சாப்பிடலாம்.

சூடான சாதம், புளிக்கொழம்பு, வத்தல் அப்புறம் தயிர் சாதம், ஊறுகா! சிம்பிளான ஆனா அருமையான சாப்பாடு அன்னிக்கி. சமைக்கிறப்ப இன்ட்ரஸ்ட்டாவும் சாப்பிடறப்போ வக்கனையாவும்தான் இருக்கு. ஆனா பாத்திரம் கழுவுறதுதான் செம கடுப்பா இருக்கு! கல்யாணம் ஆன, ஆகாத பேச்சிலர் மக்களே... நீங்களும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க. மனசுவச்சா சமையல் சப்ப மேட்டர்தான்! ஏதாசும் டவுட்னா நம்மள கான்டாக்ட் பண்ணுங்க. உங்களுக்கு வேற என்னல்லாம் புடிக்கும்னு சொல்லுங்க. அடுத்தவாட்டி செஞ்சு பாத்து ரெசிப்பி போட்டுடலாம். ஓக்கேவா?!

ஒரு முக்கியமான பின்குறிப்பு: சமையல் செஞ்சப்ப ரெண்டுபேருமே ஒருவாட்டிகூட கைய சுட்டுக்கலங்க. அதெல்லாம் சினிமால மட்டும்தான் போலிருக்கு!

Monday, August 21, 2006

வலைப்பதிவர் சுற்றுலா - 6

வலைப்பதிவர் சுற்றுலா - 1 : வீரமணி
வலைப்பதிவர் சுற்றுலா - 2 : ப்ரியன்
வலைப்பதிவர் சுற்றுலா - 3 : பாலபாரதி
வலைப்பதிவர் சுற்றுலா - 4 : மா. சிவகுமார்
வலைப்பதிவர் சுற்றுலா - 5 : சிங். செயகுமார்

டிக்கடி சென்று பார்த்த இடங்கள் கூட, புதிய நண்பர்களுடன் சென்று பார்க்கையில் சற்று வித்தியாசமாய்த்தானிருக்கின்றன. மகாபலிபுர சிற்பங்கள் எத்தனை முறை பார்த்தும் அலுக்காதவை. அதிலும், புதிய நண்பர்களுடனான புதிய பார்வையில் வித்தியாசமாய் இருந்தது.

அந்திமயங்கும் வேளையில் கடற்கரைக் கோயிலைப் பார்க்க விரும்பி, ஐந்து ரதம் பார்த்துவிட்டுப் பின்னர் அங்கு செல்லலாம் என்று முடிவெடுத்தோம். ஐந்து ரதம் பகுதியிலும் நல்ல கூட்டம். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நிறைய. ஒரு ரதத்தின் உள் நின்றபடி, ஒரு கைடு, சோழர்கள் பற்றியும் பல்லவர்கள் பற்றியும் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். என்ன புரிந்ததோ தெரியவில்லை, அந்த வெளிநாட்டு பயணிகள் ஆர்வமாய் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஐந்து ரதம் என்றதும், குப்புசாமி, நம்ம வள்ளுவர் கோட்டம் தேர்மாதிரி சக்கரமெல்லாம் வைத்திருக்கும் என்று எதிர்பார்த்திருப்பார் போலும். "எதுங்க ரதம்..?" என்று கேட்டுக்கொண்டே வந்தார். நாங்கள் காண்பித்தவற்றை ரதமாக அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அவற்றின் கலையழகை ரசித்தார்.

(பாலா, ஜெய்சங்கர், நான், வீரமணி, சிவகுமார், குப்புசாமி)

அங்கங்கே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். நிறைய புகைப்படங்கள் அங்கிருந்த பெரிய யானை சிலை அருகேதான். அந்த சிலையைப் பார்த்ததும் ஆளாளுக்கு துளசி அக்காவையும், பொன்ஸக்காவையும் தன்னிச்சையாய் நினைவு கூர்ந்தார்கள்.

"frame ல இன்னோரு யானை மறைக்குதுப்பா..."

"ஹை.. ஒரு சிலை யானை, ஒரு நிஜ யானை..."

"இந்த யானை பக்கத்துல யாராச்சும் வந்து நில்லுங்களேன்... எல்லாரும் ஒரு யானை பக்கத்துலயே போய் நிக்கறீங்க..?!"

-போட்டோவுக்காக யானை சிலை பக்கத்தில் வந்து நின்ற ஜெய்ஷங்கரைப் பார்த்துதான் இந்த கமென்ட்ஸ்!

காலையில் நடேசன் பார்க்கில் முதல் புகைப்படமெடுக்கும்போதே, 'எடுக்கறதுக்கு முன்னாடி ரெடின்னு சொல்லுங்கப்பா... நாங்க வயித்த உள்ள இழுக்கணும்...' என்று ஜெய்ஷங்கர் சொன்னது பலருக்கும் உபயோகமாக இருந்ததால், அன்று முழுக்க அப்படியே செய்யப்பட்டது. 'ரெடி' என்று சொல்வதற்கு பதிலாக 'வயித்த எக்குங்க...' என்றே சொல்ல ஆரம்பித்திருந்தோம். ஃபோக்கஸ் செய்ய கொஞ்ச நேரம் ஆனாலும் போதும் 'சீக்கிரம்பா... சிலருக்கு மூச்சு நின்னுடும் போலருக்கு...' என்று கிண்டல் வேறு. நல்ல வேளையாக எனக்கும் சிவகுமாருக்கும் இந்தப் பிரச்சனை இல்லை ;)

(கண்ணன், ஜெய்சங்கர், சிங்.செயகுமார், சிவகுமார், குப்புசாமி, நான், பாலா)

ரதங்களின் இடதுபுறம் சற்று மேலேறிச்சென்றால், ஒரு ரம்மியமான புல்வெளி. நன்றாக பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக புல்வெளியில் நடக்கவோ, அமர்ந்துகொள்ளவோ அனுமதிப்பதில்லை. 'அப்புறம் எதற்கு இந்தப் புல்வெளி...?!' என்று மனதில் எழுந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை! வேலிக்கு அருகிலிருந்த மரத்தடியில் நின்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்ட மாதிரி, 'இங்கல்லாம் கொஞ்சம் டைம் எடுத்து வரணும்...' என்று இங்கும் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.

(நான், ஜெய் மற்றும் புல்வெளி)

வெளியில் வந்ததும், ஐந்து ரத சிற்பங்கள் பார்த்த பிரமிப்பிலும், கடற்கரைக் கோயிலைப் பார்க்கும் ஆர்வத்திலும்; சிவகுமார் தன் 'பைக் பார்ட்னர்' பாலாவை மறந்து விட்டுவிட்டு கிளம்பிவிட்டார். புலம்பிக்கொண்டிருந்த பாலாவை, போனால் போகிறதென்று என் வண்டியில் ட்ரிபில்ஸ் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். சற்று தூரத்தில், சிரித்தபடியே 'சாரி.. சாரி...' என்று சொல்லிக்கொண்டு சிவகுமார் திரும்பிவந்தார். 'ஏய்யா... எட்டு பேர் வந்தமே... ஒருத்தன் என்ன ஆனான்னு கூட யோசிக்கமாட்டீங்களா...' என்று ஆரம்பித்த பாலாவின் புலம்பல்களை சிரித்தபடியே மன்னிப்பு கூறி ஏற்றுக்கொண்டார் சிவகுமார்.

கடற்கரைக் கோயில் அனுபவங்களை ஜெய்சங்கர் சொல்கிறார்...

வலைப்பதிவர் சுற்றுலா - 7 : ஜெய்சங்கர்
வலைப்பதிவர் சுற்றுலா - 8 : குப்புசாமி செல்லமுத்து

Saturday, August 05, 2006

என் முதல் நட்பு

யோசித்துப்பார்க்கையில், இதுவரையிலான என் வாழ்வின் பெரும்பகுதியை என் நண்பர்களுடனேயே பகிர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதை உணரமுடிகிறது. சின்ன வயதிலிருந்து ஆண், பெண், வயது பேதமில்லாமல் கணக்கிலடங்காத நட்புகள்!

நட்புகளை மிக மதிக்கும் என் வீடு என் பாக்கியம். நான், அண்ணன், மற்றும் சகோதரிகள் என எங்கள் அனைவரின் நட்புகளும் விரைவிலேயே எங்கள் குடும்ப நட்புகளாகிவிடும். எங்கள் கூட்டுக்குடும்ப விழாக்களில், உறவினர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் நட்புகளையும் காணலாம். நண்பர்களிடம் மட்டுமல்லாமல், என் தாத்தா பாட்டி முதல் சில வருட வயதுகளேயான என் தங்கை குழந்தை வரை, என் எல்லா உறவுகளிடமும் நட்பாகப் பழகுதலே என் இயல்பாகிப்போனது. அதுவே மிகப் பிடித்ததுமாய் இருக்கிறது.

இந்த நட்புணர்வு எப்போது ஆரம்பித்தது?! என் முதல் நட்பு யார்?!!

என் நினைவறிந்து, என் முதல் நட்பு, என்னுடன் ஒன்றாம் வகுப்பிலிருந்து படித்த ஷண்முகப்ரியா தான். அதற்கு முன் எதுவும் நினைவில்லை! ஏனோ அவளை எனக்கு மிகப்பிடித்துவிட்டது. வகுப்பில் அவளிடமே அதிகம் பேசிக்கொண்டிருப்பேன்.

எந்த வகுப்பில் என நினைவில்லை. அப்போது காகிதத்தில் பல வித்தைகள் செய்யக் கற்றிருந்தோம். கப்பல், இரட்டைக்கப்பல், கத்திக்கப்பல், ஏரோப்ளேன், காமிரா என்று ஏதேதோ... கப்பல், ஏரோப்ளேன் செய்யக் கற்றுக்கொடுத்த பெரிய வகுப்பு அண்ணன்கள் கத்திக்கப்பல், காமிரா வெல்லாம் செய்யக் கற்றுத்தரமாட்டார்கள். எவ்வளவு கெஞ்சினாலும்! வேண்டுமானால் மறைவாய் எடுத்துப்போய்(காகிதம் நாம் தரவேண்டும்) செய்துதருவார்கள். அப்படி அவர்கள் செய்து கொடுத்தவற்றை, மிக நுட்பமாய் பிரித்துப்பார்த்து பிரித்துப்பார்த்து கற்றுக்கொள்வேம். ஒரு ஸ்டெப் பிரிப்பது... அதை மீண்டும் செய்வது. சரியாய் வந்துவிட்டால் இரண்டு ஸ்டெப் வரை பிரிப்பது. இப்படி... எங்களின் ரஃப் நோட் காகிதங்கள் ஏகத்துக்கும் கிழிபட்டன.

கற்றுக்கொண்டதும் ஆளாளுக்கு அவர்களுக்குப் பிடித்தமானவர்களை ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தோம். இதில் ஷண்முகப்ரியாவை ஃபோட்டோ எடுக்கவே அதிகம் பேர்! சில நாட்களில் எல்லோராலும் செய்ய முடிந்துவிட்ட காமிராவில் சலிப்பு உண்டாக ஆரம்பித்தது. ஏதாவது வித்தியாசமாய் செய்து ப்ரியாவை அசத்த வேண்டுமென்று ஆசைவந்தது. உண்மையில் அந்த வயதில் அப்படியொரு ஐடியா எனக்குத் தோன்றியது இன்றளவும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

ஒரு சின்ன காகிதத் துண்டு கிழித்து, பெரிய விழிகளும் சுருள் முடியுமாய், ஓரளவிற்கு அடையாளப்படுகிறமாதிரி ப்ரியாவின் முகம் வரைந்தேன்(அங்கே ஆரம்பித்தது என் creativity!). என் காகித காமிரா பிரித்து உள்ளே அதை பத்திரப்படுத்தினேன். ப்ரியாவை ஃபோட்டோ எடுக்க அழைத்ததும், பெரிதாய் ஆர்வமில்லாமல் என் அழைப்பிற்காய் நின்றாள். வழக்கம்போல் க்ளிக் செய்துவிட்டு அவள் முன்பே காமிராவை பிரித்து உள்ளேயிருந்த அவள் ஃபோட்டோவை(!) பெருமையாய் எடுத்துக்கொடுத்தேன்! விழிகள் விரிந்த ஆச்சர்யத்துடன், தாங்க இயலாத மகிழ்ச்சி அவள் முகத்தில். அந்த சிரித்த முகம் இன்றும் அழியாத புகைப்படமாய் என் மனதில்!

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு, இன்று காகிதத்தில் காமிரா செய்து பார்த்தேன். முதல்முறையிலேயே சரியாக வந்துவிட்டது! காகித காமிராவை மறந்துபோனவர்களுக்காக இங்கே... :) (முழு செயல்முறை வேண்டுவோர் தனிமடல் செய்யவும்!)

அப்புறம் எனது நான்காம் வகுப்பில் அப்பாவுக்கு டிரான்ஸ்பர். வேறு ஊர். வேறு பள்ளி. அதன்பின் ப்ரியாவை பார்க்கவே முடியாமற்போனது. இப்போது எங்கு இருப்பாள் எப்படி இருப்பாள் என எப்போதாவது நினைத்துக்கொள்வேன். யார் கண்டது... 'என் சின்ன வயசுல என் friend என் படத்த வரைஞ்சி பேப்பர் காமிரா உள்ள வச்சி என்ன போட்டோ எடுத்தான்...' என்று இன்னமும் அவள் யாரிடமாவது பெருமை பொங்கச் சொல்லிக்கொண்டிருக்கலாம்! அல்லது சுத்தமாய் மறந்துபோயிருக்கலாம்.!!

உங்களுக்கெல்லாம் உங்கள் முதல் நட்பு நினைவிருக்கிறதா நண்பர்களே..! நேரம் வாய்ப்பின், இங்கே பின்னூட்டமாகவோ அல்லது உங்கள் பதிவில் தனி இடுகையாகவோ பகிர்ந்துகொள்ளுங்கள் :)

நட்புக்கான இந்த நாளில் நண்பர்கள் தின வாழ்த்துக்களுடன், கவிஞர் அறிவுமதியின் சில கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தக் கவிதைகள் அனைத்தும் ஆண்-பெண் நட்பு குறித்து எழுதப்பட்டவை. 'நட்புக்காலம்' தொகுதியில் பெரும்பாண்மையான கவிதைகள் எனக்குப் பிடித்தவை மட்டுமல்ல... நான் உணர்ந்தவையும் கூட! அந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...


  • போகிற இடத்தில்
    என்னை விட
    அழகாய் அறிவாய்
    ஒருவன்
    இருந்துவிடுவானோ
    என்கிற பயம்
    நல்லவேளை
    நட்பிற்கு இல்லை

  • கடற்கரையின்
    முகம் தெரியாத இரவில்
    பேசிக்கொண்டிருந்த நம்மை
    நண்பர்களாகவே
    உணரும் பாக்கியம்
    எத்தனை கண்களுக்கு
    வாய்த்திருக்கும்

  • அந்த நீண்ட பயணத்தில்
    என் தோளில் நீயும்
    உன் மடியில் நானும்
    மாறிமாறி
    தூங்கிக்கொண்டுவந்தோம்
    தூங்கு என்று
    மனசு சொன்னதும்
    உடம்பும் தூங்கிவிடுகிற
    சுகம்
    நட்புக்குத்தானே
    வாய்த்திருக்கிறது

  • அடிவானத்தை மீறிய
    உலகின் அழகு என்பது
    பயங்களற்ற
    இரண்டு மிகச்சிறிய
    உள்ளங்களின்
    நட்பில் இருக்கிறது

நன்றி: கவிஞர் அறிவுமதி

Sunday, July 16, 2006

திருநங்கைகள்

மீபத்தில் திருநங்கைகள்(அரவாணிகள்) சம்பந்தப்பட்ட ஆவணப்படங்கள் சிலவற்றைப் பார்க்கும் வாய்ப்பு, நண்பர் பாலபாரதி புண்ணியத்தில் கிடைத்தது. அன்றுவரை அவர்களைப்பற்றி பெரிதாக நான் அக்கரை கொண்டதில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்களை இந்தச் சமூகம் ஒரு கேலிக்குறிய விஷயமாகவே எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் திரைப்படங்களின் பங்கு முக முக்கியம். மேலும் நான் கண்ட திருநங்கைகளில் பெரும்பாண்மையானோர் கடைகளிள் வற்புறுத்தி பணம் வசூலிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களில் விபச்சாரம் செய்பவர்களும் நிறைய என்று கேள்வியுற்றிருக்கிறேன். இதனாலேயே இவர்கள் மீது நான் அதிகம் அக்கரை கொண்டதில்லை.

ஆனால், அன்று திரையிடப்பட்ட படங்கள், அவர்களின் வாழ்க்கை பற்றி தெளிவாகச் சொன்ன பிறகு, இந்த இரண்டு தொழிலைத்தவிர வேறெதற்கும் நாம் அவர்களை அனுமதிக்கவேயில்லை என்கிற வேதனையான உண்மை புரிந்தது. நம்முடன் படிக்கவோ, வேலை செய்யவோ, நாம் வசிக்கும் பகுதிகளில் குடியிருத்தவோ இவர்களை நாம் அனுமதித்ததேயில்லை. குறைந்தபட்சம் நட்பாய் பேசக்கூடச் செய்ததில்லை! இந்த நிலையில் இவர்கள் வேறு என்னதான் செய்வார்கள் என்று கூட யோசிக்காமல், இவர்கள் ஏன் இப்படி கேவலமாக நடந்துகொள்கிறார்கள் என்று இதுநாள் வரை நினைத்திருந்ததற்காக மிகவும் வெட்கப்பட்டேன். அன்றாட நிகழ்வுகளில், சின்னச் சின்ன உணர்வுகள் அங்கீகரிக்கப்படாததற்கே எரிச்சலும் கோபமும் கொள்கிற நம்மைப்போன்ற மனிதர்கள் தானே அவர்களும். அவர்கள் மீதான இச்மூகத்தின் மாபெரும் புறக்கணிப்பிற்கு அவர்களின் எதிர்வினை வேறு எப்படி இருக்கமுடியுமென்று நாம் எதிர்பர்ப்பது?!

உண்மையில் நமது சமூகத்தில் மிகக்கேவலமான நிலையில் பிற்படுத்தப் பட்டிருப்பவர்கள் இவர்களே. ஆயினும் இவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது நமது மனதளவில் கூட இல்லை!


பதின்மக்களைக் கடக்க இவர்கள் படும் சிரமங்களைச் சொல்லி மாளாது. தங்களின் பாலினம் தங்கள் உடலமைப்புக்கு முற்றிலும் எதிரானது என இவர்கள் உணரும் காலம் அது! இதனை எப்படி எதிர் கொள்வது? இத்தனை நாட்களாகத் தன்னை ஆணாகவே பார்த்த தன் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தான் ஒரு பெண் என்று எப்படிச் சொல்வது? அப்படிச் சொல்வதால் நேரப்போகும் பின் விளைவுகளை நினைத்துக்கூட பார்க்க இயலாமல், வெளியில் தெரியாமல் தன் உணர்வுகளுடன் அவர்கள் நடத்தும் போராட்டத்தை எதனுடனும் ஒப்பிட இயலாது.

அங்கே திரையிடப்பட்ட ஒரு படத்தில் நமது லிவிங் ஸ்மைல் வித்யா பேட்டியளித்திருந்தார். அன்று அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. திரையிடல் முடிந்தபின் ஒரு கலந்துரையாடல் ஏற்படு செய்திருந்தார்கள். அந்தக் கலந்துரையாடலில் அனைவரின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பொருமையாகவும், மிகத் தெளிவாகவும் தனது விளக்கங்களைச் சொன்ன அவர், திருநங்கைகள் சார்பாக இந்தச் சமுதாயத்திற்கு சில வேண்டுகோள்களையும் முன்வைத்தார்.

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு பெண்ணாகத்தான் வேண்டுமா? அப்படி எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஆணாகவே இருந்துவிட்டால் என்ன? நம்மில் இயல்பாகவே எழுகிற இக் கேள்விக்கு, முடியவே முடியாது என்று பதில் தருகிறார் லிவிங் ஸ்மைல்! 'நான் ஒரு பெண் என்று உணர்ந்தபின், பெண்களுக்கான இயல்பான உணர்வுகளை வைத்துக்கொண்டு, என்னை ஆண் என்று எப்படிச் சொல்லிக்கொள்ள முடியும். அது எனக்கே நான் நேர்மையற்று இருப்பது போலாகிவிடாதா?' என்கிறார்.

அவர்களின் அடிப்படைத்தேவை அங்கீகாரம். அவர்களை எப்படி அழைப்பது என்பதிலிருந்து சில சின்னச்சின்ன விஷயங்கள் மாறினாலே அவர்களின் சமுதாயம் ஒரு பெரிய மாற்றம் காணும்! இப்போது அவர்களை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொற்களைத் தவிர்த்து 'திருநங்கைகள்' என அனைவரும் அழைக்க ஆரம்பித்தாலே, அது நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவி! பெயரில் என்ன இருக்கிறது என்று சிலர் யோசிக்கலாம். 'அதிக புழக்கத்திலிருக்கும் நாணயம் தேய்ந்து தேய்ந்து செல்லாக் காசாகிவிடுவது போல், அதிக புழக்கத்திலிருக்கும் சொற்கள் நாளடைவில் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடுகிறது' என்று ஓஷோ சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. 'காதல்' போன்ற வார்த்தைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். திருநங்கைகளைக் குறிப்பிட இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வார்த்தைகளும் இப்படித்தான். இவர்களைக் குறிப்பிடுவதை விட, அடுத்தவர்களைக் கேலி செய்யவே அந்தப் பெயர்களை நாம் அதிகம் பயன்படுத்தியிருப்பதால் புதிய வார்த்தைக்கு அவசியமேற்பட்டுவிட்டது.

அடுத்து அவர்களுக்கான வேலை வாய்ப்பு. அவர்களில் திறமையானவர்களை, அவர்களின் பாலினம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, நிராகரிக்கிறோம். இதை நாம் நிச்சயம் பரிசீலனை செய்யவேண்டும்.

தன்னைப் புறக்கணிக்கும் தன் குடும்பத்தையும், இந்த சமுதாயத்தையும் லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் எதிர்கொள்ளும் விதம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. அவரின் வெற்றிக்குக் காரணமும் அதுதான். அன்று கலந்துரையாடலில் ஒருவர் உங்கள் குடும்பத்தின் இப்போதைய நிலை என்ன என்று கேட்டார். 'இன்னும் என்னை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்' என்று அவர்கள் மீது எந்த கோபமும் இல்லாமல் செல்கிறார். உங்கள் குடும்பத்தின் மீது உங்களுக்கு கோபம் இல்லையா எனக்கேட்டல், 'அவர்கள் என்ன செய்வார்கள்... தன் குடும்பத்தில் நிகழ்துவிட்ட அசாதாரணமான நிகழ்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் நானும் இதையே செய்திருக்கலாம்...' என்கிறார். நம் சமுதாயத்தின் மீதான இவரின் பார்வையும் இதுதான்!

லிவிங் ஸ்மைல் வித்யா போன்ற நல்ல முன்னுதாரணங்களைக் கொண்டு அம்மக்களின் சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில், நமது மனம் திறந்த வரவேற்பை அவர்களுக்கு அளிப்பது சக மனிதர்களான நமது கடமை. இனி அதைச்செய்ய முற்படுவோம்.


Friday, June 30, 2006

நிலவு நண்பனை வாழ்த்த வாருங்கள்

நிலவு நண்பனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த இயலாதவர்கள் ஒரு வாழ்த்து அட்டையின் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம் என்றிருக்கிறோம். ப்ரியன் நமது சார்பாக திருமணத்தன்று அதனை ஞானியார் வசம் சேர்ப்பார் (தயவுசெய்து அதற்கு முன் இதனை ஞானியாருக்கு யாரும் தெரியப்படுத்தவேண்டாம். ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டுமே!). இதுவரை வந்த வாழ்த்துக்கள் இங்கே...

(புதிதாக இணைக்கப்பட்ட வாழ்த்துக்களுடன்)

இதில் தங்கள் வாழ்த்துக்களை இணைக்க விரும்புபவர்கள் இங்க பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். ஏற்கனவே இங்கு வாழ்த்து சொன்னவர்கள், வரிகளை மாற்ற விரும்பினாலும் தெரியப்படுத்துங்கள். இந்திய நேரம் நாளை காலை 10.00 மணிக்குள் தங்கள் வாழ்த்துக்களை அனுப்பினால் இணைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்.

நன்றி :)

Tuesday, June 13, 2006

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

ஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு!

சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.

அதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை! யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன்! முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.

'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'

- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...

'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!'

'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'

'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'

'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'

'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'

'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'

'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'

'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'

'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...

அதுதான்...

ஆம்...

அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.

காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை!.'

பின்குறிப்பு: பல விஷயங்களை ஆணுக்கு என்று சொல்லியிருந்தாலும் அது இரு பாலருக்குமே பொருந்தும் என்பது என் எண்ணம் :)

நன்றி: 'வெள்ளைத் தீ', சாரல் பதிப்பகம்.

Saturday, June 10, 2006

புதிய வாழ்க்கை :)

யிற்று. கிட்டத்தட்ட ஒரு மாதம். பேச்சுலர் வாழ்க்கையை விட இந்தக் குடும்ப வாழ்க்கை நன்றாகத்தானிருக்கிறது. ஒருவேளை மாறின புதிதில் அப்படித் தோன்றுகிறதா எனத்தெரியவில்லை! அட கல்யாணமெல்லாம் ஆகலீங்க. உங்களுக்குச் சொல்லாமலா? அதுக்குள்ள கல்யாணம் ஆனவங்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷம் - மாட்டினாண்டா இன்னொருத்தன்னு! கல்யாணம் பண்ணி மனைவியுடன் வாழ்ந்தால்தான் குடும்ப வாழ்க்கையா? அம்மா மற்றும் தங்கைகளுடன் வாழ்ந்தாலும் அப்படித்தானே?!

மூன்று நண்பர்களாக சேர்ந்துதான் ஒரு flat எடுத்துத் தங்கியிருந்தோம். அதில் ஒருவனுக்குத் திருமணமாகிவிட, தனி வீடு பார்த்துக்கொண்டான். படிக்க ஒரு தங்கையும், வேலைக்காக ஒரு தங்கையுமாக சென்னை வர, நானும் தனியாய் ஒரு வீடு பார்த்துக்கொண்டேன். இன்னொருவன் வேறுவழியின்றி வேறு இடம் பார்த்துக்கொண்டான்.

பாலகுமாரனின் 'எதிர்ப்பக்கம்' குறுநாவல் தான் நினைவுக்கு வந்தது எனக்கு. மயிலாப்பூர் லஸ் பிள்ளையார் கோயில் பக்கத்தில் நான்கு நண்பர்கள் தங்கியிருப்பார்கள். நாளொரு கடலையும் பொழுதொரு சைட்டுமாக இனிதே சென்றுகொண்டிருக்கும் அவர்களின் பேச்சுலர் வாழ்க்கை, ஒருவனின் திருமணத்தில் முடியும். நண்பனின் மனைவியால்(அவள் பக்கம் நியாயம்தான் என்றாலும்) எழும் சில பிரச்சனைகளால் பிரிகிறார்கள். கதையின் ஒரு கேரக்டர், தங்களின் கடந்தகால வாழ்க்கையை நினைத்தபடி லஸ் சிக்னல் கடக்கையில், அவர்கள் தினமும் அமர்ந்து அரட்டையடிக்கும் மதில் சுவரில் புதிதாக நான்கு நண்பர்கள் அமர்ந்திருப்பதைப் பார்ப்பதாக கதை முடியும். எங்களுக்கு அந்தக் கதையில் வருவது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லாவிட்டாலும், எங்கள் பேச்சுலர் வாழ்க்கை முடிந்துபோனது அந்தக் கதையை நினைவுபடுத்தியது!

அம்மா, சென்னை 10 நாட்கள் ஊரில் பத்து நாட்களாக இருந்துகொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். புது வீட்டிற்குப் பால் காய்ச்ச வந்த அம்மா போன வாரம் ஊருக்குப் போய்விட, இப்போது தங்கைகளின் சமையல். தற்சமயம் நான் ரொம்ப பிஸியாக இருப்பதால் எனது திறமையை இன்னும் காட்டவில்லை நான்! அம்மா சமையல் அளவுக்கு வராவிட்டாலும் தங்கைகள் ஏதோ சமாளிக்கிறார்கள். இதுவரை இருந்த மெஸ், ஹோட்டல் மற்றும் நாங்களே சமைத்த சாப்பாடுகளுக்கு இது 100% பெட்டர். ஆனாலும், ஒருமுறை எதிரில் இருப்பதை ரசம் என்று தெரியாமலே, 'இன்னிக்கு ரசம் வைக்கலயா..?' என்று கேட்டுவிட்டேன். 'எதிர்லதான இருக்கு...' என்று தங்கை கேட்டதுடனாவது நிறுத்தியிருக்கலாம். 'இது ரசமா..?! ரசம்னு எழுதிப்போடுங்கப்பா...' என்று வடிவேல் ஸ்டைலில் கலாய்க்கப்போய் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டேன்!

என்னதான் விடுமுறைகளில் ஊருக்குச் சென்றாலும், தொடர்ச்சியான குடும்ப வாழ்க்கையில் நிறைய வித்தியாசமிருக்கிறது. +2 விற்கு அப்புறம் இப்போதான் மீண்டும் இந்த வாழ்க்கை. நண்பர்களுடன் இருந்தபோது வேலைகளை மாற்றி மாற்றி அடுத்தவர் தலையில் போடுவோம். 'போன டைம் தான நான் current bill கட்டினேன். இந்த மாசம் நீ போ...' என்றெல்லாம் சொல்லலாம். இப்போது அடுத்த optionனே இல்லை! கணக்கில்லாமல் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்க்கிறவன் நான். சனி ஞாயிறுகளில் பகலிலும்! இப்போது அப்படிப் போக முடியவில்லை. நேரத்திற்கு வீட்டுக்கு வரும்படி ஆகிறது. என் தோழி ஒருவர் எப்போது எனக்கு போன் செய்தாலும் நான் சினிமாவில் இருப்பதாய் சொல்வேன். 'கல்யாணம் ஆனாதான் நீ அடங்குவ போலிருக்கு...' என்பார். 'ஏன்?! அப்போ அவளையும் கூட்டிகிட்டு சினிமாக்குப் போவேன்... அவ்ளோதானே...' என்பேன். ஆனால் அதெல்லாம் முடியாது போலிருக்கு :( பார்ப்போம்.. அது வரப்போறவங்கள பொருத்தது!

கொஞ்சம் சுதந்திரம் போனமாதிரிதான் இருக்கு. ஆனாலும், 'வீட்டுச் சாப்பாடு' என்று ஒன்று இருக்கிறதே, அதற்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம் போலிருக்கிறது. பெரும்பாலான வேலைகளை வீட்டில் பார்த்துக்கொள்வதால் கொஞ்சம் சுகவாசி ஆகிவிட்டேன். அப்புறம் இந்த துணி துவைக்கிறது. முன்பும் மெஷினில்தான் துவைத்தோம் என்றாலும் அதை மெஷினில் போட்டு, எடுத்து உலர்த்தி, அயனிங் கொடுத்து, அதை வாங்கிவைத்து... இப்போது எனக்கு எந்த வேலையும் இல்லை! துவைக்க வேண்டிய துணியை எடுத்துப்போட வேண்டியதுதான் ஒரே வேலை. அதையும் இன்று காலையில், 'அந்த ஹேங்கர்ல இருக்கறதெல்லாம் துவைக்கறதுதான். எடுத்துக்க...' என்று சொல்லி எஸ்கேப் அகிவிட்டேன் :)

சத்தியராஜ் ஒரு படத்தில், 'இனிமே எப்ப வீட்டுக்கு போறது. அப்படியே ரோட்டில் படுத்துக்கப்பா' என்றதும் கவுண்டமனி மகா அலுப்புடன் சொல்வாரே... 'ஆமா.. இனிமே உக்காந்து, கால நீட்டி, படுத்து... அப்படியே என்ன தள்ளிவிடுப்பா படுத்துக்கறேன்..' என்று. அப்படி ஆகிவிட்டது கதை!

ம்.. இப்போதைக்கு நல்லாத்தான் இருக்கு. போகப்போகப் பார்ப்போம்.

Thursday, June 08, 2006

மதம் தேவையா?!!

பொன்ஸ்,

தருமி அவர்களின் பதிவில், மதம் பற்றிய உங்கள் கருத்தையும் அதற்கு தருமி அவர்கள் எழுதிய பதிவையும் படித்தேன். அவை எழுப்பிய சலனங்கள் சில...

நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது என்று நினைக்கிறேன். விடுமுறைக்கு எங்கள் கிராமத்திற்கு சென்றிருந்தோம். அப்போது திராவிட கழகம் நாத்திகச் சிந்தனைகளை பல்வேறு வழிகளில் பரப்பிக்கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்றாக, எங்கள் ஊருக்கு ஒரு சிலம்பாட்ட வாத்தியார் வந்திருந்தார். ஊர் எல்லையில் ஏரிக்கறையில் ஒரு குடிசையில் தங்கிக்கொண்டு, எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு இலவசமாக சிலம்பு மற்றும் சில தற்காப்பு வித்தைகளை செல்லித்தருவதுடன், நாத்திகச் சிந்தனைகளையும் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்ததர். சில மாதங்களில் அங்கு சிலம்பாட்டம் பயின்ற அண்ணன்கள் கருப்புச் சட்டை போட ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அண்ணன்களுடன், விடுமுறைக்கு ஊருக்கு வரும் எங்களுக்கு கடவுள் பற்றிய விவாதங்கள் வரும். நான் கடவுள் உண்டென்று தீவிரமாய் வாதிடுவேன். 'இந்த வயசுல எப்படி பேசறான்பார்' என்று எல்லோரும் ஏற்றிவிட, 'நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது' போன்ற வலிமையான வாதங்களை வைத்துக்கொண்டு விதண்டாவாதத்திற்கு பேசிக்கொண்டிருப்பேன். வெளியில் அப்படிப்பேசினாலும் மனதிற்குள் அவர்களின் கேள்விகளுக்கான என் பதில்கள் எனக்கே திருப்தியாய் இல்லை என்று உணர ஆரம்பித்தேன். இன்னமும் அவர்களின் பல கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியவில்லை! விடை கிடைக்காத அந்தக் கேள்விகள் தன்னிச்சையாகவே என்னை மதத்திலிருந்தும், கடவுளிடமிருந்தும் விலக்கிவைத்தன.

மதங்கள் நம்மை வழிப்படுத்துகின்றன என்கிறீர்கள். ஒரு 'தெளிவு நிலைக்குப் போகும்முன்' மதம் தேவை என்கிறீர்கள். ஆனால் அந்த மதமே மனிதனைத் தெளிவு நிலைக்குப் போக விடாமல் செய்கிறது என்கிறேன் நான். நீங்கள் சொல்வதுபோல் 'அ' அடிப்படைதான். எந்தக் கேள்வியுமின்றி அதைச் சின்ன வயதில் ஏற்றுக்கொள்கிறோம் தான். ஆனால் வயதாக ஆக அந்த 'அ' வைத்தாண்டி கண்காணாத தூரத்திற்குச் செல்கிறோம். அப்போது நமக்கு புரிந்தும் போகிறது, 'அ' என்றால் மற்றவர்களைத் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஒரு மொழியின் வெறும் குறியீடென்று. ஆனால் மதம் அப்படியா செய்கிறது?! எனக்குத்தெரிந்து ஒரு சாதாரன மனிதனின் வாழ்வில் 'அ' வில் தொடங்குகிற மதம் அவன் இறக்கும் வரை அந்த 'அ' விலேயேதான் நிற்கிறது. அதற்குமேல் அவனை போகவே விடாமல் செய்கிறது. நினைவு தெரிந்த நாளில் ஒருவன் எதற்கு சாமி கும்பிட ஆரம்பித்தானோ அதற்கேதான் இறக்கும் வரையிலும் கும்பிட்டுக் கொண்டிருக்கிறான்!

இவற்றையெல்லாம் தாண்டி, எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்கிற ஒரு கேள்விக்கு உங்களிடம் விடையிருந்தால் சொல்லுங்கள்...

இயற்கையைவிட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்ட நமது வாழ்க்கையைவிட, இயற்கையுடனேயே வாழ்ந்துகொண்டிருக்கும் விலங்குகளின் வாழ்க்கையைப்பார்த்து பொறாமைப் படுகிறவன் நான். கடவுள்கள் அற்ற, மதங்கள் அற்ற அவைகளின் வாழ்க்கை நமது வாழ்க்கையைவிட எந்த விதத்தில் குறைந்தது? என்னைக்கேட்டல் நமது வாழ்க்கைதான் குறைந்தது என்று சொல்வேன். அவைகளின் வாழ்க்கையிலும் சுகம், துக்கம், காமம், அன்பு, சண்டை எல்லாமேதான் இருக்கின்றன. அவற்றுக்குத் தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள ஒரு மதமோ, பயப்படுத்திக்கொள்ள ஒரு கடவுளோ ஏன் தேவைப்படவில்லை? நாம் கொண்ட ஆறாம் அறிவின் சாபமா இது?!

ஐந்தறிவு, ஆறறிவு என எத்தனை அறிவுகொண்டாலும், எந்த ஒரு உயிரியின் இருத்தலுக்கான அர்த்தமும் ஒன்றுதான் என நான் நினைக்கிறேன். இதில் வழிப்படுத்திக்கொள்கிறேன் என்று நாம்தான் வழியைவிட்டு விலகிச் சொன்றுவிட்டோம்!

இதைத்தான், 'ஆற்றில் நீந்தாதே, மித' என்கிறார் ஓஷோ. முயற்சிகள் நம்மை நமது இயல்பான பாதைகளில் இருந்து விலக்கிவிடுகின்றன என்கிறார். மதங்கள் நம்மை நீந்தச்சொல்கின்றன. மிதந்தாலே நாம் இயல்பாய் கடலைத்தான் அடைவோம். கடலை அடைகிறேன் என்று முற்படுகிற நமது நீச்சல்கள் எதிர்திசையில் பயணித்துவிடும் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்கிறார்.

ஓஷோவை முதன்முதலில் படித்தபோது, 'முயற்சி தேவையில்லையா...?! என்ன சொலிகிறார் இவர்?!!' என்று அரண்டுவிட்டேன். ஓஷோவை எனக்கு அறிமுகப்படுத்தியவரிடம் போய் 'என்னங்க உளர்றாறு இந்த ஆளு...' என்று சண்டையிட்டேன். 'இயல்பிலிருந்து அவ்வளவு தொலைவில் நம்மை கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். மீண்டும் அங்கேயே போகச்சொன்னால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். நான் சொன்னால் உனக்குப் புரியாது. திரும்பத் திரும்பப் படி. ஒருவேலை புரியலாம்...' என்று சொல்லிவிட்டார்.

பரீட்சைக்காக முயன்று படித்த பாடங்கள் அடுத்த ஆண்டிற்குள் மறந்துபோனதும், எப்போதோ படித்த பாலகுமாரன் நாவல்களின் கதைகள் பாத்திரங்களின் பெயர்களுடன் நினைவிலிருப்பதும் இந்தப் புரிதலை எனக்குத்தந்தன. இங்கு இரண்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு முயற்சி மட்டுமே. மதம் என்பது இறைமையை அடையும் ஒரு முயற்சி.

அனைத்து மதங்களைப் பற்றியும் ஓஷோ அலசியிருக்கிறார். மதங்களும், மத குருமார்களும் மனித குலத்திற்கு இழைக்கும் கொடுமைகளை நிறைய சொல்லியிருக்கிறார். வாய்ப்பு கிடைத்தால் ஓஷோ படியுங்கள். மதம் பற்றியதான உங்கள் கருத்துகள் மாறக்கூடும்.

இவை அனைத்தும் இதுவரை நான் அறிந்தவை கொடுத்த புரிதல்களே. நீங்கள் மதம் தேவை என்று சொன்னதற்கான காரணங்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மதங்கள் பற்றிய எனது பட்டறிவும், ஓஷோவின் புத்தகங்களும் சொல்வதே சரி என்று நான் உணர்கிறேன். இல்லை, அது தவறு என்று எனக்கு புரியவைக்கும் எந்த வாதத்தையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன்,

- அருள்.

Wednesday, May 24, 2006

வலைப்பதிவு ஆய்விற்காக...

மதுமிதா அவர்களின் வலைப்பதிவு ஆய்விற்காக...

வலைப்பதிவர் பெயர்: அருள்குமார்

வலைப்பூ பெயர்:
உணர்வின் பதிவுகள்
நான் பேச நினைப்பதெல்லாம்

சுட்டி(url) :
http://www.arul76.blogspot.com/
http://whatiwanttosayis.blogspot.com/

ஊர்: சென்னை

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: குழலி

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 06th may 2005

இது எத்தனையாவது பதிவு: 23

இப்பதிவின் சுட்டி(url): http://whatiwanttosayis.blogspot.com/2006/05/blog-post_24.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:
பகிர்தலில்/எழுத்தில் உள்ள ஆர்வம். முழுநேர பணியாக செய்ய இயலவில்லை. கல்லூரி காலங்களில் மாணவர்கள் இதழ் நடத்திக்கொண்டிருந்தோம். இப்போது அந்த ஆர்வத்திற்கு வலைபூவே வடிகால்.

சந்தித்த அனுபவங்கள்:
இவ்வளவு பேர் மற்ற துறையில் இருந்தும் எழுத்தில் இப்படி அசத்துகிறார்களே என்ற ஆச்சர்யம்தான் அடிக்கடி. சில நல்ல விவாதங்கள் தந்த புரிதல்கள்.

பெற்ற நண்பர்கள்:
தங்களுக்கென்று வலைப்பூ இல்லவிட்டலும், என் பதிவுகளைப் படித்து email மூலம் நட்பானவர்களையும் சேர்த்து நிரைய.

கற்றவை:
இன்னும் நிரைய கற்க வேண்டுமென்று.

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: இதுவரை எந்த கட்டுப்படுகளையும் உணரவில்லை.

இனி செய்ய நினைப்பவை:
வலைப்பதிவுகளை படிக்கவும் எழுதவும் இன்னும் அதிக நேரம் ஒதுக்கவேண்டும். நிறைய நிறைய நிறைய.. எழுதவேண்டும். எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு திரைக்கதையாவது எழுதவேண்டும்.

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
மென்பொருள் உருவாக்கும் தொழிலில் இருக்கிறேன். வேறென்ன... வாழ்வின் அந்தந்த நிமிடங்களை ரசிக்கிற ரசிகன். கோபம் முதற்கொண்டு எனது எல்லா உணர்வுகளையும் மதிக்கிறவன். எந்த பிரச்சனையிலும் எதிராளியின் சூழலில் என்னை வைத்து பார்க்கிறவன்.

இன்னும் நான் சொல்ல நினைக்கும் ஒன்று:
வாழ்க்கை ஒருமுறைதான். இன்னொரு பிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பினும், இந்த பிறவியின் எந்த தொடர்பும் அப்போது இருக்கப்போவதில்லை எனும்போது அது ஒரு தனிப்பிறவிதான். எனவே இப்போது கிடைத்திருக்கும் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து தீர்த்துவிடுங்கள்!

Thursday, May 11, 2006

விஜயகாந்த்: வெற்றியின் ரகசியம்

தமிழ் சசி அவர்களின் தேர்தல் 2006 ஆச்சரியங்கள்
என்ற பதிவிற்கு எழுதிய மறுமொழி:

விஜயகாந்த்தின் வெற்றிக்கு நீங்கள் சொல்லும் காரணங்களை விட சில முக்கியமாண காரணங்கள் இருக்கின்றன.

அந்த தொகுதியை சார்ந்தவன் என்கிற முறையில் நான் அறிந்தவை இவை. மற்றபடி எனக்கு அரசியலில் அ ஆ கூட தெரியாது!

1. முதல் முக்கிய காரணம்: பமக வேட்பாளர் கோவிந்தசாமி சென்ற முறை தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. குறைந்தபட்சம் மழையால் பெரும் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பார்வையிடக்கூட செல்லவில்லை. அந்த பகுதிகள் இவர் வசிக்குமிடத்திலிருந்து சொற்ப கி. மீ. தூரத்திலிருந்தும் இந்த நிலை!

2. கட்சியின் தலைவர் என்பதால், வாய்ப்பளித்தால் தன்னை நிலைநாட்டிக்கொள்ள கண்டிப்பாக உருப்படியாய் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை.(ஒரு புதிய மூன்றாம் அணி என்றெல்லாம் யோசிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கக்கூடும். மூன்றாவது அணி என்று மதிக்கிற அளவிற்கு அங்கு ஒன்றுமில்லை.)

3. விஜயகாந்த் வெற்றிபெற்றால், விருத்தாசலம் ஒரு VIP தொகுதி ஆகிவிடும் என்கிற ஆவல்.

4. அதிக பரிச்சயமில்லாத அதிமுக வேட்பாளர்.

Wednesday, May 03, 2006

திரை இயக்கம்

'திரை' என்றொரு மாத இதழ். 'உலக சினிமாவின் முகம்' என்கிற அடைமொழியோடு வந்துகொண்டிருக்கிறது. படிக்கும்போது அது உண்மைதான் என உணர முடிகிறது. இதுவறை வந்திருக்கிற சினிமா இதழ்கள் அனைத்தும், சினிமா இதழ்கள் மீது, நம்மில் உருவாக்கி வைத்திருக்கிற கற்பிதங்களை உடைக்கிறது இந்த இதழ். சினிமாவில் ஆர்வமுள்ளவர்களுக்கு கிடைத்தற்கறிய விஷயம் இது.

தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்திய மற்றும் உலக சினிமா அனைத்தயும் அலசுகிறார்கள். தலைசிறந்த கலைஞர்களின் கட்டுரைகள், பேட்டிகள், தமிழ் சினிமாக்கள் மீதான உண்மையான சினிமா விமர்சனம் என கலக்குகிறார்கள். சமீபத்தில் கதை, திரைக்கதை அமைப்பது பற்றி ஒரு நல்ல தொடர் கட்டுரை வந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர்: லீனாமணிமேகலை.
இதழின் விலை: Rs. 20.

இது விளம்பரம் அல்ல! மேற்காணூம் தகவல்கள், திரை இதழ் பற்றி அறியாதவர்களுக்காக. இந்த இடுக்கையின் நோக்கம்:

இவர்கள் 'திரை இயக்கம்' என்றொரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
"உலக சினிமாக்களையும், நல்ல குறும்படங்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்தும், அவற்றை காண இயலாத திரைப்பட ஆர்வலர்களுக்கு, அவற்றை காணக் களம் அமைக்கும் இயக்கமே திரை இயக்கம்" - என்கிறார்கள்.


இதில் உறுப்பினர் ஆவதற்கு 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து ஒவ்வொருவரும் 'திரை' இதழ் சந்தாதாரர் ஆகவேண்டும். (ஆண்டு சந்தா 200/=). நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இயக்கத்தில் சேர ஆர்வமுற்றிருக்கிறோம். ஆனாலும் 20 பேர் வேண்டுமே! சென்னையில் இருக்கும் உங்களில் யாருக்கேனும் இதில் ஆர்வமிருந்தால் எங்களுடன் சேர்ந்துகொள்ள அழைக்கிறோம். எங்களைப்போலவே இதில் ஆர்வமிருந்தும் 20 பேர் வேண்டுமே என காத்திருக்கும் குழுக்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நட்புடன்,
அருள்.

Thursday, April 27, 2006

கற்பு?!

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த கவிதை இது...

"ஸ்கூட்டர்களுக்காகவும்
பிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது"


- கவிஞர் ரோகிணி

படித்த நொடியில் ஏதேதோ பாதிப்புகளை ஏற்படுத்திய இக்கவிதை - தங்கர்பச்சான், குஷ்பு என அனைத்து கற்பு சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்கான பதில்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது! கற்பின் பயன்பாடு எவ்வளவு சுயநலமானது என்பதை இதவிட எளிமையாகவும், வலிமையாகவும் சொல்லமுடியும் எனத்தோன்றவில்லை. முகத்திலறையும் நிஜமும், மெல்லிதாய் இழையோடும் சோகமும் இக்கவிதையின் வெற்றி.

கவிஞர் ரோகிணி யாரெனத்தெரியவில்லை. அவரைப்பற்றியும், அவரின் பிற படைப்புகள் பற்றியும் காணக்கிடைத்தால் மகிழ்ச்சி. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.


Wednesday, March 29, 2006

ரகசிய சிக்னல்

மிழ்நாட்டு மக்களின்(என்னையும் சேர்த்துதான்!) அனுசரித்துப்போகும் மனோபாவம் மிக அலாதியானது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் கீழே இருக்கும் படம்.


(cell phone-ல் எடுத்த படம். எடுத்தபோது சூரியஒளி வேறு எதிர்ப்பக்கமிருந்து...! சரியாய் தெரியலன்னாலும் கொஞ்சம் adjust பண்ணி பாத்துப்பீங்கன்னு நம்பறேன்:) )

சென்னை 100 அடி சாலையில் MMDA நிறுத்தத்திலிருந்து வடபழனி செல்லும் வழியில், MMDA சிக்னலுக்கு அடுத்து வரும் சிக்னல் இது. பல மாதங்களாகவே இந்த சிக்னல், ஒரு மின்விளக்கு கம்பத்தின் பின் ஒளிந்துகொண்டு, நம்ம கிராமத்து காதலிகள் காதலன்களுக்கு கொடுக்கும் ரகசிய சிக்னல் போலத்தான் சிக்னல் கொடுத்துக்கொண்டிருக்கிறது!

சில கோணங்களில் 'நில், கவனி, செல்' இந்த மூன்றும் சுத்தமாக தெரிவதில்லை. seconds coundown-ல் கூட ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு இலக்கங்கள்தான் தெரியும். 110 வினாடிகள் இருக்கையில் 10 வினடிகள் தான் இருப்பதாய் அடித்து பிடித்துக்கொண்டு, முழு திறமையையும் பயன்படுத்தி வாகனங்கள் ஓட்டிச்செல்பவர்களை பார்க்கையில் வேடிக்கையாய் இருக்கும். நிரைய விபரீதங்கள் நிகழ வாய்ப்பிருந்தும் யாரும் அதை கண்டுகொள்வதாய் தெரியவில்லை. (தினசரி இரண்டு முறை அந்த சிக்னலை கடக்கும் என்னையும் சேர்த்துதான்!)

இதை யாரிடம் கேட்ப்பது? கேட்டால் நமக்கு என்ன பிரச்சனைகள் வரும்? அப்படியே கேட்டாலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா? இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நமது நேரத்தை வீணாக்குவதை விட இதை adjust பண்ணி போவது மிக எளிதாகத்தானே இருக்கிறது! இவ்வளவையும் தினசரி பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து காவல்துறை காவலருக்கு இல்லாத கடமை நமக்கென்ன வந்தது? - இந்த எண்ணம் தான் நம்ம specialty! இதையெல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்காமல்,
"மச்சி... அந்த சிக்னல பாரேன். நைசா ஒளிஞ்சிகிட்டு ரகசிய சிக்னல் கொடுக்குது..!" என்று ரசித்து சிரிக்கிற கலைரசனை உடையவர்கள் நாம்!

பல வருடங்களுக்கு பிறகு, சென்ற கோடையில், கனடாவிலிருந்து நம்ம ஊருக்கு வந்திருந்தார் என் நண்பனின் மாமா. அவர் கேட்ட சில கேள்விகளும், சொன்ன சில விஷயங்களும்:

"நம்ம ஊர்லதாம்ப்பா இப்படி எல்லா விஷயத்தையும் adjust பண்ணி போறோம். அத்தியாவசியமான தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து இதெல்லாமே தினசரி போராட்டமா இருந்தா எப்படிப்பா முன்னேற முடியும்? ரொம்ம்ம்ம்ப கஷ்டம்! கனடாவுலல்லாம் maintenence-க்காக power-cut பண்ணாகூட மூனு மாசத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க. இங்க என்னடான்னா ஒரு நாளைக்கு நாலஞ்சு தடவை power-cut பண்றாங்க. அதும் எந்த அறிவிப்பும் இல்லாம! இதெல்லாம் தாம்ப்பா ஒரு நாட்டோட முன்னேற்றத்தை தடுக்கிற விஷயங்கள். நீயே யோசிச்சு பாரு... தண்ணிக்காக ராத்திரி ஒரு மணிக்கும், ரெண்டு மணிக்கும் தூங்காம தண்ணி லாரிக்கு காத்திருந்து, அதையும் சண்ட போட்டு போராடி வாங்கறவன் அடுத்த நாள் office போயி(பஸ் பிடிச்சி போறது ஒரு தனி போராட்டம்!) அவன் வேலைய சரியா செய்யமுடியுமா? அப்புறம் productivity எப்படி இருக்கும்?! காலைல எழுந்து பைப் திறந்தா தண்ணி நம்ம வீட்டுக்குள்ள வரணும். இது நமக்கு நம்ம அரசாங்கம் தரவேண்டிய அடிப்படை வசதி. தரவேண்டியது அவங்க கடமை. அதுக்குதான வரி கட்டறோம்!"

தினசரி வாழ்வின் அத்தியாவசியங்களை குடிமக்களுக்கு வழங்குவது ஒரு அரசின் கடமை என்பதையே மறந்துவிட்டு, அரசு விதிக்கும் வரிகளையும் செலுத்தி, எல்லா பிரச்சனைகளையும் தாங்களே சமாலிக்கும் நம் மக்கள் - நமது அரசியல்வாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் தானே!

நாம் வாக்களித்து பதவியில் அமரச்செய்தவர்கள் நமக்கே செய்யும் அக்கிரமங்களையே கண்டுகொள்ளாமல் adjust பண்ணிக்கொள்கிற நமக்கு இந்த சிக்னல் பிரச்சனையெல்லாம் ஒரு விஷயமா என்றுதானே சிரிக்கிறீர்கள்.

அதுவும் சரிதான் :(

Sunday, January 08, 2006

"தீம்தரிகிட" - வாக்குப்பதிவு

சென்னை புத்தக கண்காட்சியில், "தீம்தரிகிட" stall-ல் தினம் ஒரு வாக்குப்பதிவு நடத்துகிறார்கள். அன்றைய தினம் கேட்கப்படும் கேள்விக்கு வாசகர்கள் அளித்த வாக்குகளின் முடிவினை அடுத்த நாள் வெளியிடுகிறார்கள். கேள்விக்கான விடைகளில் நமது தேர்வினை அங்கு வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டில் நமது பெயர் மற்றும் முகவரியுடன் எழுதி இடச்சொல்கிறார்கள்.

பாராட்டத்தகுந்த விஷயம் தான். ஆனால் ஒரு விஷயத்தை தவிர்த்திருந்திருக்கலாம். மூன்று பதில்களுக்கும் மூன்று பானைகளை வைத்திருக்கிறார்கள். நாம் 3வது பதிலை தேர்ந்தெடுத்தால் 3வது பானையில் போடவேண்டும். இதனால் நாம் என்ன பதிலை தேர்ந்தெடுத்தோம் என்பது அடுத்தவர்களுக்கு தெரிந்துவிடுகிறது. பலர் மற்றவர்களுக்காக தவறன பதிலை அளிக்கும் அல்லது பதிலளிப்பதை தவிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. எல்லா வாக்குகளையும் ஒரே பானையில் இடச்சொல்லியிருக்கலாம்.

நேற்று(08/01/06) கேட்கப்பட்டிருந்த கேள்வி:

திருமணத்திற்கு முன் உடலுறவு:
1) தவறு
2) சரி
3) அவரவர் விருப்பம்

இந்த கேள்விக்கு 3வது பதிலை எழுதி 3வது பானையில் போட்டுவிட்டு நிமிர்கையில், எனக்கு பக்கத்தில் எழுதிக்கொண்டிருந்த 40-45 வயது மதிக்கத்தக்க ஒருவர், முதல் பானையில் தன் வாக்குச்சீட்டை போட்டுவிட்டு, மிகக்கவலை தோய்ந்த ஒரு பார்வையில் என்னைப்பார்த்தார். என்னுடைய கருத்தும் அதை நான் எந்த தயக்கமுமின்றி வெளிப்படுத்திய விதமும் அவரை மிக கலவரப்படுத்தியது போலும். உண்மையில் அந்தப் பார்வை என்னை மிகவும் பாதித்தது. அவருக்கு பதின்ம வயதுகளில் மகனோ அல்லது மகளோ இருக்கலாம். அவர்களின் நினைவு வந்திருக்கலாம். என்னைப்பொருத்த வரை நான் தேர்ந்தெடுத்த பதிலில் எனக்கு எந்த வித குழப்பமுமில்லை. ஆனாலும் என் தந்தை அப்போது என்னுடன் இருந்திருந்தால், ஒன்று வாக்களிப்பை தவிர்த்திருப்பேன் அல்லது 3வது பதிலை எழுதி முதல் பானையில் போட்டிருப்பேன்!

நீங்கள் என்ன செய்திருப்பீர்கள் நண்பர்களே?!

இன்று யாராவது புத்தக கண்காட்சிக்கு சென்றுவந்தால் நேற்றைய கேள்விக்கான முடிவுகளை பார்த்துவந்து சொல்லுங்கள்.