Monday, November 20, 2006

புது ஆட்டம்

விஞர் ஆதவன் தீட்சண்யா குறித்த சரியான அறிமுகங்கள் எனக்கு இல்லாததால், புத்தக நிலையங்களில் பலமுறை இவரின் புத்தகங்களை ஆர்வமில்லாமல் ஒதுக்கிச் சென்றிருக்கிறேன். ஆனால், செல்வநாயகி அவர்களின் 'ரோடும் ரோடு சார்ந்ததும்...' என்ற பதிவில் சேமிக்கப்பட்டிருந்த ஆதவன் தீட்சண்யாவின் பேட்டி, அவரின் புத்தகங்களைத் தேடிப்படிக்க வைத்துவிட்டது.

சென்றமாதம் தி. நகர் சென்றிருந்தபோது new book lands-ல் இவரின் புத்தகங்களைத் தேடினேன். 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' இரண்டு கவிதைத் தொகுதிகளும் கிடைத்தன.

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வலியை, அதனால் எழுந்த அவர் எழுத்தின் தீவிரத்தை வேறு எப்படிச்சொல்வதைவிடவும், 'தந்துகி' தொகுப்பிலிருக்கும் அவரின் முன்னுரைய உங்களுக்கு படிக்கக்கொடுப்பதே சிறந்தது எனத்தோன்றியதால்...

"அடியில் ஒப்பமிட்டுள்ள ஆதவன் தீட்சண்யாவாகிய என்னால் பூரண சித்த சுவாதீனத்துடன் எழுதப்பட்ட கவிதைகளின் மூன்றாம் தொகுப்பிது.

எது கவிதை யார் கவிஞன் என்று சஞ்சாரம் பண்ணும் முடிவுகளெதுவும் என்னோடு கலந்தாலோசித்து எடுக்கப்படாததால் அதுபற்றிய யாதொரு நிபந்தனையும் நம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், முறையான தாக்கலோ தகவலோ இல்லாமல் இதன்பேரில் ஒருதலைப்பட்சமாய் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் செல்லாதவை என்றும் அறிவித்து ரத்து செய்யப்படுகிறது.

கவிதையின் சொல் பொருள் ஏதேனும் தம்மை புண்படுத்துவதாய் யாரேனும் கருதும்பட்சம் அதற்கு நான் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டேனென்றும், இதுகாறும் அவர் கைக்கொண்டு பரிபாலிக்கும் தீம்பான சிந்தனைகளுக்கும் காரியங்களுக்கும் பிராயசித்தமாக வியாகுலங் கொள்ளவும் அவமானப்படவும் முழுப் பொருத்தம் கொண்டவராகிறார் என்றும் வாசகரறிக.

எல்லாம் வல்ல தங்களின் கடவுள் பல கவிதைகளில் என்னிடம் சின்னப்பட்டு சேதாரமாகுதல் கண்டு பக்தர்கள் பதற வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உவப்பானவற்றிலிருந்து அல்லாமல் கசப்பானவற்றிலிருந்தே நான் எழுத நேர்ந்தது ஏனென்றும், கழுத்திலிருந்து கழற்றியெறிந்த எச்சில் கலயம் தலைமுறைகள் தாண்டி கனவிலும் கனப்பது குறித்தும், இன்னும் இப்படியாக எங்கள் இருவருக்குமிடையில் அனேக வியாஜ்ஜியங்களுண்டு. அதற்கு அவர் பொறுப்பு சொல்லிவிட்டு தன்னை விடுவித்துக் கொள்வதில் நமக்கு யாதொரு ஆட்சேபமுமில்லை.
"

இந்த முன்னுரை, பின்வரும் கவிதை மற்றும் அவரின் எழுத்துகள் அனைத்திலுமிருக்கும் திமிர் எனக்குப் பிடித்திருந்தது. வெறுமனே புலப்பிக் கொண்டிருக்காமல், காலங்காலமாய் தன்னைப் புறக்கணித்தவர்களை, 'நீயென்ன என்னைப் புறக்கணிப்பது. நான் புறக்கணிக்கிறேன் உன்னை' என்று எதிர்கொள்கிற விதம் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது. கவிதைகளின் வடிவம் பற்றி அவர் எங்கும் கவலைப் பட்டதாய்த் தெரியவில்லை. ஆனாலும் அந்தந்த கவிதைக்கு அவர் கொடுத்திருக்கும் வடிவங்கள் மிகப் பொருத்தமானவையாகவே இருக்கின்றன.

'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்' தொகுப்பின் பின்னட்டைக் கவிதை:

'என்னை கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச் சொல்லியல்ல
எடுத்துக் கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்'


'புது ஆட்டம்' கவிதையில் சலுகைகள் மற்றும் திறமைகள் பற்றி இவர் சொல்லும் விஷயம் சில புதிய கோணங்களில் சிந்திக்க வைக்கிறது.

'நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை'
- என்ற முடிவுடன் துவங்கும் இக்கவிதையில்,

'இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது'
- என்று தன் சமூகம் கொண்டிருக்கும் தகுதி மற்றும் திறமைகள் மீதான நம்பிக்கையுடன் புதிய ஆட்டத்திற்கு துணிச்சலுடன் அழைக்கிறார்.

பல இடங்களில் வன்மையான சொற்களைக் கையாண்டிருந்தாலும், அவர் தரப்பின் நியாயங்களை உணரும்பட்சத்தில் அவை ஒன்றுமேயில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அனேக கவிதைகள் மேற்சொன்ன விஷயம் பற்றியவையே என்றாலும், வேறுசில உணர்வுகளைச் சொல்லும் கவிதைகளும் இரு தொகுப்பிலுமே காணப்படுகின்றன.

மாதிரிக்கு ஒன்று:

'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'


இதனுடன் சேர்ந்த இன்னும் சில கவிதைகளுக்குமாக இவர் கொடுத்திருக்கும் தலைப்பு - 'ம்ணயமாரா'!

நன்றி: 'பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்', 'தந்துகி' - சந்தியா பதிப்பகம்.

24 comments:

மு.கார்த்திகேயன் said...

இந்த வார சிறந்த நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் அருல்குமார்!!

நாமக்கல் சிபி said...

என்னங்க இது பத்திரம் எழுதினா மாதிரி இருக்கு?

We The People said...

//
'நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை'

'இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது'//

இந்த ஆட்டத்துக்கு நான் வரல சாமியோ. இன்னொருக்கயா?? ஏற்கனவே நான் இன்னும் பூஜ்ஜியத்தில் தான் இருக்கேன். Jokes apart; அசத்தலான வரிகள். என்னமோ போங்க டேஸ்ட்டும் அநியாயத்துக்கு ஒரே மாதிரி இருக்கு :)

ரவி said...

என்னங்க நீங்க அந்த மாதிரி ஆளா ? அய்யோ சாமீ...

ஒவ்வொரு லைனையும் ரெண்டு முறை படிக்கனும் போல...

நான் வரலை இந்த ஆட்டைக்கு...

இது போன்ற புது(!@) கவிஜைன்னா எனக்கு அலர்ஜி...

ஒரு முறை படிச்சவுடன் மனதில் பட்டுன்னு ஒட்டிக்கற கவிதை இருந்தா போடுங்க சாமியோவ்...!!!!

ரவி said...

///என்னங்க இது பத்திரம் எழுதினா மாதிரி இருக்கு? ///

இந்த கமெண்டை ரசித்து சிரித்தேன்.

குழலி / Kuzhali said...

நல்லதொரு கவிஞன் மற்றும் போராளியை அறிமுகம் செய்ததற்கு நன்றி

அருள் குமார் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கார்த்திகேயன்.

//என்னங்க இது பத்திரம் எழுதினா மாதிரி இருக்கு? //

:)

//என்னமோ போங்க டேஸ்ட்டும் அநியாயத்துக்கு ஒரே மாதிரி இருக்கு :) //

மகிழ்ச்சி ஜெய்.

வாங்க ரவி...
//என்னங்க நீங்க அந்த மாதிரி ஆளா ? அய்யோ சாமீ...//
நான் எந்த மாதிரி ஆளும் இல்லங்க. இவர் கவிதைகள் படிச்சப்போ அவங்களோட வலி புரிஞ்சுது. அந்த வலிகளுக்கு காரணமா நாமளே சில சமயம் இருந்திருக்கோமேன்னு நினைச்சி கஷ்டப்பட்டிருக்கேன். அதான் இதை பகிர்ந்துக்களாமேன்னு...

//ஒவ்வொரு லைனையும் ரெண்டு முறை படிக்கனும் போல...//

ஹி ஹி... நானும் அப்படித்தான் படிச்சேன் :)

ரவி said...

// நானும் அப்படித்தான் படிச்சேன் :) ///

அது மேட்டரு...:)))

Anonymous said...

வரிகளின் கனம் தரும் வலி அதிகம். வெகு நாளாக அடக்கப்பட்ட வலியல்லவா?

அந்த வலிகளுக்கு காரணமா நாமளே சில சமயம் இருந்திருக்கோமேன்னு நினைச்சி கஷ்டப்பட்டிருக்கேன்.

என் நிலையும் அதுவே.

நாமக்கல் சிபி said...

//'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'
//

பெண்ணுரிமையைப் பற்றிய கிளாசிக்கல் பஞ்ச்!

Hariharan # 03985177737685368452 said...

இவ்வார நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் அருள் குமார்.

தந்துகி - என்பதன் பொருள் என்ன?

வாழ்வின் லட்சியம்(நெறியுடன்) வாழ்ந்து தீர்ப்பதே என்ற கருத்தோடு உடன்படுகிறேன்

அருள் குமார் said...

//என் நிலையும் அதுவே. //
பகிர்தலுக்கு நன்றி ஹரி.

//பெண்ணுரிமையைப் பற்றிய கிளாசிக்கல் பஞ்ச்! // ஆமாம் சிபி. இப்படி பல பஞ்ச் இருக்கு அந்த தொகுதிகள்ல :)

வாழ்த்துக்களுக்கு நன்றி ஹரிஹரன். தந்துகிக்கு பொருள் இந்த புத்தகம் வாங்கினப்போ எனக்கும் தெரியல. பின்னர் google ல தேடி கண்டுபிடிச்சேன்... :)

தந்துகி: நாடிநுட்பக்குழல்கள், மிக நுண்ணிய இரத்தக் குழாய்.

Unknown said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!!!

நல்ல படைப்பாளியை அறியத் தந்தமைக்கு நன்றி...

சன்னாசி said...

அருள்குமார்: ஆதவன் தீட்சண்யாவின் பிற படைப்புக்களை இணையத்தில் எனில் இங்கே படிக்கலாம்.

http://www.keetru.com/literature/aadhavan_index.html

rahini said...

மிகவும்
அருமையான தொகுப்பு
பாராட்டுக்கள்

பிரியா.

அருள் குமார் said...

வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பர்களே!

சன்னாசி, பயனுள்ள சுட்டியை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

அவரது 'புறத்திருந்து' கவிதைத் தொகுப்பும், சிறுகதைத் தொகுப்பும் எனக்குக் கிடைக்கவில்லை. அந்த படைப்புள் நீங்கள் அளித்த சுட்டியில் கிடைக்கும் என நம்புகிறேன்.

Mookku Sundar said...

அருள்,

உங்களை அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி.

- "சகமாயவரத்தான்"

அருள் குமார் said...

நன்றி சுந்தர் :)

செல்வநாயகி said...

நட்சத்திரமா அருள்? வாழ்த்துக்கள்!! ஆதவன் தீட்சண்யா போன்ற போராளிகளின் படைப்புக்களே அழகியல்சார்ந்த படைப்புக்களைவிடவும் இச்சமூகத்திற்குத் தேவை. அவரின் கவிதைகளை இங்கே பகிர்ந்தமைக்கு நன்றி.

///'அரண்மனையில் அந்தப்புரம்
அடர்வனத்தில் லட்சுமணக்கோடு
லங்காபுரிக்குள் அசோகவனம்
எங்கிருந்தாலென்ன
எல்லாமே சிறைதான் சீதைக்கு'///


நல்ல வரிகள்.

Chellamuthu Kuppusamy said...

அன்பின் அருள்,

கவிதை எல்லா நமக்கு அலர்ஜி. நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள் மட்டும். ஜமாய்...

இளங்கோ-டிசே said...

நல்லதொரு பார்வை. நன்றி.

அருள் குமார் said...

செல்வநாயகி, குப்புசாமி மற்றும் டிசே தமிழனுக்கு என் நன்றிகள்.

மஞ்சூர் ராசா said...

ஆதவனின் சில கவிதைகள் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் தொகுப்பு கிடைக்கவில்லை. வாங்கவேண்டும்.

பல கவிதைகளில் உண்மை சுடுகிறது.

நல்லதொரு பதிவு.

வாழ்த்துக்கள்.

அருள் குமார் said...

நன்றி மஞ்சூர் ராசா!

ஆதவனின் பிற படைப்புகள், நண்பர் சன்னாசி அளித்த இந்த சுட்டியில் இருக்கின்றன.