Tuesday, October 10, 2006

சப்ப மேட்டர்!

போன வாரம் அம்மா, தங்கச்சியெல்லாம் ஊருக்குப் போய்ட்டாங்க. ரெண்டு மூனு நாளா ஹோட்டல் சாப்பாடுதான். வழக்கம்போல ரெண்டே நாள்ல, சாப்பிட போறதுன்னாலே கடுப்பான வேலையாயிடுச்சி.

ஞாயித்துக்கெழம மதியானம் சாப்பிட கெளம்பிட்டு இருந்தப்ப, நம்ம வீரமணி வீட்டுக்கு வந்தான். அவனையும் கூட்டிகிட்டு சாப்பிட கெளம்பினா எங்கடா போறதுன்னு ஒரே குழப்பம். பக்கத்துல இருக்க எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டு அலுத்துப்போச்சி. யாராச்சும் தெரிஞ்சவங்க வீட்டுக்குப் போயி வீட்டு சாப்பாட்ட ஒரு வெட்டு வெட்டலாமான்னு கூட யோசிச்சோம். நம்ம வலையுலக நண்பர்கள் கூட ரெண்டுமூனுபேர் நம்ம ஏரியாக்கு பக்கத்துலயே இருக்காங்க. ஆனா ஒருத்தரும் ஒரு நாள் கூட வீட்டுக்கு சாப்பிட வாடான்னு கூப்டதே இல்ல!

திடீர்னு வீரமணி ஒரு ஐடியா குடுத்தான்.

'நாமளே சமச்சா என்ன?!'

'சமச்சி ரெம்ப நாளாச்சேடா... சரியா வருமா' ன்னு கேட்டேன்.

'நா அப்பப்போ சமச்சிட்டு தானே இருக்கேன். உனக்கு என்னவேணும்னு சொல்லு. செஞ்சிடலாம்...'-னு தைரியம் சொன்னான்.

சரி களத்துல எறங்கிடவேண்டியதுதான்னு முடிவுகட்டி, கத்திரிக்கா புளிக்கொழம்பு வெக்கலாம்ன்னு முடிவு பண்ணோம்!

புளிக்கொழப்புக்கு தேவையான எல்லாம் வீட்ல இருக்கான்னு பாத்தோம். காய்கறி தவற எல்லாமே இருந்திச்சி. ஒரு வாரம் சமையல் இல்லன்னா, வீணா போற ஐட்டமெல்லாம் மட்டும் எப்படி கரெக்ட்டா காலி பண்னிட்டு போறாங்கன்னு தெரியல. அம்மா கிட்ட டீட்டெய்லா கேட்டு ஒரு பதிவு போடணும்.(பதிவுக்கு மேட்டர் எங்கலாம் கிடைக்குது பாருங்க!) அப்புறம்... தொட்டுக்க சோத்து வத்தல் இருக்கு. பொறிச்சிக்கலாம். புளிக்கொழம்ப்புக்கு பெஸ்ட் காம்பினேஷன்னு நெனச்சப்பவே நாக்கு ஊற ஆரம்பிச்சிடுச்சி.

கத்திரிக்கா, சின்னவெங்காயம், தக்காளி, தயிர் மட்டும் போய் வங்கிட்டு வந்து வேலைய ஆரம்பிச்சோம். வீரமணி காயெல்லாம் கழுவி நறுக்க ஆரம்பிச்சான். நான் அரிசி களஞ்சி, குக்கர் வச்சேன். திடீர்னு ஒரு டவுட். எவ்ளோ தண்ணி வக்கிறது? ஒன்னுக்கு ரெண்டா இல்ல மூனான்னு. அம்மாக்கு போன்பண்ணி கேக்கலாம்னு போனேன். நாங்க சமயல் பண்றோம்னு சொல்லி அவங்கள அதிர்ச்சியாக்க வேணம்னும் ஒரு யோசனை.

'ரெண்டுதான் வப்பாங்க... சாதம் கொஞ்சம் கொழைவா வேணும்னா ரெண்டர தண்ணி சேத்துகிட்டு ஒரு விசில் அதிகமாக்கிக்கலாம்...'-னு வீரமணி சென்னான்.

அப்படியே ஆகட்டும்னு குக்கர மூடி வெயிட்ட போட்டாச்சி. நாளஞ்சு கத்திரிக்காவ பெரிசு பெரிசா நறுக்கி வச்சிகிட்டோம். அப்படியே ரெண்டு தக்காளியையும். பத்து பதினஞ்சி பூண்டு உரிச்சி வச்சிகிட்டோம். சின்னவெங்காயத்த அப்படியே முழுசு முழுசா உரிச்சி வச்சாச்சி. கையளவு புளி எடுத்து ஒரு கிண்ணத்து தண்ணில கரச்சு ஊறவச்சிட்டோம். இன்னொரு பர்னல பத்தவச்சி அதுல வானல போட்டோம். நெறைய எண்ண ஊத்தி கடுகு, உளுந்து போட்டு தாளிச்சோம். அப்புறம் அதுல பூண்டு, கருவேப்பிலய போட்டு லேசா வதக்கிட்டு, சின்ன வெங்காயத்த போட்டு நல்லா வதக்கினோம். சின்ன வெங்காயம் பொன்னிறமா வந்ததும் தக்காளி கத்திரிக்காவெல்லாம் போட்டு திரும்பவும் வதக்கினோம். அப்புறம் நாலஞ்சி (பெரிய)ஸ்பூன் சாம்பார் மொளகா பொடி, நாலு (சின்ன)ஸ்பூன் உப்பு போட்டு நல்லா கிண்டினோம். காயெல்லாம் நல்லா வெந்ததும், திக்கா புளி தண்ணிய புழிஞ்சி ஊத்தினோம்(புளி ஊத்தினப்புறம் காய் சீக்கிறமா வேகாது. அதனால மொதல்லயே நல்லா வேக வச்சிடணும்). அவ்ளோதான்... நல்லா கொதிக்கட்டும்னு விட்டுட்டு டீவி பாக்க வந்துட்டோம். நடுவுலயே குக்கர் நாலு விசில் வந்து அடுப்ப அணச்சாச்சி.

கொஞ்ச நேரத்துல நல்லா கொதிச்சி தண்ணி கொஞ்சம் வத்தினதும் கொழப்பு ரெடி. அவ்ளோதாங்க கத்திரிக்கா புளிக்கொழம்பு. சப்ப மேட்டர்! இதுக்கு இந்த பொம்பளைங்க என்னா ஜமுக்கு உட்றாங்க! கைபடாம யூஸ் பண்ணா ரெண்டு நாளைக்கு வச்சிருந்து சாப்பிடலாம்.

சூடான சாதம், புளிக்கொழம்பு, வத்தல் அப்புறம் தயிர் சாதம், ஊறுகா! சிம்பிளான ஆனா அருமையான சாப்பாடு அன்னிக்கி. சமைக்கிறப்ப இன்ட்ரஸ்ட்டாவும் சாப்பிடறப்போ வக்கனையாவும்தான் இருக்கு. ஆனா பாத்திரம் கழுவுறதுதான் செம கடுப்பா இருக்கு! கல்யாணம் ஆன, ஆகாத பேச்சிலர் மக்களே... நீங்களும் ஒருவாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க. மனசுவச்சா சமையல் சப்ப மேட்டர்தான்! ஏதாசும் டவுட்னா நம்மள கான்டாக்ட் பண்ணுங்க. உங்களுக்கு வேற என்னல்லாம் புடிக்கும்னு சொல்லுங்க. அடுத்தவாட்டி செஞ்சு பாத்து ரெசிப்பி போட்டுடலாம். ஓக்கேவா?!

ஒரு முக்கியமான பின்குறிப்பு: சமையல் செஞ்சப்ப ரெண்டுபேருமே ஒருவாட்டிகூட கைய சுட்டுக்கலங்க. அதெல்லாம் சினிமால மட்டும்தான் போலிருக்கு!